Sunday, November 21, 2010

என் கவலை எல்லாம் என்னவென்றால்?


அமெரிக்கா வந்த இந்த பதினோரு மாதங்களில் என் அறை கதவு மூன்றே முறை தான் தட்டப்பட்டிருக்கிறது . அவசரமாக வெளியே கிளம்பி கொண்டிருக்கையில், எனக்காக ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்க முடியுமா என கேட்ட அந்த மக்கட்தொகை கணக்கெடுப்புக்கு வந்த பெண் ஒருமுறையும், மாடான் கூமார் இருக்கிறாரா என கேட்ட அந்த கூரியர் காரர் இரண்டாம் முறையும், கடைசியாக, வெளியே செல்ல அழைத்து போக வந்த நண்பனும் தட்டி இருக்கிறார்கள். லேசாக மழை பெய்து கொண்டிருந்த ஒரு வெள்ளி மாலை தீடிரென்று நான்காவது முறையாக கதவு தட்டப்பட்டது. ஒரு விதமான ஆனந்தமும் ஆச்சர்யமும் சூழ, கதவின் லென்ஸ் வழியாக பார்த்தேன், வெள்ளை தாளுடன் இருவர் நின்று கொண்டு இருந்தனர். கதவை திறந்த உடன், சடாரென்று ஒரு துப்பாக்கியை உருவி “Don’t Move” என சொல்லுவார்களோ என ஒரு விபரீத ஆசை தோன்றி மறைந்தது.

அந்த ராஜேஷ்குமார் பாணி கற்பனையை சற்றே ஓரம் கட்டி விட்டு கதவை திறந்தேன், மருத்துவ கல்லூரி மாணவர்கள் என்றனர், என்னை சந்தித்ததில் இருவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி என்றார்கள், நான் பதில் சொல்ல வாயை திறப்பதற்குள், என் வாழ்க்கையின் பொன்னான ஐந்து மணித்துளிகளை  அவர்களுடன் பகிர்ந்து கொள்ள போவதற்காக ஒருமுறை நன்றி சொன்னார்கள். என் குடும்ப நலன் பற்றி ஏதேனும் விசாரிப்பார்களா என்று எதிர்பார்த்தேன், சற்றே ஏமாற்றம். பின், அவர்கள் உருவத்திற்கு சற்றும் பொருத்தமில்லாமல் ஒரு அட்டையை திறந்து, அதில் பல வண்ணங்களில் இருந்த மெழுகு வத்திகளின் படங்களை  காட்டி இதில் ஏதேனும் ஒன்றை வாங்கி கொள்கிறீர்களா என்றனர். பதிமூன்றே டாலர் மதிப்புள்ள அதை நான் வாங்கினால், அதன் மூலம் கிடைக்கும் ஏழு டாலர் லாபத்தை கொண்டு அவர்கள் ஒரு குழுவாக வியட்நாம் சென்று சேவை புரிய போவதாக சொன்னார்கள். இருபது டாலர் மதிப்புள்ளவையும் உண்டு என்ற உபரி தகவலும் கொடுத்தனர்.

மெழுக்கு வத்தியின் வண்ணத்தை நான் தேர்வு செய்தால், இரு வாரங்களில் வீட்டிற்கே வந்து தந்து விடுவதாக வாக்குறுதி அளித்தனர். இது வரை வாங்கியவர்கள் பற்றிய விவரம் அடங்கிய தாள், முதன் முதலின் என் பெயரை தாங்குவதற்காக காத்திருந்தது. எனக்கு மெழுகு வத்தி எதுவும் வேண்டாம், இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து சங்கடமான புன்னகை ஒன்றை உதிர்த்தனர், ஆனால் நீங்கள் வியாட்நாம் செல்ல பணம் தருகிறேன் என்றேன். சற்றே அதிர்ச்சியுடன் பார்த்து, நிஜமாகத்தான் சொல்கிறீர்களா? என்றனர். உள்ளே வாருங்கள் என அழைத்து, பணமாகவா இல்லை காசோலையா என்றேன், “MSG Fund”என்ற பெயரில் காசோலையாக கொடுத்தால்  வரவு வைத்து கொள்ள வசதி என்றனர். காசோலையை வாங்கி கொண்டு மீண்டும் நலன் விசாரிப்பு, விடைபெறல்.

