Saturday, July 18, 2009

Travellers and Magicians - ஒரு நெடுஞ்சாலை கனவு பயணம்

மலை முகடுகள் மேகங்களை உரசிய படியே இருக்கிறது. உடைந்து போன மேக துண்டுகள் முயல்களை போல பள்ளத்தாக்குகளில் விழுந்து கிடக்கின்றது. சுருட்டி படுத்து கொண்ட மலை பாம்பின் முதுகை சுற்றிய கோடுகளாய் மலை பாதைகள் நீள்கின்றன. பாதைகளில் எப்போதாவது சிறு எறும்பென தோன்றிய வாகனங்கள் மெல்ல ஊர்ந்து நம்மை கடந்து செல்கின்றது. இவ்வளவு அழகான தேசமா என மனம் வியந்த வண்ணமே உள்ளது, பூட்டான், நமது சிக்கிம் மற்றும் கல்கத்தா மாநிலங்களை இரு புற எல்லையாகவும் இமயமலையின் அடிவாரத்தை இருப்பிடமாகவும் கொண்ட தேசம். அந்த தேசத்தின் நிலத்தை அழகாய் பதிவு செய்ததோடு ஒரு மிக அழகான கதையை கொண்ட திரைப்படம் Travellers and Magicians. Khyentse Norbu என்று புத்த பிட்சு இயக்கிய படம் இது. புத்த மடாலயத்தில் வாழும் சிறுவர்களின் கால் பந்தாட்டம் பார்க்கும் ஆசையை நுட்பமாய் வெளிப்படுத்தி பல விருதுகளை பெற்ற The Cup படத்திற்கு பின்னான இரண்டாவது படம் இது.



முழுக்க முழுக்க பூட்டானிலேயே படமாக்கப்பட்ட முதல் திரைப்படம் இது, பூட்டானை உலக மக்களுக்கு அறிமுக படுத்துவதே எனது நோக்கம் என குறிப்பிடும் இயக்குனர், கனவு உலகத்திற்கு செல்ல வேண்டும் என எண்ணும் இரு வேறு மனிதர்களின் கதையை ஒரு பின்னலை போல் கொடுத்துள்ளார். டான்டுப் ஒரு தனித்த மலை கிராமத்தின் அரசாங்க அதிகாரி, அமெரிக்கா செல்லும் கனவோடு வாழ்பவன். அதற்கான ஏற்பாடுகளை செயதுவிட்டதாய் நண்பனிடம் இருந்து கடிதம் வர, திருவிழாவிற்கு செல்வதாய் பொய் சொல்லி தன் அதிகாரியிடம் விடுமுறை கேட்டு கொண்டு புறப்படுகிறான். திம்பு என்னும் பெருநகருக்கு செல்லும் ஒரே பேருந்தை பிடிக்க வருகையில், ஒரு கிராமத்து மூதாட்டி அவனிடம் சாப்பிட தந்த பாலாடை கட்டிகளை ஆற்றில் எறிந்துவிட்டு ஓடுகிறான். நமது ஊர்களைப் போலவே அந்த ஊரிலும் கிராமத்தின் அப்பட்டமான அன்பு தொனிக்கிறது. கிராமத்தில் உள்ள அனைவருக்கும் அவன் அரசாங்க அதிகாரி ஆதலால் அவனை தெரிந்திருக்கிறது.அவன் அங்கு வந்து பணி புரிவதை பெருமையோடு நினைத்து கொள்கின்றனர்.

பேருந்தை பிடிக்கமுடியாமல் தவற விட்டு காத்திருக்கிறான். அப்போது அவனை போலவே பெருநகருக்கும், திருவிழாவிற்கும் செல்ல விரும்பும் ஒரு முதியவர், ஒரு புத்த பிட்சு, ஒரு வயதானவர் அவரின் மகள் ஆகியோர் சேருகின்றனர். பேருந்தை தவற விட்டால் மீண்டும் அது மறுநாள் வரும் வரை வேறு வழி இல்லை, மெல்ல நடை பயணம் அல்லது ஏதேனும் வாகனங்களில் உதவி கேட்டு செல்லவேண்டிய நிலை. மெல்ல அவர்கள் நடக்க துவங்குகிறார்கள்.



புத்த பிட்சு டான்டுபை நீ எங்கு செல்கிறாய் என கேட்கிறான், அதற்கு அவன் “என் கனவு தேசத்துக்கு” என்கிறான், அங்கு என்ன கிடைக்கும்? என்பதற்கு எல்லாம் கிடைக்கும் என்கிறான். ஆப்பிள் விற்கும் வயதான முதியவர் பார்த்துக் கொண்டே இருக்கிறார். அங்கு என்ன செய்வாய் என்று புத்த பிட்சுவின் கேள்விக்கு, தோட்டங்களில் ஆப்பிள் பறிப்பேன், உணவு விடுதியில் வேலை செய்வேன் என்கிறான். மகளோடு வந்த முதியவர், இங்கு அரசாங்க வேலையை விட்டு விட்டு அங்கு போய் ஆப்பிள் பறிக்க போகறீர்களா என்கிறார்.

அவர்கள் ஒரு லாரியில் இடம் கிடைத்து செல்ல துவங்க, புத்த பிட்சு இது போல கனவு உலகத்துக்கு செல்ல வேண்டும் என நினைத்த ஒருவனின் கதையை சொல்கிறார். அந்த கதை பூட்டான் நாட்டார் கதை மரபில் மிக பிரசித்தமானது, அதில் வரும் இரு சகோதரர்களில் மூத்தவன் எப்போதும் தன்னுடைய கனவு உலகம் என்ற ஒன்றை அவன் தம்பியிடம் சொல்லி கொண்டே இருக்கிறான். அவனை மந்திரங்கள் கற்று கொள்ளும் வகுப்பிற்கு அவன் தந்தை அனுப்பி வைக்க, அவன் அதில் கவனம் இல்லாமல், அழகான பெண்கள் கொண்ட தன் கனவு உலகத்தை கற்பனை செய்த வண்ணமே இருக்கிறான். அவனுக்கு எப்போதும் மதிய உணவு எடுத்து வரும் தம்பி அன்று ஒரு குதிரையில் வர, இவன் அதை முயன்று பார்த்து காட்டில் தொலைந்து போகிறான். அங்கே நடு காட்டில் ஒரு குடிசையில் ஒரு கிழவனும் அவனது அழகான இளம் மனைவியும் வாழ்கின்றனர். அவள் மேல் காதல் கொள்ளும் அவன், அவளுடன் இணைந்து அந்த கிழவனை கொள்ள முயற்சித்து, பின் மனம் உடைந்து காட்டில் எங்கோ ஓடுகிறான். பின்னால் அவளின் கூக்குரல் கேட்பதாக ஒரு மர்மத்துடன் கதையை முடிக்கிறார் புத்த பிட்சு.

