Friday, May 14, 2010

குழந்தைகளின் சமையல்

இளவேனில்



நேற்று வரை உறைந்திருந்த
மரங்கள் எல்லாம்
பூக்கள் ஏந்தி
கிளையசைக்க தொடங்குகின்றன
உன் குறுஞ்செய்தியை சுமந்த
கைப்பேசியின் சிணுங்கலை
நினைவூட்டியபடி


நட்பை  கைவிடுதல்
நீண்ட உரையாடல்களையெலாம்
குறுஞ்செய்திகளாய்
மாற்ற கற்று கொள்ள வேண்டும்

ரகசியங்களின் கள்ள அறை
சாவிகளை கைமறதியாய்
எங்காவது வைத்து விட வேண்டும்  

பிறந்த நாளுக்கோ/திருமண நாளுக்கோ
ஒரு பொது வாழ்த்து சொல்லி
நிறுத்தி கொள்ள வேண்டும்

இறுதியாக,
நீண்ட நேரம் கூகள் சாட்டில்
உயிர்ப்போடு இருக்கையிலும்
பேசாமல் இருக்க முடிகிறதா
என சரி பார்த்து கொள்ள வேண்டும்

ஒரு காதலியை கைவிடுவது போலவோ
புகைப்பதை கைவிடுவது போலவோ,  
இல்லை ஒரு ஊன்றுகோலை கைவிடுவது போலவோ
அத்தனை கடினம் ஒன்றுமில்லை
ஒரு நட்பை கைவிடுதல்



குழந்தைகளின் சமையல்

அரிசி களைந்து
பிளாஸ்டிக் குடுவையில் கொட்டி
அடுப்பில் ஏற்றி விட்டாள்

அரிசி வெந்தாதானே குழம்பு
என மற்ற குழந்தைகளை
அமைதி படுத்தி,

சூடான அரிசியை இறக்கிவிட்டு
ஒருமுறை வாயிலும்
விரல் வைத்து கொண்டாள்

பசியில் பரபரத்தவர்களிடம்
பத்து கையா இருக்கு என
நெட்டி முறித்து கொண்டாள்

வாசனை பிடித்து
நானும் போய்  வாசலில்  நின்றேன்

இன்னைக்கு
சோறு கொஞ்சம் கொழஞ்சிடுச்சு
என சொல்லி கொண்டே பரிமாறினாள்

உப்பு கொஞ்சம்
குறைவு என்றாலும்,
நல்லா இருக்கு”
என சொல்லி வந்து விட்டேன்.

Wednesday, May 12, 2010

நூறு நாட்களை தாண்டி...

ஒரு கவிதைக்கான கணத்தை அனுபவித்து அதை அப்படியே வார்த்தைகளில் வடிக்க போகையில் சரியான சொற்கள் கிடைக்காமல் வெறும் வானம், நிலா, காற்று, பூ, பட்டாம்பூச்சி, அடியே பெண்ணே! என வந்து கொண்டிருந்தால் இது போல கட்டுரை எழுத ஆரமித்து விடுவேன். எனக்கு தகுந்தாற்போல எதாவது விஷயம் கிடைத்துவிடுகிறது. இன்றோடு இந்த நாட்டிற்கு வந்து நான்கு மாதங்கள் ஆகிறது. நூறு நாட்களை தாண்டி வெற்றிகரமாய் ஓடிக்கொண்டு இருக்கிறேன். இளவேனிர்காலைத்தை கடந்து மெல்ல இப்போது தான் வெயிலை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது அமெரிக்கா.

எம்.ஜி.ஆரின் அறிமுகம் போல "நான் வருகையில் என்னை வரவேற்க பனி மழை பொழிந்து" கொண்டு தான் இருந்தது. ஆனால் அடுத்த காட்சியில் எல்லாம் சரியாகிவிடும் என நினைத்தால் அடுத்த பருவம் மாற இரண்டு மாதம் பிடித்தது. வழக்கம் போல விமான நிலைய பரிசோதனை அமோகமாக நடைபெற்றது. விமான நிலைய அதிகாரிகளிடம் நான் வைத்து இருப்பது சாம்பல் எனப்படும் திருநீறுதான் என்பதை நிரூபிக்க பத்து நிமிடம் போராடினேன். என் சட்டை மற்றும் கார்சறாய் பையை சுத்தமாய் காலி செய்து பின்பும் கொஞ்சம் கூட கூச்ச படாமல் அந்த பரிசோதனை கருவி என்னை பார்த்து ஒலி எழுப்பி கொண்டே இருந்தது. எனக்கு பின்னால் வரிசையில் வந்து கொண்டு இருந்தவர்கள் சற்று பயந்து பின்வாங்கினார்கள். அந்த ஒரு நிமிடம் சற்று மிதப்பாக இருந்தது. இரண்டு மூன்று அதிகாரிகள் என்னை சூழ்ந்து கொண்டு ஒரு குற்ற்றவாளி பார்வை வீசினார்கள். இதற்கு மேலும் அமைதியாக இருந்தால் குருதிபுனல் இறுதிகாட்சி கமல் அளவிற்கு மூஞ்சியை மாற்றி விடுவார்களோ என ஒரு சின்ன பதற்றம் தொற்றிகொண்டது. எனது தாயத்தை  கழற்றிய பிறகுதான் சத்தத்தை குறைத்தது.

