Wednesday, February 2, 2011

எஸ். ராமகிருஷ்ணனின் உறுபசி

மூன்று வருடங்களுக்கு முன்னால் துணையெழுத்து, கதாவிலாசம் எல்லாம் படித்தபின் இவர் வேறு என்னவெல்லாம் எழுதி இருக்கிறார் என நண்பரிடம் கேட்க அவர் பரிந்துரைத்த புத்தகம் உறுபசி. துணையெழுத்து, தேசாந்திரி ஆகிய நூல்களின் மொழியும், உறுபசியின் மொழியும் முற்றிலும் வேறுப்பட்டு இருந்தது. வெகுஜன பத்திரிக்கைகளில் தென்பட்ட அவரது எழுத்து நடையில் இருந்த நெகிழ்ச்சி தன்மை முற்றிலும் இல்லாமலாகி ஒரு உலர்ந்த நடைக்கு தயார் படுத்தி கொள்ள வேண்டியிருந்தது. மூன்றாண்டுகள் கழித்து, சமீபத்தில் உறுபசி மீண்டும் வாசித்தேன்.

கல்லூரி வாழ்கை என்பது நமது சுதந்திர வாழ்க்கைக்கான திறவுகோல். முற்றிலும் வித்யாசமான மனிதர்களுடான அறிமுகங்கள் கல்லூரிகளில் தான் நிகழ்கிறது. சிலருடன் நாமாக சென்று பழக விரும்புகிறோம், தாமாக நம்மை நோக்கி வரும் சிலரை தள்ளி விடுகிறோம். கூட படிக்கும் வேறு சில நண்பர்களை பார்த்து பொறாமை படுகிறோம், ச்சே, அவன மாதிரி நாம இல்லையே என்று நம்மை எங்க வைத்த சிலரையாவது கண்டிருப்போம். எத்தனையோ காரணங்களுக்காக நாம் அந்த நண்பர்களை பார்த்து பொருமி இருக்கலாம், அவன் பெண்களிடம் பேசுகின்ற முறை பார்த்து, கலை நிகழ்சிகளில் வெற்றி சூடுவதை எண்ணி என. அப்படி விஸ்வரூபம் எடுத்து நின்றவர்கள், நம் கண் முன்னாலேயே தீயிலிட்ட காகிதத்தில் இருந்த வார்த்தைகள் போல கரைந்து போய் விடுகையில் ஏற்படும் அதிர்ச்சி சாதாரணமானது அல்ல. உள்ளுக்குள் அவனை நாம் ஆதர்ஷித்து இருந்தாலும், மெல்ல அவன் நம் கண் முன் அழிவதை பார்ப்பதில் ஒரு வகையான குரூரம் கலந்த சந்தோசம் இருக்கிறது போலும்.

சம்பத் என்ற கல்லூரியில் தமிழ் இலக்கியம் ஒன்றாக படித்த நண்பனின் மரணத்தில் சந்திக்கும் மூன்று நண்பர்களின் பார்வையில் விரிகிறது இந்த நாவல். அழகர், மாரியப்பன்,ராமதுரை என்ற அந்த மூவருக்குமே சம்பத் மேல் ஒரு விதமான ஈர்ப்பு இருந்திருகிறது. அதே போல மூவருமே, சம்பத் மற்றவர்களுடன் தான் நெருக்கமாக இருக்கிறான் என நினைகிறார்கள். எல்லார் மேலும் ஓர் தீவிரமான பாதிப்பை செலுத்தி அதே சமயம் அவர்கள் மூவரிடமும் ஒட்டுதல் அதிகம் இல்லாமல் வாழ்ந்திருக்கிறான். நேரடியாக ஆசிரியரின் குரலில் வெளிபடாமல் சம்பத் பெரும்பாலும் அந்த மூவரின் பார்வையிலும், அவனது கல்லூரி தோழி யாழினி மூலமாகவும் வெளிபடுகிறான்.