பிட்சு சொல்லும் அந்த கதை ஒரு கனவு உலகத்தில் நடப்பது போன்று எடுக்கப்பட்டுள்ளது. அந்த காட்சி அமைப்பும், ஒளிப்பதிவும் இதுவரை நான் பார்த்த சிறந்த ஒன்று. சில இடங்களில் Illusionist படத்தை நினைவூட்டியது. பிட்சு சொல்லும் இந்த கதையில் வரும் காதல், கனவு உலகம், பொறாமை, காமம் ஆகியவை டான்டுவின் வாழ்க்கையோடு மெல்ல பிணைக்கப்பட்டு திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் பின்னணி இசையும் உரையாடல்களும் மிக கட்சிதமானவை. படத்தின் இயக்குனர் ஒரு புத்த துறவி என்பதால் படம் பார்ப்பதும் ஒரு த்யானம் போலவே உள்ளது. இந்தியாவின் பாலிவுட்டின் தாகம் அதிகம் உள்ள பூட்டானில் இந்த படம் எப்படி உள்வாங்கி கொள்ளப் பட்டது என இயக்குனரிடம் கேட்டதற்கு,படத்தில் பாடல்களே இல்லையா என சிலர் கேட்டனராம்.



படத்தின் காட்சிகளும் அதன் பின்னணி இசையும் மெல்ல இதை எழுதும் போதும் நினைவு வந்து கொண்டும் , காதில் ஒலித்து கொண்டும் இருக்கிறது. படத்தில் ஓரிடத்தில் ஒரு பெண்ணின் புன்னகையை பார்க்கிறான் டான்டு , அதற்க்கு புத்த பிட்சு, “அழகாக இருக்கிறது அல்லவா அவள் புன்னகை, தற்காலிகமாக இருப்பதனால் தான் அது அவ்வளவு அழகாக இருக்காதா என்ன? என்கிறார். ஆனால் படத்தின் காட்சிகள் நிரந்தரமாய் நம்முள் உறைந்து விடுகிறது.



இந்த வரிசையின் முந்தைய பதிவுகள் 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |13 |

Thursday, July 16, 2009

ஐந்து திரைப்படங்கள்

சில திரைப்படங்கள் பார்ப்பதற்கான மனநிலை எப்போதாவது வாய்க்கிறது, சில எப்போதும் தள்ளி செல்கிறது. சேகரிப்பில் இருக்கும் திரைப்படங்களை அவ்வப்போது எடுத்து பார்ப்பதும் பின் அதை வேறு வேறு விதமாக அடுக்கி வைப்பதும், அந்த திரைப்பட டி.வீ.டி யின் உரையை பிரிக்கும் சத்தமும் எப்போதும் சந்தோஷம் தருவதாக உள்ளது, புதியதாய் வாங்கப்பட்ட புத்தகத்தின் வாசனை தரும் பரவசம் போல. சென்ற வாரம் ஒரு சோர்வான மனநிலை இருந்தது.

ஊரிலிருந்து வந்திருந்த என் நண்பனின் தம்பி ஏதேனும் நல்ல படம் பார்ப்போமா என்றான். அவன் கேட்டவுடன் எனக்கு தோன்றியது, Shawshank Redemption மற்றும் 12 Angry Men. இறுதியாக , Shawshank Redemption சரியாக வரும் என எண்ணி இரவு 10 மணிக்கு பார்க்க ஆரமித்தோம், இந்த படத்தை எத்தனை முறை பார்த்திருப்பேன் என நினைவில்லை. எல்லா சிறந்த படங்களைப் போலவே படம் தொடங்கிய 10 நிமிடத்திற்குள் எங்களை உள்ளிழுத்து கொண்டது. அந்த படத்தில் வரும் ரெட்டின் வரி போல, படம் முடிந்த பின்

“We came out clean on the other side”

சமீபமாய் வான் கார் வாயின் “In the Mood for Love” படமும் அடிக்கடி பார்த்து கொண்டு இருக்கிறேன். They Shoot Pictures இணையதளத்தில் 21 ஆம் நூற்றாண்டில் கலை நேர்த்தியோடும் பரவலான பாராட்டும் பெற்ற திரைப்படங்களின் வரிசையில் முதல் இடத்தில் உள்ளது இந்த திரைப்படம். இந்த படத்தை பற்றிய பதிவு விரைவிலேயே CH1ல் வரும் ஆகையால் இப்போதைக்கு விட்டு வைப்போம். சத்யஜித் ரேவின் பதேர் பாஞ்சாலி பல நாட்களாக பார்க்க வேண்டும் என் எண்ணிய படம், ஆனால் இன்னும் கிடப்பில் கிடக்கிறது. முடிந்தால் இந்த வாரம் பார்க்கலாம். இதை தவிரவும் சென்ற இரண்டு வாரங்களில் பார்த்த சில படங்களின் ஒரு குட்டி தொகுப்பே இது.

The Apple by Samirah Makhmalbaf




இரான் தேசத்தை சேர்ந்த புகழ்ப்பெற்ற இயக்குனரான Mohsen Makhmalbafன் பெண் Samirah Makhmalbaf தனது 17 வது வயதில் 1998 ஆம் ஆண்டு இயக்கிய படம் இது. 11 வருடங்கள் வெளி உலக தொடர்பே இல்லாமல் வீட்டிற்குள்ளேயே அடைக்கப்பட்டு வாழ்ந்த இரு பெண்களை பற்றிய உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட திரைப்படம் இது. அந்த வீட்டின் அருகில் வசிப்பவர்கள் சமூக நல அதிகாரிகளிடம் சொல்லி அவர்கள் அந்த குழந்தைகளை மீட்பதை பற்றிய அழகிய படம். முதல் முதலில் அந்த இரு குழந்தைகள் வெளி உலகிற்கு வருவதும், அவை எதிர்கொள்ளும் மற்ற குழந்தைகளும் மிக கவித்துவமான காட்சிகள். மேலும் அந்த குழந்தைகளை அவரின் தந்தை கொடுமை படுத்தினார் என்ற நாடக ரீதியில் செல்லாமல் படம் அவரின் இயலாமையை, அறியாமையை எடுத்து காட்டிய விதம் மிக அழகு.