கைபேசி உபயோகிக்க ஆரமித்ததிலிருந்து கைகடிகாரம் அணியும் பழக்கம் இல்லை. இது பற்றி யாரேனும் தனியாக ஆராய்ச்சி செய்யலாம். இது போலபேரரசுவுக்கும் நல்ல சினிமாவிற்கும்” முடிச்சு போடும் வகையறா நியுயார்க் டைம்ஸ் கட்டுரைகள் தொகுப்பு ஒன்றை படித்து கொண்டு இருக்கிறேன். அதை பற்றி தனியே எழுதுகிறேன். நவார்க் விமான நிலையத்தில் ஆறு மணி நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. வீட்டிற்கு தொலைபேச ஒரு டாலர் சில்லறைக்காக மூன்று டாலருக்கு  ஜூஸ் வாங்கினேன். அது என்ன பசியோ தெரியவில்லை, நான் கொடுத்த நான்கு இருப்பத்தைந்து சென்ட் நாணயங்களையும் முழுங்கி ஏப்பம் விட்டது அந்த தொலைபேசி. போதாகுறைக்கு கடைசியாக ஸ்பானிஷில் வேறு திட்டியது. கடைசியாக ஒரு வழியாக இந்தியானபோலிஸ் வந்து சேர்ந்தேன்.

நான் தங்கபோகும் அறையில் வசிக்கும் நண்பன் வெளியூர் சென்று இருந்தான். அவன் வர எப்படியும் மூன்று மணி நேரம் ஆகும் என தெரிந்தது. என்ன செய்வது என முழித்து கொண்டு இருந்தேன். நைஜீரியா நாட்டை சேர்ந்த சாம் என்பவர் என்னை அழைத்து சென்று ஒரு தேநீர் வாங்கி தந்தார். தான் முதல் முதலில் இந்த நாட்டிற்கு வந்தபோது இப்படிதான் நின்று கொண்டு இருதேன் என்றார். அறிவினான் ஆகுவதுண்டோ என்ற குறள் நினைவில் வந்து போனது.

சென்னையில் மக்கள் வெள்ளத்தில் நீந்தி கொண்டு இருந்து விட்டு வந்தேன், இங்கு ஏழை வீட்டு பாயசத்தில் அகப்படும் முந்திரி போல (உபயம்: வைரமுத்து) மனிதர்களை பல சமயம் காண்பதே அரிது. இந்தியானாபொலிஸ், இந்தியானா மாகாணத்தின் தலைநகரம், அமெரிக்கர்களின் வரலாற்றுக்கு சற்றும் பங்கம் விளைவிக்காதவகையில் இங்கேயும் தங்கியிருந்த நேட்டிவ் அமெரிகன்ஸ் எனப்படும் பழங்குடி மக்களை விரட்டி அடித்து விட்டு குடியேறிகள் அபகரித்ததாக வரலாறு கூறுகிறது (பா. ராகவனின் டாலர் தேசம், தமிழில் அமெரிக்கா வரலாறினை படிக்க மிகவும் உகந்த புத்தகம்.) . சுமார் எழுப்பதைந்து சதம் வெள்ளை இன அமெரிக்கர்களும் இருபத்து மூன்று சதம் கறுப்பின மக்களும் வாழ்கின்றனர். மிச்சம் மீதியை நாமும் சீனர்களும் ஆக்கிரமித்து கொண்டோம். ஆனால் பெரும்பாலும் சாலையில் சீனர்களையோ இந்தியர்களையோ தான் பார்க்க முடிகிறது. முடிந்தவரை பேராசிரியர்கள் அவர்கள் சொந்த நாட்டை சேர்ந்தவர்களையே பெரும்பாலும் பணியில் அமர்த்தி கொள்கின்றனர், மற்றவர்களுக்கும் வாய்ப்பு உண்டு. நமது நாட்டு பேராசிரியகளிடம் அதிகம் மொழி சார்ந்து வேறுபாடுகள் காண முடியவில்லை.



