Thursday, July 9, 2009

தண்ணீர் விழுதுகள்

சீர் இடம் காணின் எறிதற்குப் பட்டடை

நேரா நிரந்தவர் நட்பு

அதிகாரம்: 83, கூடா நட்பு

குறள்: 821


காற்று அந்த புங்கை மரத்தின் தலைக்குள் கையை விட்டு எதையோ ஆரவாரமாய் தேடிகொண்டிருந்தது. தலையின் அசைப்புக்கு ஏற்றவாறு விழுந்து கொண்டிருந்த இலைகள் கல்லூரியையும் விடுதியையும் இணைக்கும் சாலையை மெல்ல மூடி கொண்டு இருந்தது. அந்த நீண்ட சாலையில் நானும் அவளும் மட்டும் நடந்து கொண்டிருந்தோம். நானும் அவளும் என்றால் ஒன்றாக இல்லை, ஒரு பத்து மீட்டர் இடைவெளி விட்டு. காற்றின் வேகம் அந்த இடைவெளியை குறைத்த வண்ணம் இருந்தது. நெஞ்ஜோடு அணைத்து கொண்டிருந்த அவளது புத்தகங்களின் ஒன்று கீழே விழுந்து என் கால் தடுக்கியது, பக்கங்களும், இமையும் ஒரு சேர அடித்து கொள்ள என்னை பார்த்தாள். அந்த கண்களின் மருட்சி அவளும் என்னைப் போல முதலாமாண்டு தான் என்றது. ஆனால் என் முகத்தின் மீசை அவளுக்கு அந்த நம்பிக்கையை அளிக்க வில்லை போலும். சாரி, தேங்க்ஸ் என ஏதோ சொல்லிவிட்டு ஒரு அவசர கணத்தில் மறைந்து போனாள்.

மறுநாள் அவளும் நானும் ஒரே வகுப்பில் தான் அமர்ந்திருந்தோம். நேற்றைய நிகழ்ச்சி எங்களுக்குள் பரஸ்பரம் எந்த சிநேகத்தையும் விதைத்து விடவில்லை. எனது சராசரி சிறுநகரத்து பின்னணியை மறந்து சகஜமாக நான் பழக ஆரமித்த ஒரு வாரத்திற்கு பின், காற்றின் அழுத்தத்தை பதிவு செய்யும் செய்முறை வகுப்பில் தான் அவள் என்னிடம் பேச துவங்கினாள். செய்முறை வகுப்பின் நான்கு பேர் கொண்ட குழுவில் மற்ற மூவரும் பெண்கள் . பெண்களிடம் பேசுவதோ, இல்லை பேசாமல் இருப்பதோ பற்றி எந்த வித முன் வரையறைகளும் இல்லாமல் இருந்த என்னிடம் இந்த கல்லூரி வாசம் ஏற்படுத்தியிருந்த ஓர் அனாவசிய கூச்சத்தை தொட்டு காட்டியபடி

நீ ஏன் அதிகம் பேசவே மாட்டேன்ற? என்றாள்.

“ச்சே ச்சே அப்படி எல்லாம் இல்லை, ஹாஸ்டல எல்லாம் நல்லாத்தான் பேசுவேன்”

அப்ப எங்ககிட்ட எல்லாம் பேச மாட்டயா?

அப்படி இல்லை, இங்க வாய்ப்பு கம்மி இல்ல. இப்போதான் பிராக்ட்டிக்கல் க்ளாஸ் வர ஆரமிச்சி இருக்கு. இனிதான் பழக முடியும் அததான் சொல்றேன்.

அதற்குள் ஆவலுடன் மற்ற இருவர் சேர்ந்து விட்டனர்.

“இல்ல நம்ம க்ளாஸ் பசங்க பேசறதே இல்லை” என்றனர்.

“சரி நான் பசங்ககிட்ட சொல்றேன்” என்றேன்.

ஆனால் நான் விடுதியில் இதைப் பற்றி விவாதிக்க வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. என் நண்பன் ஒருவன் “க்ரிஸ்” விளையாடலாம் என்றான். வகுப்பில் எல்லாருடைய பெயர்களையும் சீட்டுகளில் எழுதி போட்டு அவர் அவர் ஒரு சீட் எடுக்க வேண்டும். அதில் யார் பெயர் உள்ளதோ அவர்களை ஏதேனும் செய்ய சொல்லி மறைமுகமாய் சொல்ல வேண்டும். ஒரு வார காலம் நடக்கும் இந்த போட்டி முடிந்த உடன், அந்த க்ரிஸ் தோழனுக்கோ தோழிக்கோ ஏதேனும் பரிசு குடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப் பட்டது.

எனது பெயர் என் நண்பன் அருணிடமும் அவளது பெயர் என்னிடமும் வந்தது.