Offside by Jafar Panahi



உலகின் தலை சிறந்த இயக்குனர்களின் பட்டியலில் நிச்சயம் இடம் பெற தகுதியான இயக்குனர் Jafar Panahiன் படம் Offside. உலக கோப்பை கால்பந்துக்கான தேர்வு போட்டி இரான் மற்றும் பெஹ்ரைனுக்கு இடையே நடக்கிறது. பெண்கள் மைதானத்திற்கு சென்று போட்டியைப் பார்க்க தடை விதிக்கபட்டிருக்கும் இரானில் அந்த தடையை மீறி சென்று பார்க்கும் பெண்களை பற்றிய படம் இது. இயக்குனரது பெண் போட்டியைக் காண சென்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாய் கொண்டு எடுக்க பட்ட படம். இந்த படம் இரானில் திரையிட தடை வித்திக்கபட்டுள்ளது. இரானை தவிர திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும் பலத்த வரவேற்ப்பை பெற்ற படம்.

Alfred Hitchcock’s Wrong Man



எப்போது தொடர்ந்து படங்கள் பார்த்தாலும், ஒரு ஹிட்ச்க்காக் படம் பார்க்கும் என் வழக்கப்படி இப்படம். மேலும் படத்தின் கதாநாயகன், 12 Angry Men நாயகன் Henry Fonda. இந்த படமும் மேற்கூறிய படங்களை போல உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது, படத்தின் ஆரம்ப காட்சிகளில், ஹிட்ச்க்காக் தான் எடுத்த புனைவு கதைகளை விட அதிகம் விசித்திரங்கள் நிறைந்த கதை இது என்கிறார். ஒரு சாதரண மதிய தர குடும்பத்தை சேர்ந்த கதாநாயகன், வேலை முடித்து வீட்டிற்க்கு வருகையில் ஒரு நாள் கைது செய்யப்படுகிறான். அவன் தொடர் கொள்ளைக்காரன் என குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்க சாட்சியங்கள் அனைத்தும் அவனுக்கு எதிராகவே உள்ளது. அதில் அவன் மீண்டான் என்பது தான் கதை. கடைசி வரை சுவாரசியம் குன்றாத படம்.

Christopher Nolan’s Following



Memento, Batman Begins, Prestige மற்றும் Dark Knight படங்களின் இயக்குனரது படம் இது. அவரது மற்றைய படங்களை போலவே இந்த படமும் திரைகதையில் புதுமைகளை கொண்டது. ஒரு மணி நேரம் மட்டுமே ஓடக் கூடிய இந்த திரைப்படம், எழுத்தாளனாக முயன்று கொண்டிருக்கும் ஒருவனை பற்றியது. வாழ்வின் தொடர்ந்த வெறுமையைப் போக்க அவன் தெருவில் பார்க்கும் யாரையாவது தொடர்ந்து செல்கிறான். அவர்களின் தினசரி நடவடிக்கைகளை பார்ப்பது மூலம் ஒரு சுவாரசியம் கொள்கிறான். அப்படி நண்பான ஒருவனுடன் சேர்ந்து அவன் செய்யும் விஷயங்கள் அழகாக தொகுக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதி காட்சி க்ளாசிகல்.

Windstruck by Kwak Jae-yong



சமீப காலமாக கொரியன் படங்கள் உலக அளவில் முக்கியத்துவம் பெற்று வருகின்றன, குறிப்பாக நமது கோலிவுட்டில். கொரியா ரொமான்டிக் திரைப்படங்களின் பல காட்சிகள் தமிழ் சினிமாவில் சமீபமாய் பார்க்க முடிகிறது. நான் பார்த்த The Classic, My Saasy Girl, Someone Special ஆகிய Feel Good படங்கள் வரிசையில் இதுவும் ஒரு அழகான திரைப்படம். போலீஸ் அதிகாரியாக இருக்கும் ஒரு அழகான முரட்டு பெண்ணிற்கும் ஒரு அப்பாவி இளைஞனுக்கும் இடையேயான நட்பும் அது காதலாகும் தருணமும் ஒரு கவிதையை போலே சொல்லி செல்கிறது இந்த படம்.

இந்த வரிசையின் முந்தைய பதிவுகள் 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |

Friday, July 10, 2009

எழுதுவதே எழுத்தின் ரகசியம்

தொடர்பு கொள்ளுதலே வாழ்க்கை என்னும் அழகான வாக்கியம் உண்டு. நம்மை வெளிப்படுத்திக்கொள்ள தொடர்ந்து முயற்சித்த படியே இருக்கிறோம், சொற்களால், அசைவுகளால், இல்லை காதலர்கள் இடையே இருப்பது போன்ற பொருள் பொதிந்த மௌனங்களால். நம் மனம் அரவணைப்புக்கு ஏங்கியே வண்ணமே படைக்கபட்டிருக்கிறது போலும். பிறந்த உடன் கைக்கு பிடிபடாத காற்றை அணைக்க முற்படுவது முதல்!. கலை இலக்கியம் ஆகியவையும் யாரோ தனக்கு நேர்ந்ததை அல்லது தான் கற்பனையில் கண்டத்தை மற்றவரோடு பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சி தான்.

I shot an arrow into the air,

It fell to earth, I knew not where;

For, so swiftly it flew, the sight

Could not follow it in its flight.


I found the arrow, still unbroke;

And the song, from beginning to end,

I found again in the heart of a friend.

என்ற Henry Longfellow வின் கவிதை போல, நாம் எழுதுவது எங்கோ ஒரு நண்பன் மனத்தில் தைக்கிறது.

எழுத்தாளர்கள் எழுதுவதை பற்றியும், எழுத்தை பற்றியும் சொல்லியதின் சிறு தொகுப்பு இது.