சீனர்கள் தங்களுக்குள்ளாக முடிந்தவரை சீன மொழியிலேயே பேசிகொள்கின்றனர். நான் பணிபுரியும் இடத்தில் ஒரு மலையாள பேராசிரியர் அவரது மாணவர்களிடம் முடிந்தவரை மலையாளத்திலேயே பேசி கொள்கிறார். நம்ம ஊரு ஆளிடம் எவ்வளவு முயற்சி செய்து பார்த்தும் ஆங்கிலத்தை விட்டு வரவில்லை. தமிழர்கள் தெலுங்கு பேசும் மக்களிடம் பழகுவதை விட மலையாளிகளிடம் நெருக்கமாகி விடுவதை பார்க்க முடிந்தது. இந்தியானா தமிழ் சங்க விழாவில் மலையாளிகள் உற்சாகமாக பங்கெடுத்ததை காண முடிந்தது. தெலுகு சங்கம் தனியாக இருப்பதாக சொன்னார்கள். "என்ன தமிழ், தெலுகு செப்பு" என என் உடன் பணிபுரியும் ஆந்திர மக்கள் கோரிக்கை எழுப்பினர், "எனக்கு புரியும், தமிழில பரா" என்றாள் மலையாளம் பேசும் ஒரு பெண்.

வகுப்புகள் தொடங்கி, நாளொரு அசைன்மன்ட் பொழுதொரு ப்ராஜக்ட் என நாட்கள் நகர துவங்கியது. எனது வீட்டில் இருந்து வகுப்பிற்கு செல்லும் நீண்ட உறைபனி மூடிய சாலைகளும், இலைகளை இழந்து உறைந்த புகைப்படமாய் நிற்கும் மரங்களும் வெறுமையை கூட்டிய வண்ணமே இருந்தது. சென்னையில் தனிமையில் தெருக்களில் நடந்த நாட்கள் மிக குறைவு, உடன் நண்பர்களோ அல்லது யுனிகார்னோ வரும். சில சமயம் இரண்டையும் இழந்தது பற்றி யோசிக்க தோன்றும். ஆனால் வெள்ளை திரை கொண்டு மூடபட்ட தெருக்களும், அந்த பளீர் வெள்ளை திரையில் பச்சை நிற சாந்து தீற்றல் போல ஆங்காங்கே முளைதெழுந்த புற்களும் நாளடைவில் பழகி போனது.

சரியாக மூன்று நிமிடம் மட்டும் நிறுத்தத்தில் நிற்கும் பேருந்துகளும், எப்போதும் முகத்தில் ஓட்ட வைக்கப்பட்ட உதிரி புன்னகைகளும் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்தியானாபோலிஸ் நூலகத்தில் உறுப்பினர் ஆனேன், மிக பெரிய நூலகம், ஒருவர் அதிகப்பட்சமாக எழுபத்திரண்டு புத்தகங்கள் எடுக்கலாமாம். கால் சாகன் எழுதிய "காண்டக்ட்" என்னும் நூலை எடுத்து வந்து வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டு இருக்கிறேன். நூலகத்திற்கு சென்ற ஒரு நாள், இந்தியானா "உலக போர் நினைவிடம்" காண நேரிட்டது.



போர் முனையில் இருந்து எழுதிய கடிதங்களின் வரிகளை செதுக்கி ஒரு ஸ்தூபி எழுப்பி இருக்கின்றனர். சிறிது நேரம் நின்று அந்த கடிதங்களை படித்து கொண்டு இருந்தேன், ஒரு வரி விடாமல் அத்தனையும் திரைப்படங்களில் பயன்படுத்தி விட்டிருந்தனர். இரட்டை கோபுரங்கள் தாக்கபட்டதை தவிர எந்த நேரடியான யுத்தமும் நடக்காத நாடு. ஆனால் ஆண்டுதோறும் அதிக பட்ச போர் பற்றிய படங்களை எடுக்கும் நாடு அமெரிக்கா என எங்கோ படித்து நினைவில் வந்தது.

நான் நினைத்தது போல அல்லாமல் மாறுதலுக்கு சீக்கிரமே பழகிவிட்டேன். அதீதத்தின் ருசி என்னும் மனுஷ்யபுத்திரனின் கவிதைகளை புரட்டி கொண்டிருந்தேன், ஆச்சர்யமாக "மாறுதல்களுக்கு பழகுதல்" என்ற ஒரு அழகான கவிதை இருந்தது.

"நாம் பயந்தது போல
அது
அவ்வளவு மோசமாக இல்லை
என்றபோதும்
எல்லாவற்றிலும்
அது ஒரு திடுகிடலை உருவாக்குகிறது


நாம் விரும்பியது போல
அது
அவ்வளவு மகத்தானதாக
இல்லை என்றபோதும்
நமது உறைந்த நினைவுகளிலிருந்து
அது ஒரு சிறிய மறைவிடத்தை தருகிறது


நாம் பற்றிக் கொள்ள விரும்பியதுபோல
அது ஒரு மீட்பரின் கைகளே என்றபோதும்
சில சமயம் அதன் குளிர்ந்த தன்மை
நம்மை நிம்மதியிழக்க வைக்கிறது ………………….."


குளிர்ந்த தன்மை நிம்மதி இழக்க செய்யும் பொழுதுகளில் இப்படி ஒரு கவிதையையோ ஒரு இளையராஜாவின் பாடலையோ பற்றி கொள்ள முடிகிறது.