Saturday, May 1, 2010

தயக்கம்

(வல்லினம் இணைய இலக்கிய இதழில் வெளியான எனது சிறுகதை.இந்த சுட்டியிலும்  காணலாம்)


ஓயாமல் கேட்டு கொண்டிருந்த இரைச்சல் நின்று, நீர் மெல்ல மெல்ல சொட்டும் ஒலி கேட்ட உடன் கிருஷ்ணன் எழுந்து கொண்டான். மாலை பயிற்சி வகுப்பில் இருந்து திரும்புகையில் வாங்கி வந்திருந்த ரொட்டியை சுற்றியிருந்த காகிதம் காற்றில் மெல்ல பட படத்து கொண்டு இருந்தது. இருட்டிலேயே துழாவி கண்டுபிடிக்கும் அளவிற்கு மின்விளக்கின் சுவிட்ச் இந்த மூன்று நாட்களில் பழக்கத்திற்கு வந்து விட்டு இருந்தது.

“மே மாதம், கேரளாவுக்கா? அதுவும் அலுவலக செலவிலேவா, ம்ம்ம் ஜமாய்” என்று அந்த கரு நாக்கு பையன் அறிவு எப்போ சொன்னானோ, வந்த மூன்று நாட்களாய் திருவனந்தபுர நகரமே இரவு மழையால் மிதந்து கொண்டு இருக்கிறது. ஜன்னலுக்கு வெளியே எட்டி பார்க்க, மழை நன்றாக மட்டு பட்டிருந்தது.

எட்டு மணியை கடந்து வினாடி முள் வேகமாக ஓடி கொண்டு இருக்க, என்ன செய்வது என்று தெரியாத குழப்பத்தில் ஆழ்ந்திருந்தான். கடந்த மூன்று நாட்களாய் அவன் வைத்து கொண்டிருந்த அட்டவணை இன்று சற்று பிசகி விட்டு இருந்தது. ஐந்து மணிக்கு அலுவலகத்தில் பயிற்சி வகுப்பை முடித்து விட்டு, நாயர் கடையில் ஒரு தம்முடன் சாயா அருந்திவிட்டு (சொர்க்கம்) மான்சனுக்கு வர வர மழை வலுக்கும், மழையை சபித்து கொண்டே தெருமுனை பாக்கரியில் நான்கு ரொட்டி துண்டுகளை வாங்கி கொண்டு வந்துவிடுவான். தினம் பேச்சு கொடுத்து அந்த பாக்கரி முதலாளி கூட நல்ல பழக்கம் ஆகி இருந்தார். வந்த உடன் தூங்கி விட்டு, பத்து மணிக்கு மெல்ல எழுந்து ஜாமுடன் அந்த ரொட்டி துண்டுகளை விழுங்கி விட்டு பால்கனிக்கு போனால், மழை இப்போதுதான் கொட்ட தொடங்கியது போல கொட்டி கொண்டு இருக்கும். வாங்கி வந்திருந்த தம்மை ஆசை தீர இழுத்துவிட்டு வந்து படுத்து விடுவான்.

தினம் சபித்ததனாலோ என்னவோ இன்று எட்டு மணிக்கே எழ வேண்டியதாயிற்று. அவன் கண் முன்னால் பிரமாண்டமாய் விரிந்திருந்த இரவு சற்று அச்சமூட்ட தொடங்கியது. இடையில் களைந்து விட்டதனால் மீண்டும் தூங்கவும் வழி இல்லை. சடாரென கட்டிலில் இருந்து எழுந்து கைலியை நின்ற படியே கழட்டி விட்டு அடுத்த ஐந்து நிமிடத்தில் வெளிய செல்ல ஆயத்தமானான். மனிதர்களுடன் சகஜமாக பேசியே மூன்று நாட்கள் ஆகிறது. பயிற்சி வகுப்பிற்கு கூட வரும் அத்தனை பெரும் மலையாளிகள், அவர்கள் என்னமோ சகஜமாக பேச வருவது போலதான் உள்ளது. ஆனால், அவனுக்கு இந்த இடமும் ஊரும் மனதில் ஒட்டவில்லை. வாசலில் நின்றிருந்த விடுதி காப்பாளன் மெல்ல ஒரு புன்னகையை உதிர்த்தான்.