முதலில் அழகர் பார்வையில் நாவலில் சம்பத் அறிமுகமாகும் இடமே கொஞ்சம் கவித்துவமானது. அழகரும் அவனும் டெல்லியில் ஓரிடத்தில் தீப்பெட்டி வாங்குகையில், அதில் அவனது ஊர் பெயர் இருப்பதை பார்த்து சந்தோஷப்பட்டு கொள்கிறான். அழகரிடம், லைட்டரில் உள்ள தீ எனக்கு பிடிப்பது இல்லை, அது நேர்கோடாக எரிகிறது, இதோ இந்த தீ குச்சி போல ஒரு நடுக்கமோ அலைதலோ இல்லை என்கிறான். அழகர் தமிழ் இலக்கியம் படித்தாலும், முடித்த பின்பு ஒரு கொரியன் அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்து தற்போது சற்று வசதியாக வாழ்கிறான். தன் மனைவியுடன் திரையரங்கிற்கு வரும் அழகர், சம்பத்தை ஒரு விபசாரம் செய்யும் பெண்ணுடன் பார்கிறான். சம்பத் அது பற்றிய எந்த சங்கடமும் இல்லாமல், அவளை அழகருக்கு அறிமுக படுத்துகிறான். மேலும், உன் மனைவி கர்ப்ப தடை சிகிச்சை செய்து கொண்டாளா? இடுப்பு சற்று பெருத்து இருகிறதே என சீண்டி விட்டு செல்கிறான்.

அந்த சீண்டலால் கோவப்பட்டு சம்பத்தை பற்றி ராமதுரையுடன் புலம்பும் அழகரை மீண்டும் சந்திக்க வரும் சம்பத், "உன்னிடம் பேச வேண்டும்" என சொல்லி கடற்கரைக்கு அழைத்து சென்று அவனிடம் ஏதும் பேசாமலே திரும்பி வருகிறான். நீண்ட நாள் கழித்து மீண்டும் பார்கையில், ஒரு பெண்ணை தன் மனைவி என அறிமுகம் செய்து வைத்து, கரும்பு ஜூஸ் குடிக்கலாமா என கேட்கிறான். அந்த கடைக்காரனிடம், இந்த கரும்பு பிழியும் இயந்திரம் எவ்வளவு விலை, ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாரிக்கலாம் என தெரிந்து வைத்து கொள்கிறான். வீட்டில் தண்ணீர் பிடித்து வைக்க பெரிய பிளாஸ்டிக் வாலிகளை வாங்கி கொண்டு, தன் மனைவி ஜெயந்தியுடன் செல்கிறான்.

அடுத்த காட்சியில், அழகரை தன் சொந்த ஊருக்கு அழைத்து செல்லும் இடத்தில், சிறு வயதில் கோவிலுக்கு பொங்கல் வைக்க போன இடத்தில் தன் உடையை அணிந்திருந்த தோழியிடம் வம்பு செய்து அந்த உடைகளை பிடுங்கியதை பற்றியும், அதனால் அவள் இறந்து போனதை பற்றியும் ஒரு ஆழ்ந்த குற்ற உணர்ச்சியுடன் விவரிக்கிறான். வீட்டில் அவனுக்கும் அவனது தந்தைக்கும் கைகலப்பு ஏற்பட்டு விறகு கட்டை கொண்டு அவரை மூர்கமாய் தாக்கி விட்டு ஓடி வருகிறான்.

லாட்டரி டிக்கட் வாங்குவதில் ஆர்வம் ஏற்பட்டு, ஒரு குறிப்பிட்ட கடையில் சீட்டு வாங்கினால் கொள்ளை லாபம் என, அந்த ஊரிற்கு  வந்து ஒரு அறை எடுத்து தங்கி, அங்கு டெலிபோன் பூத்தில் வேலை செய்யும் ஜெயந்தி மேல் விருப்பபட்டு அவளை திருமணம் செய்து கொள்கிறான். சென்னையில் ஒரு சிறிய அறையில் குடி ஏறி, புலனாய்வு இதழில் வேலைக்கு சேர்கிறான். பின் ஒருநாள், நாட்டில் நடக்கும் கொலை, கற்பழிப்பு ஆகிய செய்திகளை தயாரித்து தயாரித்து அவை எல்லாம் நானே செய்வது போல ஆகி விடுகிறது என சொல்லி வேலையை விட்டு விடுகிறான். நாவலில், சம்பத்தின் சித்திரம் உத்வேகத்துடன் உருவாகி வரும் இடங்கள் இரண்டு. தன் மனைவியுடன் சேர்ந்து பூந்தொட்டிகள் செய்து விற்கலாம் என முடிவு செய்யும் இடமும், கல்லூரி காதலி யாழினி மூலமும், அழகர் மூலமும் வெளிப்படும் அவனது கல்லூரி வாழ்க்கை பற்றிய காட்சிகளும்.