மறுநாள் செய்திகளை ஆராய்ந்து கொண்டிருந்தேன், வியாட்நாம் பற்றி ஒன்றும் செய்தி இல்லை, குறைந்தபட்சம் ஒரு வழிபறியாவது இருக்கும் என எதிர்பார்த்தேன், ம்ஹும்!. அப்படி என்றால் வியாட்நாமில் நல்ல மழை எல்லாம் பெய்து, மக்கள் சுபிட்சமாக இருப்பதாகத்தான் பொருள் கொள்ள வேண்டி இருந்தது. பிலிபைன்சில் தான் எதோ சீரழிவு என செய்தி இருந்தது. அவர்கள் பிலிப்பைன்ஸ் என்றுதான் சொல்லி இருப்பார்கள் என்று சமாதான படுத்தி கொண்டேன். என் கவலை எல்லாம் என்ன வென்றால், அவர்கள் போகும் போது நான் என்ன படிக்கிறேன், இன்னும் எத்தனை ஆண்டுகள் இங்கு இருப்பேன் என கேட்டு விட்டு சென்றதுதான். அடுத்த முறை உலகில் எங்காவது சீரழிவு நடந்தால், நான் இருபது டாலர் கொடுத்து மெழுகு வத்தி வாங்க வேண்டி இருக்கும்.


                                                                     ***

இந்த ஊரில் அறிமுகமே இல்லாத ஒருவர், எதிரில் வருகையில் நம்மை பார்த்து சிரித்தால், நாம் தலை கலைந்திருக்கிறதோ இல்லை முகத்தில் பவுடர் திட்டு திட்டாய் படிந்திருக்கிராதோ என பதற்றபடாமல், பதில் புன்னகை கொடுத்தல் போதுமானது என்பதை வந்த ஒரு வாரத்திற்குள் புரிந்து கொண்டேன். அப்படி ஒருமுறை சிரித்து வைத்துவர், அடுத்த முறையும் சிரிக்க மட்டும் தான் செய்வார் என்றும் தப்பு கணக்கு போட்டு விட முடியாது. தூரத்தில் இருந்து சிரிக்காமல் வந்தவர் நம் அருகில் வந்ததும் தீடிரென்று " Hey, How’s it going?” என கேட்டால் நிலை குலையாமல் இருக்க வேண்டும். அதே சமயம் அந்த கேள்வியை நீங்கள் பரீட்சை கேள்வி போல் பீதியுடன் பார்த்து, நாணயஸ்தனாக சமீபத்திய பல் வலியையோ, வயுற்று வலியையோ  அவர்களிடம் விளக்குவது அவ்வளவு உசிதமான காரியம் இல்லை என்பதை புரிந்து கொள்ள மட்டும் சில மாதங்கள் தேவைப்பட்டது.

அமெரிக்கர்களிடம் பழகி, ஒரு பழக்க தோஷத்தில் எதிரில் வரும் நம்ம ஆட்களை பார்த்து சில காலம் சிரித்து வைத்தேன். அவர்கள் வானம், பூமி என ஏதோ தொலைந்ததை தேட, மெல்ல அவர்கள்  தொடங்குவதற்குள் இப்போதெல்லாம் நான் தேட துவங்கி விட்டேன்.

நாளொரு மேனியுமாய் பொழுதொரு வண்ணமுமாய் மாறி கொண்டிருந்த மேப்பில் மரங்களெல்லாம் இலைகளை உதிர்க்க தொடங்கிய ஒரு மாலையில், கல்லூரி நூலகம் வழியாக சென்று கொண்டு இருந்தேன். எப்போதும் செல்லும் வழியில் செல்லாமல், கல்லூரி மைதானத்தை ஒட்டிய ஒரு ஒற்றையடி பாதையில் சென்று கொண்டு இருந்தேன். ஸ்ட்ரா நீளம் சுண்டு விரல் அளவு இருந்தால், ஒரு கோப்பையை உதட்டுக்கு எவ்வளவு தூரம் வைப்போமோ, அந்த தொலைவில் இரு உதடுகளை வைத்தப்படி இருவர் வழியில் நின்று கொண்டு இருந்தனர். "இதெல்லாம் நான் கண்டுக்க மாட்டேன்"  என்ற பாவனையில் சற்றே அவர்கள் இருவர் முகத்தையும் பார்க்கும் தூரம் நெருங்கி விட்டேன். திரைகதையில் ஒரு சின்ன மாறுதல் என்னவென்றால், அந்த அமெரிக்க "அழகி"யுடன் நின்று கொண்டு இருந்தது நம்ம ஊரு பையன்.

ஸ்ட்ராவே இல்லாத நிலைக்கு அவர்கள் சென்று திரும்புகையில், சடாரென்று அவன் என்னைத்தான் பார்க்க நேரிட்டது. அவன் என்னைப் பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரித்துவிட்டு சென்றான், அது தெரிந்த சிரிப்பு போலவும் இருந்தது, தெரியாதது போலவும் இருந்தது. என் கவலை எல்லாம் என்ன வென்றால், அடுத்த முறை அவனை பார்த்தால், “Hey How’s it going?” என கேட்காலாமா? ஒருவேளை நான் கேட்டால் அவன் பதில் சொல்வானா என்பது தான்.
                                                                          ***