“டேய் உனக்கு போய் நான் என்னடா அனுப்ப, அதான் அமுதா பேர் உனக்கு வந்து இருக்கு இல்ல, அவளுக்கு அனுப்புவோம் “

என அவளுக்கு நான் அனுப்புவது போல் ஒரு குறிப்பை அருண் அனுப்பி விட்டான்.

மறு நாள் அவள் வகுப்பின் முன் வந்து, “வகுப்பில் யார் அழகானவர்களோ அவர்களிடம் வந்து டைம் கேட்க வேண்டும்” என எழுதி இருப்பதை சொல்லி விட்டு சங்கோஜமாக நின்றாள். அரை மணி நேரம் கண்ணாடி முன் நின்று, Fair and Lovely போட்டு கொண்டு இருப்பதிலேயே புதிய சட்டையை அணிந்து கொண்டு வந்த அருணின் இருப்பு இப்போது சற்று ஞாயப்படுத்தப்பட்டதாக தோன்றியது. ஒருத்தரை விட்டுட்டு ஒருத்தரை எப்படி சொல்றது, எல்லார் கிட்டயும் கேட்டதாக வச்சுகங்க என சொல்லி சென்று விட்டாள். மரியாதை நிமித்தமாக அவளுக்கு பரிசு கொடுக்கும் பொறுப்பை மட்டும் எனக்கு வழங்கினான் அருண். ஒரு புத்தகம் வாங்கி பரிசளித்து விட்டு, அந்த குறிப்பை நான் எழுதலை என்றேன். தெரியும் என என்னை புரிந்த கொண்ட புன்னகை ஒன்றை உதிர்த்தாள்.

பேசி கொண்டே இருப்பது எனது இயல்பு அல்ல. ஆனால் அதன் பின் ஏற்பட்ட சிற்சில சந்தர்ப்பங்களில் நான் தான் பேச துவங்கினேன். ஒரு சின்ன அசைவு மூலமோ, இல்லை மெல்லிய சீண்டல் மூலமோ, ஒரு குழந்தைத்தனம் கொஞ்சும் சிரிப்பு மூலமோ ஈர்க்கப்பட்டு அவளிடம் பேச துவங்கிவிடுவேன். வெறும் வார்த்தைகளை ஒன்று சேர்த்து. தேவைகேற்ப வாக்கியங்களை அமைத்து, பேசவேண்டுமே என்ற உந்துதலால் மட்டுமே பேசப்படும் பேச்சு. மெல்ல மெல்ல எந்த விதமான விஷயங்களுக்கு ஆதரவு கிடைக்கிறதோ, அதே விஷயங்களை வேறு வேறு வாக்கியங்கள் கொண்டு பேசினேன். பேச ஆரமித்த பின் அவள் கேட்பவளாக மட்டும் தான் இருந்தாள். நான் ஹைக்கூவைப் பற்றி பேசியது, பாஷோவை பற்றி பேசியது என அனைத்தையும் புதுமையாக கேட்டு கொண்டிருந்தாள்.

நான் அதிர்ந்து பேசும் விஷயங்களுக்கு, அவள் எப்போதும் மென்மையான பதில்களையே கொண்டிருந்தாள். தொடர்ந்த அவளது மென்மையான பதில்கள் ஒருவகையில் எரிச்சலைத் தந்தது, ஆனால் மீண்டும் அவளை நோக்கி வர அதுவே காரணமானது. பல சமயம் அவளிடம் பேசுகையில் அவளது செயல்கள் என்னை ஓர் கேலி சித்திரமாகவே உணர செய்தது. முக்கியமாக இது எல்லாம் ஒரு விஷயமா என்பது போல் அவள் பார்க்கும் பார்வை. ஆனால் அதை உணர்ந்து கொள்வதற்குள் என் பேச்சு வேறு பக்கம் திசை திரும்பி இருக்கும்.

மீண்டும் மீண்டும் அவளிடம் பேசுவதை தவிர்க்கவே முயன்றேன். மற்ற எல்லா சமயங்களிலும் அவளை புறக்கணிப்பது அவ்வளவு சிரமமாக இல்லை செய்முறை வகுப்புகளை தவிர. மூன்று மணி நேரம் ஒரே இடத்தில் நின்று கொண்டு, ரீடிங் எடுத்து விட்டு வெட்டியாய் நிற்கும் பொழுதுகளில் பேசியே ஆக வேண்டிய கட்டாயம். நான் பேசாமல் இருந்த நாட்களில் அவளே கேட்பாள்,

“நீ ஏன் ஒரு மாதிரியா இருக்கே ?

ஒன்னும் இல்ல,

அன்னைக்கு இன்டெர்னல் பேப்பர் கொடுத்ததில இருந்தே நீ இப்படி தான் இருக்க!