இந்த கல்லூரி சம்மந்தமான காட்சிகள் மட்டும், பாலகுமாரனின் நாவல் ஒன்றுடன் ஒப்பு நோக்க சாத்தியமானது. சிநேகமுள்ள சிங்கம் என்ற அந்த நாவல்,  சென்னை கடற்கரையை ஒட்டி உள்ள "ஒரு" கல்லூரியில் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவன் ஒருவனை பற்றியது. தமிழ் பிரிவுகள் மட்டும் மற்ற பிரிவுகளை விட மட்டம் என என்னும் போக்கு கல்லூரியில் உள்ளது என என்னும் அவன் அதை மாற்ற சில முயற்சிகள் செய்கிறான். அவளுக்கு உறுதுணையாக அவனது வகுப்பு தோழி ஒருத்தி நிற்கிறாள். அவளது தந்தை "தமிழினம்", "தமிழ்பற்று" என பேசும் அரசியல்வாதியாக அறிமுகமாகிறார். இவனை பயன்படுத்தி கல்லூரிக்குள் அரசியல் செல்வாக்கை நுழைக்கிறார். அவருடன் இணைந்து, நாத்திக பிரசாரம், மேடை முழக்கங்கள் என செல்கிறான். கடைசியில் ஒரு கொலையில் சிக்கும் அவனை சர்வ சாதரணமாக கடந்து செல்கிறார் அவர்.

சம்பத்தின் கல்லூரி கால வாழ்கையும் இதேதான். சற்றே குறைய ஒரு பத்து வருட வயது இடைவெளி உள்ள எஸ்.ரா, பாலகுமாரன் இருவர் நாவல்களிலும் உருவாகி வரும் இந்த சமூக சித்திரம் ஒரு வகையில் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்க வல்லது. ஒரு அரசியல் அதன் ராட்சச கரங்களால் நசுக்கி எறியும் உணர்ச்சி மிகுந்த சாமானியர்களின் சித்திரம் இது.

மேலும், எஸ்.ரா சில விஷயங்களை மிகவும் நுட்பமாக தொட்டு சென்றுள்ளார். உதாரணமாக, அழகர் ராமதுரையையும் ஜெயந்தியையும் இணைத்து பேசும் பகுதி. சம்பத் மரணத்திற்கு பின் ஒரு காட்டிற்கு பயணம் செய்யும் இடத்தில், ஜெயந்தியை முன்னிறுத்தி நண்பர்கள் இருவருக்கும் சின்ன சண்டை வருகிறது. படிக்கும் நமக்கும், அழகர் அப்படிதான் கேட்பான்  என்றே தோன்றுகிறது. நாவல் முழுதும் அழகருடைய மனதை நுட்பமாய் விவரிக்கும் ஆசிரியர், இந்த சந்தேகத்திற்கான காரணத்தை மெல்ல, சம்பத் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு இருக்கும் இடத்திலேயே அடிகோடிடுகிறார். சம்பத்தை காண வந்த அழகர், ஜெயந்தி பசியோடு இருக்கிறாள் என எண்ணி அவளுக்கு உணவு வாங்க இரண்டு மூன்று கடை ஏறி நல்ல சாப்பாடு வாங்கி வருகையில், அவள் ராமதுரை கொண்டு வந்த உணவை சாப்பிட்டு கொண்டு இருக்கிறாள். அங்கேயே அவர்கள் இருவரையும் இணைத்து ஒரு விதமான எண்ணம் அவனுக்குள் உருவாகிவிடுகிறது.

இறுதியாக சம்பத் இறந்து விட அவனை அவனது வீட்டு வாசலில் கிடத்தி வைத்திருக்கும் அந்த அவல சித்திரம் நாவலில் எந்த அவசரமும் இல்லாமல், நிதானமாக விவரிக்கபடுகிறது. நாவலின், நெகிழ்ச்சி தன்மையற்ற உலர்ந்த நடை அபாரமாக கைகொடுக்கும் பகுதி இது. வாசலில் சம்பத் கிடைத்த பட்டிருக்க, ஜெயந்தி வரிசையில் நின்று குடத்தில் தண்ணீர் பிடித்து வருகிறாள். தண்ணீர் அவள் உடலை நனைக்க, உடை மாற்ற வேறு அறை இல்லாததால் தயங்கி தயங்கி பிணத்தின் அருகில் அமர்ந்திருக்கிறாள். ஓர் எறும்பு அவன் சட்டை காலரை மெல்ல கடந்து செல்கிறது, அதை தட்டி விட கூட தோன்றாமல் அப்படியே பார்த்தபடியே அமர்ந்திருக்கிறாள்.

நிச்சயம் படிக்க வேண்டிய தமிழ் நாவலில் இதுவும் ஒன்று.
நாவல்:உறுபசி
ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பகம்: உயிர்மை 
ஆன்லைனில் வாங்க : http://www.udumalai.com/?prd=&page=products&id=679