இதில் ப்ளாக் எழுதுவது பற்றி சுஜாதா அவர்கள் கற்றதும் பெற்றதும் தொடரில் சொல்லியவையும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை வழங்கிய அரவிந்தனுக்கு நன்றி.

சுஜாதா ப்ளாக் எழுதுவது பற்றி க. பெ வில்,



நன்றி: ஆனந்த விகடன்

எழுதுவதின் இழப்புகள் என்னும் தலைப்பில் சுஜாதா தன்னுடைய “எழுத்தும் வாழ்கையும்“ புத்தகத்தில்,

“உள்மனத்தில் ஓர் எண்ணத் தொடர் எழுத்தாளனுக்கு ஓடிக்கொண்டே இருக்கும். எந்த சம்பவத்தைப் பார்த்தாலும், எந்தச் சம்பாஷணையைக் கேட்டாலும், இதில் ஒரு கதை இருக்கலாம் போல ஒரு தனிப்பட்ட யோசனை. சில சமயம் இந்த உப எண்ணங்கள்… உப கவனம் இழப்பாகக் கூட இருக்கும். எதையும் வைத்து கதை பண்ண முடியும் என்கிற தன்னம்பிக்கை சில சம்பவங்களின் தாக்கத்தை மழுப்பிவிடும் அபாயம் உள்ளது. ”

புதியதாய் எழுத ஆரமிப்பவர்கள் எதிர் கொள்ளும் தடுமாற்றங்கள் குறித்து ஜெயமோகன் தன்னுடைய வலைப்பதிவில்,

“எழுதித்தான் எழுத்தில் உள்ள சிக்கல்களையும் தடைகளையும் தெரிந்துகொள்ள் முடியும். எழுதும்போது எழுத்தில் நம் மனம் ஒன்ற வேண்டும். நாம் முழுமையாக அதில் ஈடுபடவேண்டும். ஒரு கனவு போல கதை நம்மில் நிகழ வேண்டும். கதைமாந்தர்களையும் சூழலையும் நாம் கண்ணெதிரே காண வேண்டும். அதற்கான பயிற்சி என்பது தொடர்ச்சியாக எழுதுவதே.

ஆரம்பத்தில் நமக்கு அப்படி எழுத முடியாமைக்குக் காரணம் நாம் எழுத்துக்குப் பழகவில்லை என்பதே. நம் மனம் கற்பனைசெய்யும்போது எழுத முடிவதில்லை. எழுதுவதில் உள்ள கவனம் நம் கற்பனையை தடுக்கிறது. ஆகவே இரண்டையும் சமன்செய்யும்பொருட்டு நாம் மாற்றி மாற்றி எழுதிப்பார்க்கிறோம். கிழித்துப்போடுகிறோம். எரிச்சல் கொள்கிறோம் தொடர்ந்து எழுதிக்கோண்டே இருந்தால் எழுத்து கைக்கும் மனதுக்கும் பழகி விடும் . அது தானாகவே நிகழும்.

நீங்கள் கற்பனைமட்டும் செய்தால் போதும். சிலம்பாட்டம் கற்றுக்கொள்ளச் சென்றால் முதலில் சிலம்பைச் சுழற்றவே கற்றுக்கொடுப்பார்கள். சுழற்றிச் சுழற்றி சிலம்பு கையிலிருப்பதே தெரியாமல் ஆகும். அப்போது வித்தையில் மட்டுமே கவனம் இருந்தால் போதும். மனம்செல்லும் இடத்துக்கு கம்பு போகும். அதைப்போல எழுத்து வசமாகவேண்டுமென்றால் எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். ஆரம்பகட்டத்தில் இது அவசியம்.“

எழுத்தாளனாக தன்னுடைய இயல்பு பற்றி லா. சா. ராமாமிர்தம் தன்னுடைய சிறுகதை தொகுதியில்,

“நான் எழுத்தை பயில்பவன்; வாழ்க்கையின் கீதத்தை பாடிக்கொண்டு, நடுநிலவில் தெருவழியே நடந்து செல்கிறேன், வாசல் கதவுகள், ஜன்னல் கதவுகள் திறக்கின்றன, சில மூடுகின்றன. சிலர் திண்ணைக்கு வந்து நிற்கின்றனர். சிலர் அன்பில் என்னை வழியனுப்புவது போலும், ஒரு தூரம் வந்து அங்கு நின்று விடுகின்றனர். நான் கண்ட இன்பம், பாடி கொண்டே போகிறேன். நான் என் இயல்பில் உணர்சிபூர்வமானவன். பாடுவது அன்றி வேறு அறியேன்.”

எளிய, கிராமம் சார்ந்த எழுத்துக்கள் மூலம் அறியப்படும் நாஞ்சில் நாடன் எழுத்துக்காக அவர் வரித்து கொண்ட இலக்கணங்கள் பற்றி,

“சிறுகதையின் இலக்கணம் அழகு, சீர்மை, செறிவு, கலை, வெளிப்பாடு, அக்கறை, தொனி… எத்தனை சொற்கள் இல்லை தமிழில். எல்லாம் காலத்துக்குக் காலம், கோணத்துக்கு கோணம், இடத்துக்கு இடம் மாறும் தன்மைத்தன. மாறாத சில உண்டு. மனித நேயம், சொல்வதில் நேர்மை… நான் வரித்துக்கொண்ட இலக்கணங்கள் அவை. அதில் சோர்வில்லை, தளரவில்லை இன்றும் எனக்கு.