அவனையும் அந்த சாலகுழி தெருவின் அத்தனை குப்பைகளையும் அள்ளி சேர்த்து ஓடி கொண்டு இருந்த மழை நீரையும் பட்டும் படாமலும் கடந்து சாலையின் எதிர் புறம் அடைந்தான். இன்று இரவு உணவுக்கு அந்த காய்ந்து போன ரொட்டியை தின்ன வேண்டியதில்லை என நினைத்து கொண்டே பாக்கரியை நெருங்கி விட்டு இருந்தான். அந்த கடையும், அந்த முதாலளியையும் பார்த்து ஏனோ ஆத்திரமாக வந்தது, பழைய ரொட்டியை விக்கிறார்கள், இரவு பத்து மணிக்குள் "வரட்டி" போல ஆகிவிடுகிறது என எண்ணி கொள்ளவும், கடைக்காரர் "என்ன சாரே ஊனு கழிக்கவோ?" எனவும் சரியாக இருந்தது. ஹி ஹி ஆமாம் என சொல்லிவிட்டு, ச்சே அந்த கடைக்காரர் நல்லவர் தான், நாம் ஏன் திடீர் திடீர் என்று இப்படி கோவபடுகிறோம் என தலையில் தட்டி கொண்டான்.

தனியாக இப்படி சென்று, கடையில் காசு கொடுத்து சாப்பிட போகிறோம் என்ற உணர்வே அவனுக்கு சற்று உற்சாகம் தருவதாக இருந்தது. ஊரில் என்றால் அம்மா எப்படியும் சோறு கட்டி கொடுத்து விடுவாள், அதுவும் இல்லாமல் ஒரு பி.எஸ்.என்.எல் அலுவலக குமாஸ்தா ஓட்டலில் சென்று சாப்பிடுதல் தகாது. ஆனால் இப்போது அப்படி இல்லை, அலுவலகம் சேர்ந்த மூன்று மாதத்தில் பயிற்சி வகுப்பிற்கு சிபரசு செயப்படும் அளவிற்கு வளர்ந்தாகிவிட்டது, அதன் காரணமாய், நாள் ஒன்றுக்கு பேட்டவாக சுளையாக 140 ரூபாய். தனியாக இப்படி வீட்டை விட்டு வருவதும் நல்லதுதான் போல.

திருநெல்வேலி "அமுதா உணவகம்" என்ற பெயரை பார்த்து ஓட்டலுக்குள் சென்றான். சொகுசாக கை கழுவி கொண்டு வந்து, வைக்கப்பட்ட சுடுதண்ணியை மெல்ல உருஞ்சியவாறே விலையை பார்த்தான்.

"ஏன்னா சார் சாப்ட்றீங்க" என்ற சர்வரிடம், ஒரு நெய் தோசை என சொல்ல வாய் எடுத்தவன் ஒரு நொடி தயங்கி, இல்லை நண்பருக்காக காத்துட்டு இருக்கேன் என்றான். வைட்டார் சந்தேகத்துடன் பார்த்து விட்டு செல்ல, சிகரட் பத்த வைப்பது போல் வெளியே வந்து, அந்த சர்வர் பின்னால் தொடர்ந்து வருவது போலவே கற்பனை செய்து கொண்டு வெகு தூரம் வந்து விட்டிருந்தான்.

ராத்திரி கொள்ளையா இருக்கு, ஒரு தோசைக்கு 38 ரூபாயா. இதுக்கு பத்து ரூபாய்க்கு ஒரு முழு சாப்பாடே சாப்பிடலாமே என திருவனத்தபுரம் மருத்துவ கல்லூரியை ஒட்டி, அவன் பயிற்சி வகுப்பு நடக்கும் இடத்தில் இருந்த உணவு விடுதிக்கு சென்றான். பத்து ரூபாய்க்கு ஒரு முட்டை கறியும், முழு சாப்பாடும் சாப்பிட்டு விட்டு வந்தான். மணி ஒன்பதுதான் ஆகி இருந்தது, இன்னும் தூங்குவதற்கு எப்படியும் இரண்டு மணி நேரம் ஆகும். அதுவரை நேரம் கழிக்க சிமன்ட் பெஞ்சில் அமர்ந்தான்.