இப்போது எனக்கு காரணம் கிடைத்துவிட்டது, அது பரவா இல்ல, நான் நல்லாத்தான் பண்ணேன் என்று அவளிடம் சால்ஜாப்பு சொல்லிகொள்ளலாம். அப்போதைக்கு அவள் மேல் இருந்த கோவம் வேறு பக்கம் திசை திருப்ப பட்டிருக்கும். நன்றாக படிக்க முயற்சி செய்து, ஆனால் சரியாக அது கை கூடாமல் மனம் வருந்தி நிற்பவனாக காட்டி கொள்வது சூழ்நிலையை சாதாரணமாக்கும். மீண்டும் அதே பேச்சு, தலை அசைப்பு வெற்று வார்த்தைகள். அவளிடம் பேசி கொண்டு இருக்கையில் ஏதோ ஓர் கணம் மீண்டும் என்னை கேலி சித்திரமாக உணர தொடங்கி விடுகிறேன். முக்கியமாக நான் அந்தரங்கமாக மதிக்கும் சில விஷயங்களை அவளிடம் சொல்லத் தொடங்குகையில்.

அதற்கு காரணம், சிரத்தை இல்லாமல் கவனிப்பது போன்ற முகபாவனையாக இருக்கலாம். இல்லை அவளிடம் இருந்து ஏதேனும் அந்தரங்கமான அல்லது அவளது மனதுக்கு நெருக்கமான விஷயங்களை சொல்வாள் என எதிர்பார்த்து பொய்த்து போன என் ஏமாற்றமாகவும் இருக்கலாம். ஏதோ ஓர் கணத்தில் அவளை என் தோழி என நம்பிவிட்டேன். வகுப்பில் முதல் முதலில் சந்தித்த பெண் அவள்தான் என்பதாலோ இல்லை என்னை பேச சொல்லி கேட்டவள் என்பதாலோ. வகுப்பிலேயே ஓரளவு அழகான பெண்ணுடன் தோழமையுடன் பழகுவது, என்னை சற்று நாகரிகமானவனாக காட்டும் என்று எண்ணியதாக கூட இருக்கலாம்.

கல்லூரி படிப்பின் இறுதியாண்டில் ஒருநாள் அமெரிக்காவில் மேற்படிப்பு முழு உதவித்தொகையுடன் கிடைத்துள்ளது என்றாள். கலக்குற ட்ரீட் எப்போ என்றேன், இது நான் அவளிடம் கேட்க்கும் மூன்றாவது ட்ரீட், அவள் பிறந்த நாளுக்கு ஒருமுறை, அவளது தம்பி மாநில அளவில் முதல் மதிப்பெண் எடுத்ததற்கு ஒருமுறை என. எப்போதும் போல, இப்போதும் சிரித்து விட்டு, தரேன் என்றாள்.

கடைசி இரண்டாண்டுகள் அருண் விடுதியில் தங்கவில்லை, வெளியில் ஓர் சிறிய அறை எடுத்து தங்கி இருந்தான். அவன் அறைக்கு எப்போதும் என்னை மட்டும்தான் அழைப்பான். அவன் அறைக்கு சென்று கொண்டிருந்த அந்த வெள்ளி இரவு, ஓர் இரு சக்கர வாகனம் வேகமாய் என்னை கடந்து சென்று சற்று தூரத்தில் நின்றது. வண்டியில் இருந்து இறங்கிய அருண்,

டேய் ரூம்கா வர, வா போகலாம், என்று கிளம்பிய சற்று நேரத்தில் மழை பெய்ய ஓர் ரோட்டோர டீ கடையில் ஒதுங்கினோம். ரெண்டு டீ என்றான். நான் அருகிலிருந்த ஆலமரத்தையே பார்த்துகொண்டிருந்தேன். மழை வலுவாக பெய்ய அராமித்தது.

எங்க போயிட்டு வர என்றேன்.

ஒரு ட்ரீட் போயிட்டு வந்தேன் டா,

என்ன ட்ரீட் ?

அதாண்டா நம்ம அமுதா யு.எஸ் போக போறா இல்ல, ஒரு வாரமா கூப்டுக்கிட்டு இருந்தா அதாண்.

எங்க ட்ரீட்?

காயத்ரி பவன்ல டா. அங்கதான் அவ தம்பி ஸ்டேட் பஸ்டுக்கும் ட்ரீட் தந்தா என்றான்.

ஆலமரத்தின் கிளைகளில் ஊர்ந்த மழை, தண்ணீர் விழுதுகளாக இறங்கி கொண்டிருந்தது.

முந்தைய சிறுகதைகள்  1 |

2 comments:

  1. Good one... understandably... I dont see any comments.

    Been in these shoes quite a few times... myself.

    Keep writing.

    ReplyDelete
  2. Thanks and welcome Grany!

    Glad that u liked it :)

    ReplyDelete