கதைகளில் நான் இன்னும் வாழ்வது புலனாகிறது. மனம் புதிய படைப்பு வேகம் கொள்கிறது. தமிழ்ச் சிறுகதை இலக்கியம் என்னும் தடகளத் தொடர் ஓட்டத்தில் என்னாலும் சில தூரம் ஓட முடிந்திருக்கிறது என்பது ஆசுவாசம் தருவதாக இருக்கிறது. கோப்பையை யார் முத்தமிடுகிறார்கள் என்பதிலல்ல எனது ஆர்வம், ஓட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதிலும் ஜீவன் வறண்டு போகவில்லை என்பதிலும் எனக்கு சமாதானம் உண்டு. ”

எழுதுவது பற்றி, தன்னுடைய கதைகள் பற்றி ஆதவன் சொன்னவை,

"என் போக்கில் என்னுடைய சொந்த வேகத்தில் இயங்குகிற விருப்பமுள்ள எனக்கு சொற்கள் வழங்குகிற வாய்ப்புகள் கவர்ச்சியாக இருக்கின்றன. நழுவிப் போய்விட்ட பல கணங்களை நிதானமாக சொற்களில் உருவாக்கப் பார்கிறேன், புரிந்து கொள்ள முயல்கிறேன். என் கதைகளில் இருப்பது நானும்தான், நீங்களும்தான். உங்களுடன் என்னுடைய பாணியில் அல்லது வேகத்தில்? உறவு கொள்கிற முயல்கிற முயற்சிகளே எனது கதைகள்"

Thursday, July 9, 2009

தண்ணீர் விழுதுகள்

சீர் இடம் காணின் எறிதற்குப் பட்டடை

நேரா நிரந்தவர் நட்பு

அதிகாரம்: 83, கூடா நட்பு

குறள்: 821


காற்று அந்த புங்கை மரத்தின் தலைக்குள் கையை விட்டு எதையோ ஆரவாரமாய் தேடிகொண்டிருந்தது. தலையின் அசைப்புக்கு ஏற்றவாறு விழுந்து கொண்டிருந்த இலைகள் கல்லூரியையும் விடுதியையும் இணைக்கும் சாலையை மெல்ல மூடி கொண்டு இருந்தது. அந்த நீண்ட சாலையில் நானும் அவளும் மட்டும் நடந்து கொண்டிருந்தோம். நானும் அவளும் என்றால் ஒன்றாக இல்லை, ஒரு பத்து மீட்டர் இடைவெளி விட்டு. காற்றின் வேகம் அந்த இடைவெளியை குறைத்த வண்ணம் இருந்தது. நெஞ்ஜோடு அணைத்து கொண்டிருந்த அவளது புத்தகங்களின் ஒன்று கீழே விழுந்து என் கால் தடுக்கியது, பக்கங்களும், இமையும் ஒரு சேர அடித்து கொள்ள என்னை பார்த்தாள். அந்த கண்களின் மருட்சி அவளும் என்னைப் போல முதலாமாண்டு தான் என்றது. ஆனால் என் முகத்தின் மீசை அவளுக்கு அந்த நம்பிக்கையை அளிக்க வில்லை போலும். சாரி, தேங்க்ஸ் என ஏதோ சொல்லிவிட்டு ஒரு அவசர கணத்தில் மறைந்து போனாள்.

மறுநாள் அவளும் நானும் ஒரே வகுப்பில் தான் அமர்ந்திருந்தோம். நேற்றைய நிகழ்ச்சி எங்களுக்குள் பரஸ்பரம் எந்த சிநேகத்தையும் விதைத்து விடவில்லை. எனது சராசரி சிறுநகரத்து பின்னணியை மறந்து சகஜமாக நான் பழக ஆரமித்த ஒரு வாரத்திற்கு பின், காற்றின் அழுத்தத்தை பதிவு செய்யும் செய்முறை வகுப்பில் தான் அவள் என்னிடம் பேச துவங்கினாள். செய்முறை வகுப்பின் நான்கு பேர் கொண்ட குழுவில் மற்ற மூவரும் பெண்கள் . பெண்களிடம் பேசுவதோ, இல்லை பேசாமல் இருப்பதோ பற்றி எந்த வித முன் வரையறைகளும் இல்லாமல் இருந்த என்னிடம் இந்த கல்லூரி வாசம் ஏற்படுத்தியிருந்த ஓர் அனாவசிய கூச்சத்தை தொட்டு காட்டியபடி

நீ ஏன் அதிகம் பேசவே மாட்டேன்ற? என்றாள்.

“ச்சே ச்சே அப்படி எல்லாம் இல்லை, ஹாஸ்டல எல்லாம் நல்லாத்தான் பேசுவேன்”

அப்ப எங்ககிட்ட எல்லாம் பேச மாட்டயா?

அப்படி இல்லை, இங்க வாய்ப்பு கம்மி இல்ல. இப்போதான் பிராக்ட்டிக்கல் க்ளாஸ் வர ஆரமிச்சி இருக்கு. இனிதான் பழக முடியும் அததான் சொல்றேன்.

அதற்குள் ஆவலுடன் மற்ற இருவர் சேர்ந்து விட்டனர்.

“இல்ல நம்ம க்ளாஸ் பசங்க பேசறதே இல்லை” என்றனர்.

“சரி நான் பசங்ககிட்ட சொல்றேன்” என்றேன்.

ஆனால் நான் விடுதியில் இதைப் பற்றி விவாதிக்க வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. என் நண்பன் ஒருவன் “க்ரிஸ்” விளையாடலாம் என்றான். வகுப்பில் எல்லாருடைய பெயர்களையும் சீட்டுகளில் எழுதி போட்டு அவர் அவர் ஒரு சீட் எடுக்க வேண்டும். அதில் யார் பெயர் உள்ளதோ அவர்களை ஏதேனும் செய்ய சொல்லி மறைமுகமாய் சொல்ல வேண்டும். ஒரு வார காலம் நடக்கும் இந்த போட்டி முடிந்த உடன், அந்த க்ரிஸ் தோழனுக்கோ தோழிக்கோ ஏதேனும் பரிசு குடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப் பட்டது.

எனது பெயர் என் நண்பன் அருணிடமும் அவளது பெயர் என்னிடமும் வந்தது.

“டேய் உனக்கு போய் நான் என்னடா அனுப்ப, அதான் அமுதா பேர் உனக்கு வந்து இருக்கு இல்ல, அவளுக்கு அனுப்புவோம் “

என அவளுக்கு நான் அனுப்புவது போல் ஒரு குறிப்பை அருண் அனுப்பி விட்டான்.