மருத்துவமனையை ஒட்டிய இடம் என்பதால் மிக அமைதியாக இருந்தது. சிமின்ட் பெஞ்சை ஒட்டி நின்ற மரத்தின் இலைகள் ஊடே நிலவொளி வழிந்துகொண்டு இருந்தது. இலைகளின் அசைவுகளுக்கு ஏற்ப சாலையில் மாறி மாறி வரும் ஒளி சித்திரங்களை பார்த்தபடி அமர்ந்திருந்தான். “தம்பி தமிழா?” என பக்கத்துக்கு பெஞ்சில் இருந்து குரல் வந்தது. சற்று தடிமனான கண்ணாடியும், வெள்ளை வேட்டி சட்டையும் அணிந்து, நான் இந்த கட்சியோட மாவட்ட தலைவர் என்று சொன்னால் நம்பக்கூடிய அளவில் இருந்த அந்த மனிதர்தான் அப்படி கேட்டார்..

மெல்ல சிரித்து, "சார் தமிழா" என்றான்.

"இல்லை, நான் கன்யாகுமரியில ஆறு வருடம் வொர்க் செய்துட்டு உண்டு" என்றார். அந்த வொர்க்கை அவர் சொன்ன விதமே, அவர் தமிழ் இல்லை என அவனுக்கு புரிந்து
விட்டது.

"தம்பி மெடிக்கல் காலேஜா?"

"இல்லை சார், நான் இங்க அலுவலக பயிற்சி வகுப்புக்கு வந்திருக்கேன். இப்போதான் சேர்ந்தேன் மூணு மாசம் ஆச்சு, அப்பா வேலை எனக்கு வந்துடுச்சு அவர் இறந்துடதால" என்றான்.

"அது சரி, அதுதானே தம்பி ரொம்ப சின்ன பையனால இருக்கீங்க. இங்க எவட தாமசம்?"

லாட்ஜில் என்றான். சிகரட் என எழுந்து வந்து என் முன்னால் சிகரட் பெட்டியை நீட்டினார். இல்லை சார் வேண்டாம் பழக்கம் இல்லை என்றான்.

"உதடு கறுத்து இருக்கு, பழக்கம் இல்லைன்றீங்க?"

ஒரு அசட்டு சிரிப்பை வரவழைக்க முயல அதற்குள் அவர் மெல்ல அருகில் அமர்ந்து, அவன் தொடை மேல் கையை வைத்து, "தாழோட்ட வருதா" என்றார்.

அவன் உடம்பெல்லாம் சூடாக, ஒரு வித உதறலுடன் அவரை பார்க்க, அவர் உதடை குவித்து ஒரு செய்கை செய்து, "ம்ம்ம் வருதா?" என்றார்.

ஒரே ஒரு நிமிடம் தயங்கி, அவர் முகத்தை பார்த்து, கையைத் தூர தள்ளிவிட்டு திரும்பி பார்க்காமல் விறு விறுவென விடுதியை நோக்கி நடக்கத் துவங்கினான்.



முந்தைய சிறுகதைகள்  1 | 2 | 3 | 4 | 5 |

Wednesday, April 14, 2010

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ?



கண் பார்வையற்றவர்கள் உலகை கற்பனை செய்வது சற்று கடினமானது. நாம் சர்வ சாதரணமாக கடந்து விட கூடிய சாலை, பழக்கத்தினால் குதித்து குதித்து இறங்கும் படிக்கட்டுகள் அவர்கள் உலகில் மிகுந்த முக்கியத்துவம் கொள்கின்றன. அவர்கள் கையில் துணைக்கு இருக்கும் குச்சி அவர்களின் விரல்கள் எனவே மாறிவிட்டு இருக்கின்றது. அந்த குச்சிகளை தட்டி கொண்டு அவர்கள் நடக்கும் போது கீழே விழுந்த எதையோ தன் விரல்களால்  தேடுபவர்கள் போலவே தெரிகின்றனர். நாம் பார்வையால் தவற விட்டு கொண்டே இருப்பவற்றை அவர்கள் நுண்ணர்வால் உணர்ந்து கொண்டே இருக்கின்றனர்.


நம்மை போல கண்ணாடி முன் நின்று நமது வெவ்வேறு முக அசைவுகளை அவர்கள் குறிப்பு எடுத்து கொள்வதில்லை. கோபமோ வெறுப்போ அழுகையோ வருகையில் நம் மனம் எப்படி கோணலாகுமோ அப்படியே அவர்களின் முகங்களில் பிரதிபலிக்கிறது. நமது திரைப்படங்களில் அவர்கள் மேல் உருவாக்கப்படும் "அச்ச்சோ பாவம்" வகையறா போலி மனிதாபிமான உணர்சிகளை தூண்டும் காட்சிகளை மீறி அவர்களின் அகத்தை பதிவு செய்ய முயற்சித்த படங்கள் ஏதும் இல்லை என்றே நினைக்கிறன். அதே போல குழந்தைகளின் உலகை பதிவு செய்த படங்களும் தமிழில் அரிது, சுஜாதாவின் நாவல் ஒன்று "நிலாக்காலம்" என்ற பெயரில் படமானது என நினைக்கிறேன். நான் பார்த்த வரையில் தமிழில் குழந்தைகள் உலகை நெருக்கமாக காட்டிய படங்களில் அது குறிப்பிடத்தக்கது. சத்யஜித் ரேவின் "பதேர் பாஞ்சாலி" அந்த வரிசையில் தலை சிறந்த படங்களில் ஒன்றாக சொல்லலாம். அகிரா குராசோவாவின் "மடாடாய" நான் இன்னும் பார்க்கவில்லை.


உலக அரங்கில் குழந்தைகள் உலகை தெளிவாக படம் பிடித்து காட்டியவர் மஜீத் மஜீதி. அவரது "The Color Of Paradise (சொர்கத்தின் வண்ணம்)" என்னும் திரைப்படம், பார்வை இழந்த சிறுவனின் அக உலகை மிக நெருக்கத்தில் பதிவு செய்த திரைப்படம். பார்வையற்றவர்களை நாம் தான் கவனித்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே அவர்களை பாரமாக உணர செய்துவிடுகிறது. பெரும்பாலான உடல் நலம் குன்றியவர்கள் அந்த குறைபாடுகளுக்காக அவர்கள் மேல் மற்றவர்கள் பாச்சதாபம் கொள்ள வேண்டும் என எதிர் பார்ப்பதில்லை. முகமது என்னும் பார்வை இழந்த சிறுவனின் ஏக்கங்களையும், அவனது தேடலையும் மிக நெருக்கமாக படம் பிடித்த படம் சொர்கத்தின் வண்ணங்கள்.




முகமது பார்வையற்றோர் பள்ளியில் படிக்கின்றான், கோடை விடுமுறைக்கு அந்த பள்ளியில் உள்ள அனைவரையும் அழைத்து செல்ல அவர்களது பெற்றோர்கள் வருகின்றனர். முகமது தன் தந்தைக்காக காதிருத்தலில் தொடங்குகிறது இந்த திரைப்படம். தந்தைக்காக காத்திருக்கும் நேரத்தில் கூட்டில் இருந்த கீழே விழுந்த ஒரு பறவையை மீண்டும் கூடு சேர்க்கும் காட்சி கவிதை

.
தந்தையுடன் தனது கிராமத்திற்கு சென்றவுடன் தனது சகோதரிகள் மற்றும் பாட்டியை காண வயலுக்கு செல்கிறான். நகரத்தில் இருந்து வரும் அவன் அங்கு கிடைக்கும் சிறு சிறு பொருட்களை பத்திரமாக சேகரித்து அவர்களுக்காக எடுத்து வருகிறான். உடைந்த கிளிப்புகள், ஸ்டிக்கர் என. மிகுந்த உற்சாகத்தோடு அவர்களோடு விளையாடுகிறான். அவர்களுடன் பள்ளிக்கு சென்று அவர்களுடைய பாடத்தை அழகாக ஒப்பிக்கிறான், தான் படிக்கும் பாடமும் அது தான் என தனது ப்ரைலி எழுத்துருக்களை அவர்களது ஆசிரயருக்கு சொல்கிறான்.