மறு நாள் அவள் வகுப்பின் முன் வந்து, “வகுப்பில் யார் அழகானவர்களோ அவர்களிடம் வந்து டைம் கேட்க வேண்டும்” என எழுதி இருப்பதை சொல்லி விட்டு சங்கோஜமாக நின்றாள். அரை மணி நேரம் கண்ணாடி முன் நின்று, Fair and Lovely போட்டு கொண்டு இருப்பதிலேயே புதிய சட்டையை அணிந்து கொண்டு வந்த அருணின் இருப்பு இப்போது சற்று ஞாயப்படுத்தப்பட்டதாக தோன்றியது. ஒருத்தரை விட்டுட்டு ஒருத்தரை எப்படி சொல்றது, எல்லார் கிட்டயும் கேட்டதாக வச்சுகங்க என சொல்லி சென்று விட்டாள். மரியாதை நிமித்தமாக அவளுக்கு பரிசு கொடுக்கும் பொறுப்பை மட்டும் எனக்கு வழங்கினான் அருண். ஒரு புத்தகம் வாங்கி பரிசளித்து விட்டு, அந்த குறிப்பை நான் எழுதலை என்றேன். தெரியும் என என்னை புரிந்த கொண்ட புன்னகை ஒன்றை உதிர்த்தாள்.

பேசி கொண்டே இருப்பது எனது இயல்பு அல்ல. ஆனால் அதன் பின் ஏற்பட்ட சிற்சில சந்தர்ப்பங்களில் நான் தான் பேச துவங்கினேன். ஒரு சின்ன அசைவு மூலமோ, இல்லை மெல்லிய சீண்டல் மூலமோ, ஒரு குழந்தைத்தனம் கொஞ்சும் சிரிப்பு மூலமோ ஈர்க்கப்பட்டு அவளிடம் பேச துவங்கிவிடுவேன். வெறும் வார்த்தைகளை ஒன்று சேர்த்து. தேவைகேற்ப வாக்கியங்களை அமைத்து, பேசவேண்டுமே என்ற உந்துதலால் மட்டுமே பேசப்படும் பேச்சு. மெல்ல மெல்ல எந்த விதமான விஷயங்களுக்கு ஆதரவு கிடைக்கிறதோ, அதே விஷயங்களை வேறு வேறு வாக்கியங்கள் கொண்டு பேசினேன். பேச ஆரமித்த பின் அவள் கேட்பவளாக மட்டும் தான் இருந்தாள். நான் ஹைக்கூவைப் பற்றி பேசியது, பாஷோவை பற்றி பேசியது என அனைத்தையும் புதுமையாக கேட்டு கொண்டிருந்தாள்.

நான் அதிர்ந்து பேசும் விஷயங்களுக்கு, அவள் எப்போதும் மென்மையான பதில்களையே கொண்டிருந்தாள். தொடர்ந்த அவளது மென்மையான பதில்கள் ஒருவகையில் எரிச்சலைத் தந்தது, ஆனால் மீண்டும் அவளை நோக்கி வர அதுவே காரணமானது. பல சமயம் அவளிடம் பேசுகையில் அவளது செயல்கள் என்னை ஓர் கேலி சித்திரமாகவே உணர செய்தது. முக்கியமாக இது எல்லாம் ஒரு விஷயமா என்பது போல் அவள் பார்க்கும் பார்வை. ஆனால் அதை உணர்ந்து கொள்வதற்குள் என் பேச்சு வேறு பக்கம் திசை திரும்பி இருக்கும்.

மீண்டும் மீண்டும் அவளிடம் பேசுவதை தவிர்க்கவே முயன்றேன். மற்ற எல்லா சமயங்களிலும் அவளை புறக்கணிப்பது அவ்வளவு சிரமமாக இல்லை செய்முறை வகுப்புகளை தவிர. மூன்று மணி நேரம் ஒரே இடத்தில் நின்று கொண்டு, ரீடிங் எடுத்து விட்டு வெட்டியாய் நிற்கும் பொழுதுகளில் பேசியே ஆக வேண்டிய கட்டாயம். நான் பேசாமல் இருந்த நாட்களில் அவளே கேட்பாள்,

“நீ ஏன் ஒரு மாதிரியா இருக்கே ?

ஒன்னும் இல்ல,

அன்னைக்கு இன்டெர்னல் பேப்பர் கொடுத்ததில இருந்தே நீ இப்படி தான் இருக்க!

இப்போது எனக்கு காரணம் கிடைத்துவிட்டது, அது பரவா இல்ல, நான் நல்லாத்தான் பண்ணேன் என்று அவளிடம் சால்ஜாப்பு சொல்லிகொள்ளலாம். அப்போதைக்கு அவள் மேல் இருந்த கோவம் வேறு பக்கம் திசை திருப்ப பட்டிருக்கும். நன்றாக படிக்க முயற்சி செய்து, ஆனால் சரியாக அது கை கூடாமல் மனம் வருந்தி நிற்பவனாக காட்டி கொள்வது சூழ்நிலையை சாதாரணமாக்கும். மீண்டும் அதே பேச்சு, தலை அசைப்பு வெற்று வார்த்தைகள். அவளிடம் பேசி கொண்டு இருக்கையில் ஏதோ ஓர் கணம் மீண்டும் என்னை கேலி சித்திரமாக உணர தொடங்கி விடுகிறேன். முக்கியமாக நான் அந்தரங்கமாக மதிக்கும் சில விஷயங்களை அவளிடம் சொல்லத் தொடங்குகையில்.

அதற்கு காரணம், சிரத்தை இல்லாமல் கவனிப்பது போன்ற முகபாவனையாக இருக்கலாம். இல்லை அவளிடம் இருந்து ஏதேனும் அந்தரங்கமான அல்லது அவளது மனதுக்கு நெருக்கமான விஷயங்களை சொல்வாள் என எதிர்பார்த்து பொய்த்து போன என் ஏமாற்றமாகவும் இருக்கலாம். ஏதோ ஓர் கணத்தில் அவளை என் தோழி என நம்பிவிட்டேன். வகுப்பில் முதல் முதலில் சந்தித்த பெண் அவள்தான் என்பதாலோ இல்லை என்னை பேச சொல்லி கேட்டவள் என்பதாலோ. வகுப்பிலேயே ஓரளவு அழகான பெண்ணுடன் தோழமையுடன் பழகுவது, என்னை சற்று நாகரிகமானவனாக காட்டும் என்று எண்ணியதாக கூட இருக்கலாம்.

கல்லூரி படிப்பின் இறுதியாண்டில் ஒருநாள் அமெரிக்காவில் மேற்படிப்பு முழு உதவித்தொகையுடன் கிடைத்துள்ளது என்றாள். கலக்குற ட்ரீட் எப்போ என்றேன், இது நான் அவளிடம் கேட்க்கும் மூன்றாவது ட்ரீட், அவள் பிறந்த நாளுக்கு ஒருமுறை, அவளது தம்பி மாநில அளவில் முதல் மதிப்பெண் எடுத்ததற்கு ஒருமுறை என. எப்போதும் போல, இப்போதும் சிரித்து விட்டு, தரேன் என்றாள்.

கடைசி இரண்டாண்டுகள் அருண் விடுதியில் தங்கவில்லை, வெளியில் ஓர் சிறிய அறை எடுத்து தங்கி இருந்தான். அவன் அறைக்கு எப்போதும் என்னை மட்டும்தான் அழைப்பான். அவன் அறைக்கு சென்று கொண்டிருந்த அந்த வெள்ளி இரவு, ஓர் இரு சக்கர வாகனம் வேகமாய் என்னை கடந்து சென்று சற்று தூரத்தில் நின்றது. வண்டியில் இருந்து இறங்கிய அருண்,

டேய் ரூம்கா வர, வா போகலாம், என்று கிளம்பிய சற்று நேரத்தில் மழை பெய்ய ஓர் ரோட்டோர டீ கடையில் ஒதுங்கினோம். ரெண்டு டீ என்றான். நான் அருகிலிருந்த ஆலமரத்தையே பார்த்துகொண்டிருந்தேன். மழை வலுவாக பெய்ய அராமித்தது.

எங்க போயிட்டு வர என்றேன்.

ஒரு ட்ரீட் போயிட்டு வந்தேன் டா,

என்ன ட்ரீட் ?

அதாண்டா நம்ம அமுதா யு.எஸ் போக போறா இல்ல, ஒரு வாரமா கூப்டுக்கிட்டு இருந்தா அதாண்.

எங்க ட்ரீட்?

காயத்ரி பவன்ல டா. அங்கதான் அவ தம்பி ஸ்டேட் பஸ்டுக்கும் ட்ரீட் தந்தா என்றான்.

ஆலமரத்தின் கிளைகளில் ஊர்ந்த மழை, தண்ணீர் விழுதுகளாக இறங்கி கொண்டிருந்தது.

முந்தைய சிறுகதைகள்  1 |

Wednesday, July 1, 2009

A Short Film about killing - வலி தரும் இழப்புகள்

உலக சினிமா வேறு, சினிமா உலகம் வேறு என்றாராம் ஜெயகாந்தன். 100 வருடங்களை கடந்து விட்ட கலையின் தீவரத்தை உணராது செயல்பட்ட ஒரு சமூக கட்டமைப்பை நோக்கி சொல்லப்பட்ட ஒரு கலைஞனின் ஆதங்கம் இது. மானுட மனதின் ஆதார உணர்ச்சிகளைத் தொட்டு செல்லும் எந்த கலைப் படைப்பும் உலக முழுமைக்கும் உரியதே. சிரிப்பை, அழுகையை, கோபத்தை, காதலை திரையில் மொழிபெயர்ப்பதே உலக சினிமா. எங்கோ, யாருக்கோ அல்லது இங்கே நமக்கு என்கிற சுவர்களை உடைத்து ஒவ்வொரு இதயத்துக்கும் நம்பிக்கையை, அன்பை, ஒளியைப் பாய்ச்சுவதே படைப்பின் பெருங்கனவு என்று குறிப்பிடுகிறார் செழியன் தனது உலக சினிமா புத்தகத்தின் முன்னுரையில். கலையைக் கொண்டு தன் உள்ளொளியைக் காண முற்படுபவன் எங்கு இருந்தாலும் அவன் நம்மவன் என்று ஜே.ஜே சில குறிப்புகளில் சுந்தர ராமசாமி சொல்வது சினிமாவிற்கும் பொருத்தமாகவே படுகிறது.


சத்யஜித் ரே, மணிரத்தினம், அடூர், ரித்விக் காடக், ஆகியோரது படங்கள் இந்திய எல்லைகளைத் தாண்டி ரசிக்கபடுவதும். பெர்க்மன், பெலினி, கிசொலோவ்ச்கி, அல்மோத்வர், மஜித் மஜிதி, ஆந்த்ரா வாய்ஜே, போலன்ஸ்கி, கோடார்ட், ஹிட்ச்காக் படைப்புகள் உலகம் முழுமைக்கும் பொதுவானதும் இதையே உணர்த்துவதாக உள்ளது. எங்கோ பெயர் தெரியாத தேசத்தில் இருந்தும் அறத்தின் குரலாய் ஒலிக்கும் அத்தனை படைப்புக்களும் நமக்கு உரியதே.


போலாந்தில் வாழ்ந்த உலகின் தலை சிறந்த இயக்குனர்களில் ஒருவர் Krzysztof Kieslowski. போலந்தில் உள்ள வார்சா என்னும் இடத்தில பிறந்து 80 மற்றும் 90 களில் திரைப்படங்களை இயக்கத் தொடங்கிய இவர் பைபிளில் உள்ள Ten Commandments என்னும் பத்து கட்டளைகளை மையமாக வைத்து பத்து ஒரு மணி நேர தொலைகாட்சி தொடரை (Decalogue) இயக்கி உலக புகழ் பெற்றார். அதில் உள்ள “Thou shall not commit adultery” மற்றும் “Thou shall not murder” என்னும் இரண்டு விஷயங்களை இன்றைய காலக் கட்டத்திற்குள் பொருத்தி எடுக்கப்பட்ட தொலைக்காட்சி தொடரை திரைப்படமாக வெளியிட்டார்.



A Short Film about Love என்னும் திரைப்படம் பிறன்மனை விழையாமையையும் A Short Film about Killing என்பது கொல்லாமையையும் விவாதமாக முன்வைத்தவை. இந்த திரைப்படங்கள் எவையும் எந்த கருத்தையும் வலியுறுத்தும் விதமாக எடுக்கப் படாமல், பார்வையாளனிடம் சில கேள்விகளை உருவாக்கும் பொருட்டு எடுக்கப்பட்டுள்ளது.