முதல் மனைவியை இழந்து, தன் பிள்ளைகளை வளர்க்கும் முகமதுவின் அப்பா, வீட்டில் இவன் இருந்தால் அது தனது இரண்டாம் கல்யாணத்திற்கு தடையாக இருக்க கூடும் என ஒரு பார்வையற்ற தச்சரிடம் முகமதுவை விட்டுவிடுகிறார். படத்தின் முதல் காட்சியில் இருந்தே, அவனது தந்தையின் செயல்கள் யாவும் அவனை தன் குடும்பத்தை விட்டு விலக்கி வைப்பதிலேயே இருக்கிறது. காட்டில் அவன் எங்கேனும் தொலைந்து போய் விட மாட்டானா என்னும் அளவு அவருள் ஒரு வன்மம் குடி கொள்கிறது. அதே சமயம், அவன் வளர்ந்தால் அவனை அவன் பார்த்த கொள்ள வேண்டாமா என சமாதானம் சொல்லி அவனை வீட்டில் இருந்து பிரித்து விடுகிறார்.  




படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டு, விடுமுறைக்கு சகோதிரிகளுடனும் பாட்டியுடனும் சந்தோஷமாய் நேரம் கழிக்கும் முகமது எந்த நிலையில் தனது குறையை பற்றி பெரிதும் கவனம் கொள்ளவில்லை. படத்தின் ஆரம்ப காட்சி முதலே அவனது விரல்கள் எதையோ துழாவிய வண்ணமா உள்ளது, சோலையில் வளர்ந்திருக்கும் பூக்களில், தன் சகோதிரிகளின் சிரிப்பில், பாட்டியின் முக சுருக்கங்களில் என. அவனை காண்கையில் எல்லாம் அவனது தந்தையின் முகத்தில் தோன்றும் வெறுப்பை அவன் பார்க்க முடியாததனால் தானோ என்னவோ அவனை சுற்றி உள்ள அனைவரையும் அவன் நேசித்த வண்ணம் இருக்கிறான்.




அவனது தந்தை தச்சரிடம் அவனை விட்டு சென்ற உடன் அவன் தனிமையில் அழுது கொண்டு இருக்க, அவனை போலவே பார்வை இழந்த அவர் அவனிடம்  ன் என கேட்கிறார். முதன் முதலில் அவனுக்கு மனிதர்கள் மேல் நம்பிக்கை இழந்து வார்த்தைகள் வந்து விழுகின்றது. "தன் தந்தை, பாட்டி என யாரும் என்னை நேசிக்கவில்லைஎன்கிறான்.




அவர் அவனை சமாதான படுத்த முயல, “கண்பார்வை அற்றவர்களுடன் தான் கடவுள் மிகுந்த நெருக்கமாக இருப்பார் என என் ஆசிரியர் சொன்னார். நான் அவரிடம் கேட்டேன், அப்படி என்றால் அவர் நம்மை கண்களோடு படைத்திருந்தால் அவரை பார்த்து இருக்கலாம் தானே என. அதற்கு அவர் கடவுளை  
உணரத்தான் முடியும் என  சொன்னதால் தான், நான் விரல்களால் அவரை தேடி கொண்டு இருக்கிறேன்" என்கிறான். அந்த தச்சர், "உன் ஆசிரியர் சொன்னது சரிதான்" என சொல்லி செல்கிறார். படத்தின் நேர்த்தியான காட்சிகளில் ஒன்று இது. கச்சிதமான சொற்றொடர்கள் மூலம் ஆழ்ந்த வலி உருவாக்கும் இடம்


அதன் பின் அவனது தந்தையும் மன மாற்றத்தை பதிவு செய்த இடமும், வசீகரமான ஒரு மரமதுடன் முடிக்கப்பட்ட அந்த இறுதி காட்சியும் கவித்துவமானவை. எந்த விதமான போலி மனிதநேயத்தையும் தூண்டாமால் நேர்த்தியாக எடுக்கப்பட்ட இத்திரைப்படம் பல விருதுகளை வென்றது.




வருகிற ஏப்ரல் பதினேழாம் நாள், இயக்குனர் மஜீத் மஜீதி அவர்களின் பிறந்த தினம். முழு திரைப்படமும் Youtube ல் சிறு சிறு பாகங்களாய் உள்ளது (ஆங்கில Subtitleகள் உடன்).

Part 1 |  Part 2 |  Part 3  |  Part 4 |   Part 5  |  Part 6  | Part 7  |  Part 8  | Part 9