1988 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் மிக பெரிய அதிர்வுகளை உருவாக்கிய திரைப்படம் A Short Film about Killing. ஒரு எலி இறந்து கழிவு நீரில் மிதந்து கிடக்க அந்த நீர் மெல்ல சலசலக்கிறது, மனம் சிறு பதைபதைப்பை உணர தொடங்குகிறது. மெல்ல அதில் இருந்த நம் பார்வை மேலே நகர ஒரு பூனையின் கால்கள் அந்தரத்தில் நடக்க முயற்சித்து கொண்டு இருக்க, ஒரு பின்னணி இசையயுடன் நம் கண்கள் மேலே சொல்ல அந்த பூனை ஒரு கம்பியில் தூக்கில் இடப்பட்டு ஆடி கொண்டிருக்கிறது. இப்போது நமது பதைபதைப்பு பூனைக்கானதாகிறது., பின்னணியில் சிறுவர்கள் ஆரவாரமாக குதித்து ஓடும் குரல் கேட்க நமது அதிர்ச்சி அவர்களை பின்தொடர்வதுடன் தொடங்குகிறது இந்த படம்.



மூன்று வெவ்வேறு பின்னணி கொண்ட நபர்களின் அன்றைய நிகழ்வுகள் முதல் 35 நிமிடங்களுக்கு தொகுக்கப்பட்டுள்ளது. மிக குறைந்த காட்சிகளில், கட்சிதமான வசனங்களில் அவர்களின் ஆளுமை முழுதாய் நம் மனதில் பதிந்து விடுகிறது. முதலில் ஜாசக், ஒரு இருவது வயது வாலிபன், எந்த நோக்கமும் இல்லாமல் தெருவில் நடந்து கொண்டு இருக்கிறான். ஒரு புகைப்பட கடைக்கு சென்று ஒரு பெண்ணின் புகைப்படத்தை புனரமைக்க சொல்லிவிட்டு மீண்டும் நடக்கிறான்.



பாலத்தின் மேல் நடக்கையில் அங்கிருக்கும் ஒரு கல்லை கீழே தட்டி விட, அது கீழே சென்று கொண்டிருக்கும் வாகனத்தில் பட்டு அந்த கண்ணாடி உடைகிறது. அவன் ஒரு சந்தோஷத்துடன் அங்கிருந்து செல்கிறான். தேநீர் விடுதியில் தேநீர் அருந்துகையில் அங்கிருக்கும் இரண்டு பெண் குழந்தைகளைப் பார்த்து சிரிக்கிறான். அவன் எதிரில் ஒருவன் அவன் காதலியுடன் எதோ சந்தோஷமான விஷயத்தைப் பேசி கொண்டு இருக்கிறான்.


அங்கிருந்து வெளியில் வந்து ஒரு வாடகை வண்டியைப் பிடித்து கொண்டு செல்கிறான். இந்த கதையின் நடுவே அந்த வாடகை வண்டிக்காரன் காரை காலையில் கழுவி விட்டு அந்த தேநீர் விடுதிக்கு வருவதும் சொல்லப் படுகிறது. அதனோடு அந்த விடுதியில் காதலியுடன் பேசிக் கொண்டிருந்த அந்த இளைஞனின் கதையும் சொல்லப் படுகிறது. சட்டப் படிப்பு படித்த அவனுக்கு அன்றுதான் வேலை கிடைத்திருக்கிறது.


காரில் செல்லும் ஜாசக். குறுக்கு வழியில் செல்ல சொல்கிறான். அந்த வழியில் யாரும் இல்லாத ஒரு இடத்தில் தன் கையில் வைத்திருந்த கயிற்றைக் கொண்டு முன் சீட்டில் உள்ள அந்த ஓட்டுனரின் கழுத்தை இறுக்குகிறான். சுமார் எட்டு நிமிடங்கள் ஓட கூடிய இந்த கொலை காட்சி சினிமாவின் மிக நீண்ட கொலை காட்சி.


அந்த கொலை நடந்த பின் அவன் அங்கிருந்து காரை ஒட்டிக் கொண்டு சென்று விடுகிறான். அடுத்த காட்சி ஒரு வருடத்திற்கு பின் நீதி மன்றத்தில் அவனுக்கு தூக்கு தண்டனை விதிப்பதாக அமைகிறது. அவனுக்காக வாதாடிய வக்கீல் அவன் தேநீர் விடுதியில் பார்த்த அந்த இளைஞன். அவனை காப்பாற்ற முடியாமல் போனதை நினைத்து மனம் வருந்துகிறான். நீதி மன்றம் கலைந்தப் பின் நீதிபதியை தனியே சந்தித்து, ஒருவேளை நான் சரியாக வாதாட வில்லையா எனக் கேட்கிறான். இல்லை நீ நன்றாகவே வாதாடினாய் ஆனால் அவன் செயத்ததற்கு இதுதான் தண்டனை என்கிறார். அவனக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப் படுவதற்கு முன் அவன் அந்த வக்கீலிடம் பேசுகிறான், அந்த 10 நிமிடம் மிக உருக்கமான காட்சி.




அவனது இறுதி நடை அந்த மேடையை நோக்கி செல்கிறது, மெல்ல அந்த காட்சிகள் கவனப்படுத்த படுகிறது. அவன் செய்த கொலையை விட கனத்த ஒரு தூக்கு தண்டனை சட்டத்தின் துணையுடன் நிறைவேற்றப் படுகிறது. படம் முழுதும் ஒரு விதமான இறுக்கமான இசையே வழிகிறது, நம் மனதை கனக்கும் இசை. காட்சிகளும் ஒரு வகையான கருமை கொண்ட பின்னணியிலேயே படமாக்கப் பட்டு உள்ளது. இந்த படம் வெளியான பின் இதை வைத்து ஏற்பட்ட விவாதத்தின் முடிவில், போலாந்தில் தூக்கு தண்டனை ரத்து செய்யப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



மரண தண்டனையைப் பற்றி இயக்குனரிடம் கேட்டதற்கு,

“It’s wrong no matter why you kill, no matter whom you kill and no matter who does the killing… Inflicting death is probably the highest form of violence imaginable; capital punishment is an infliction of death.”

என்றார்.

இந்த வரிசையின் முந்தைய பதிவுகள் 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |