Wednesday, November 4, 2009

திருவான்மியூர்

பலகை வாரவாதி சாலையிலிருந்து இடப்புறம் திரும்பி கரடு முரடாக இருந்த கச்சாப் பாதையில் சிறிது வயல் வெளியும் நிறையவே கட்டாந்தரையாக இருந்த பிரதேசத்தில் அரை மைலுக்கும் மேல் நடந்தால் திருவான்மியூர் கோயிலின் மேற்கு கோபுரம் வரும். சம்பந்தர் பாடி புகழ் பெற்ற தளம் இது. மருந்தீஸ்வரர் உடன் உறையும் திரிபுர சுந்தரி கோவில் கொண்ட இடம். திருவான்மியூருக்கு வழி 1950களில் இப்படிதான் சொல்லப்பட்டது.



பலகை வாராவதி என்பது இப்போது பாடாவதி ஆன பெயர், அது முத்துலட்சுமி சாலையாய் உருமாறி, கல்கி சாலை என அழைக்கப்பட்டு, எம். எஸ். சுப்புலக்ஷ்மி சாலை ஆகி பழைய மகாபலிபுரம் சாலை என அழைக்கப்பட்டது. எல்லா வளர்ச்சியும் அடைந்த பின் நம் வழக்கப்படி அதற்கு ராஜிவ் காந்தி சாலை என பெயிரடப்பட்டது.

“நம்ம காசுல போடுற ரோடுக்கு ஏன் தலைவர்கள் பேர வைக்கிறாங்க, இதுல சுங்க வரி வேற. இதுக்கு, கோயிலுக்கு லைட் வாங்கி போட்டுட்டு தன் பேர போட்டுகிறவங்க எவ்வளவோ மேல்” (உபயம்: என் ரூம் மேட்)

எல்லாரையும் போல எங்களுக்கும் முதலில் திருவான்மியூரில் தான் வீடு கிடைத்தது அல்லது நாங்கள் கடற்கரையை ஒட்டி தான் வீடு தேடினோம். எனக்கு முன்னாலேயே வந்து வீடு பிடித்து விட்ட என் நண்பன், நான் சென்னை வந்து இறங்கியபோது, OMRல டைடல் பார்க் வந்துடு, அப்படியே அங்க இருந்து ஜெயந்தி தியேட்டர் சிக்னலுக்கு வந்துட்டு ஒரு ஆட்டோ புடி, ஆட்டோகாரன் கிட்ட, Seaward Street அஜீத் வீட்டுக்கு போகனும்னு சொல்லு என்றான்.

ஆட்டோகாரனிடம் இதை அப்படியே ஒப்பித்தேன், “அஜீத் வீடா, எனக்கு சரத் குமார் வீடு தானே தெரியும் என்றான்” (கிட்டத்தட்ட பாலவாக்கம்). கண்டிப்பா அதற்காக சரத் குமார் வீட்டிற்கு பக்கத்தில் வீடு எடுக்க முடியாது. ஒருவாறு என் நண்பனிடம் தொலைபேசி, சுச்சி வீட்டை கடந்து, அஜீத் வீடு வழியாக, யேசுதாசின் சென்னை வீட்டை ஒட்டிய ஒரு சந்தில் இரண்டாவது மாடியில் ஒரு ஆச்பெஸ்டாஸ் கூரை போட்ட வீட்டில் தஞ்சம் புகுந்தேன். அந்த வீட்டை பற்றிய மேல் விபரம் வேண்டுபவர்கள் பார்வை சிறுகதையின் வர்ணனைகளை பார்க்கவும்.

அலுவலகத்தில் சேர்ந்த முதல் ஒரு வருடம் எனது வாசம் திருவான்மியூரில் தான். ஆனால் அங்கே ஒன்றும் வாசம் நன்றாக இருந்ததில்லை, எப்போதும் உப்பும் மீனும் கலந்த காற்று. கையில் முதன் முதலில் காசு சேர்ந்த சந்தோஷத்தில் அலைந்த நாட்கள் அவை. வந்த புதிது என்பதினால் வண்டி வாங்கி இருக்கவில்லை. திருவான்மியூர் கடற்கரையிலே பல மாலை கழிந்தது. ஐந்து நிமிடத்தில் எட்டி விட கூடிய தூரத்தில் கடல். தூக்கம் வராமல் புரளும் இரவுகளில் வெளியே வந்தால் கடல் அலைகள் ஓயாமல் புரளும் இசை கேட்கும்.

பல வீடுகளில் மொட்டை மாடிகளிலேயே எல்லோரும் படுத்திருந்தனர். கடல் காற்றினாலோ என்னவோ, கொசு அதிகம் இருக்கவில்லை. அந்த சிறிய அறையில் தூங்க இடம் இல்லாமல், வெளியே படுத்து கொண்டு தூங்கிய இரவுகளில் நீண்ட நாட்களுக்கு பின் நிலவை பார்த்து கொண்டே தூங்கியது நினைவு இருக்கிறது. கடலில் இருந்து நேரடி தொடர்பு என்பதால், நிலத்தடி தண்ணீருக்கு எப்போது ரோஷம் அதிகம். அவ்வளவு உப்பு ஆகாது, திருமணம் வரை தலை முடியை காக்கும் பொருட்டு இரண்டு மாடி கீழே இறங்கி அடி பம்பில் தண்ணீர் அடித்து கொண்டு வருவோம்.

நீண்ட நாட்களாக என்னிடம் எதையோ பேச துடிப்பது போல் பார்த்து கொண்டிருந்த அந்த பக்கத்து வீட்டு குட்டி பெண், ஒரு முறை நான் தண்ணீர் பிடிக்கையில் தான் வந்து என்னிடம் பேசியது. “அண்ணா, அந்த டாங்க்ள தண்ணீ இருக்கு, மாசம் இருபத்து ரூபா கொடுத்த அதுல இருந்த பிடிச்சுக்கலாம்” என்றாள்.

எதிர்கால கனவுகள் சுமந்த பேச்சுக்களை பல நாட்கள் அந்த மொட்டை மாடி சுவர்கள் தான் கேட்டு கொண்டிருந்தது. ஒரு வருடத்தில் வெளிநாடு, இரண்டு வருடத்தில் பதவி உயர்வு, ஊர்ல அப்பாவுக்கு ஒரு புது வண்டி என. அதற்கு முன்பு அந்த வீட்டில் இருந்தவர் அலுவலகம் மூலம் வெளிநாடு சென்று இருக்கிறார் என்பது கூடுதல் சந்தோஷம் அளித்தது. ஆனால் அதையே காரணம் காட்டி வீட்டு ஓனர், “ராசியான வீடு தம்பி என்று ஒரு வருடத்தில் இரண்டு முறை வாடகை உயர்த்தி விட்டார்”. இத்தனைக்கும் எனது அறை நண்பனின் மாமா முறை அவர்.

திருவான்மியூர் கடற்கரையில் இருந்து தெரிந்த பெசன்ட் நகர் கடற்கரையை ஒருமுறை நடந்தே கடந்தோம். சூரிய உதயம் பார்க்க அலாரம் வைத்து எழுந்தோம். டீ.வீ தொடர் நடிகர்கள் நடிகைகள், தொலைகாட்சியில் செய்தி வாசிபவர்கள், பயில்வான் ரங்கசாமி, காதல் சந்த்யா என பார்த்த அத்தனை விஷயங்களையும் பெருமையாய் ஊரில் சொல்லி கொண்டு திரிந்தோம். கையில் காசு பார்த்த சந்தோஷத்தில் புதிது புதிதாய் புத்தகம் வாங்க தொடங்கினேன்.

இப்படி எல்லாம் எழுதுவாங்களா என வியந்தது அந்த சிறிய வீட்டில் தான் தொடங்கியது, பிடித்த அத்தனை எழுத்துகளின் சொந்தகாரர்களையும் பார்த்து விடுவது என முடிவு எடுத்தும் அங்கேதான். சுஜாதா படித்து விட்டு அவரை சந்திக்கும் முன் அவரது எல்லா எழுத்துக்களையும் படிக்க வேண்டும் என அவரது புத்தகங்களை படித்து தள்ளினேன்.

மீண்டும் ஒருமுறை வாடகை ஏற்றப்பட்ட போது, மனம் தாங்காமல் அங்கிருந்து கிளம்ப வேண்டியதாயிற்று. இப்போதும் விருப்பமான அந்த கோவில், பெரும்பாலும் யாருமற்ற அந்த கடற்கரை தெருக்கள், கடைசி வரை சிரித்த படியே பரிமாறிய அந்த வேப்பமரத்தை ஒட்டிய பாட்டி மெஸ், RTO Bus Stop எல்லாம் அவ்வபோது நினைவு வருகிறது.

இப்போது யாரவது முதல்ல சென்னைல எங்கே இருந்தீங்க என்றால், திருவான்மியூர்!, தி.ஜா தெரியுமா அவர் அங்கதான் கடைசியா வாழ்ந்தாராம். அப்புறம் அந்த கோவில் 1500 வருஷம் பழைமையான கோவிலாம். சம்பந்தர் இந்த கோவில பத்தி பாடி இருக்கிறார். ரொம்ப நல்ல இடம் பார்த்துக்கோ என்றுதான் பேச துவங்குகிறேன்.

எப்போதாவது அந்த கடற்கரைக்கு செல்கையில், கனவுகளோடு திரியும் முகங்களை பார்க்க முடிகிறது. ELT Tag போட்டு கொண்டு சந்தோஷமாய் வருபவர்களோடு நான் பார்த்த எல்லா முகங்களும் வந்து வந்து போகிறது. அதனோடு ஓரமாக சுஜாதாவை கடைசி வரை சந்திக்கவே இல்லை என்ற எண்ணமும்.

Thursday, October 29, 2009

என் ஜன்னல் வழியே # 5

சமீப காலமாய் காந்தியைப் பற்றிய பல செய்திகளைக் கேள்விப் பட்ட வண்ணமே இருக்கிறேன். மிட்டாய், காலை கொடியேற்றம், பேச்சு போட்டி, மாறுவேட போட்டிகளை கடந்த பின் தான் காந்தியைப் பற்றிய சில புரிதல்கள் எனக்கு உருவாக தொடங்கியது. பள்ளி இறுதி வகுப்பில் ஒருநாள், எங்கள் ஊர் நூலகத்துக்கு சென்று சத்யசோதனை படித்தது நினைவு இருக்கிறது. அவருக்கு அசைவ உணவு சாப்பிட்ட அன்று இரவில் ஆடு கத்துவது போல் கனவு வந்திருக்கிறது என்பதை படித்து அதிர்ச்சி அடைந்தேன். அதே போல் எனக்கும் நேர்ந்திருக்கிறது. மீண்டும் இதே வரிகளை சுஜாதா க.பெ வில் குறிப்பிட்ட அன்று ஒரு மெல்லிய சிரிப்பு வந்தது.

நம்மில் பலரை போலவே அவரும் அப்பாவிடம் இருந்து காசு திருடி இருக்கிறார். மிக எளிய வார்த்தைகள் கொண்ட அந்த புத்தகம் எனக்கு மிகவும் பிடித்து போனது. அப்போதைக்கு என்னால் உள்வாங்கி கொள்ள முடியாத விஷயங்களுக்காக இப்போது மீண்டும் அவற்றை படித்து கொண்டு இருக்கிறேன். சமீபத்தில் அமெரிக்க அதிபரிடம், நீங்கள் யாருடன் உணவு அருந்த அசைப்படுகிறீர்கள் என்பதற்கு, “காந்தி” என பதில் அளித்தார். அதைப் பற்றிய எழுத்தாளர் வாஸந்தி அவர்களின் கட்டுரையை இங்கே காணலாம். அதே போல், அம்பேத்காரையும், காந்தியையும் ஒப்பு நோக்கி, ஜெயமோகனின் ஒரு நீண்ட கட்டுரை அவரது வலைத்தளத்தில் வந்துள்ளது. மிக நேர்த்தியான கட்டுரை, ரசித்து படித்து கொண்டு இருக்கிறேன்.

Indian Born American wins Nobel படிக்க சந்தோஷமாய் இருந்தாலும், அதன் நிதர்சனம் உறுத்துகிறது. திரு. வெங்கடராமன் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நோபெல் பரிசு, நமது உடம்பில் உள்ள செல்லில் ஒரு முக்கிய பங்கு ஆற்றும் Ribosomeன் வடிவத்தை கண்டுபிடித்ததற்கு கொடுக்கபட்டுள்ளது. உண்மையில் மிக சிக்கலான காரியம் அது செய்வது.

எளிதில் புரிந்து கொள்ள இப்படி வைத்து கொள்வோம், முதலில் ஒரு கதையோ, கட்டுரையோ ஒரு ரஷ்ய எழுத்தாளருக்கு அவர் மனதில் எண்ணங்களாக உருவாகிறது. அதை அவர் பதிவு செய்கிறார் என வைத்து கொள்வோம். இப்போது அதை நாம் படிக்க வேண்டுமானால், ரஷ்ய மொழியும் ஆங்கிலம் (அ) தமிழ் தெரிந்த ஒருவர் மொழி பெயர்த்தால் தான் நம்மால் படிக்க முடியும் அல்லவா. அந்த மொழி பெயர்ப்பை கண்காணிக்கும் வேலையைத்தான் செய்கிறது Ribosome. இப்போது மேற்சொன்ன விஷயத்தில் இரு நிகழ்வுகள் உள்ளன என்பதை நீங்கள் ஊகித்து இருப்பீர்கள், ஒன்று பிரதிஎடுத்தல், மற்றொன்று மொழிபெயர்த்தல்.




(மேலே உள்ள படம், நமது செல்லின் குறுக்கு வெட்டு தோற்றம், படத்தில் உள்ள அளவு நேர்த்தியாக ஈஸ்ட்மன் கலர் எல்லாம் இருக்காது. படத்துக்காக சில எடிட்டிங் வேலை செய்யப்பட்டுள்ளது. அதில் strawberry பழ நிறத்தில் உள்ளதே அவை ER எனப்படும் Endoplasmic Reticulum , அதில் உள்ள சிறு சிறு கரிய புள்ளிகள் தான் நோபெல் பரிசு வாங்கி தந்தது )

நமது செல்லின் கருவுக்குள் இருக்கும் செய்திகளை அப்படியே பிரதியெடுத்து வருவது mRNA (Messenger RNA) எனப்படுகிறது. இந்த mRNA என்பது, ஒரு ரஷ்யரின் எண்ணங்களை பிரதி எடுத்ததை போன்ற புரியாத லிபி . இந்த mRNA வில் செய்திகள் மூன்று மூன்று எழுத்துக்கள் கொண்ட வார்த்தைகளின் கோர்வையாய் உள்ளது. ஒவ்வொரு மூன்று எழுத்து வார்த்தைக்கும் நிகரான ஒரு பொருள், அதாவது அந்த ரஷ்ய வார்த்தைக்கு நிகரான தமிழ் சொல் எனக் கொள்வோம், உள்ளது.

அந்த சொற்களை தாங்கி நிற்பது தான் tRNA (Transfer RNA). இப்போது mRNAவில் உள்ள அத்தனை வார்த்தைகளும் மிக சரியாக tRNA வார்த்தைகளாக Ribosomeன் கண்காணிப்பில் மொழி பெயர்க்கப்பட்டு பல சொற்றோடர்கள் கொண்ட ஒரு கதை நமக்கு கிடைக்கிறது . அதுதான் ப்ரோடீன், நம் நிற்க, நடக்க, கதை எழுத, கவிதை எழுத, சைட் அடிக்க தேவைப்படும் அத்தனை சக்தியை தட்டும் ப்ரோடீன். நமது தமிழ் மெட்டில் சொல்ல வேண்டும் என்றால், “ஒரு mRNA ஒரு tRNA சரியாக மொழி பெயர்ந்தால் ப்ரோடீன்”.



சுஜாதாட்ஸ்:

என் கல்லூரி படிப்பு, திருச்சி புனித வளனார் கல்லூரியில், கல்லூரியில் அப்படி ஒன்றும் பிரபலமாகவோ, மற்றவர் கவனத்தை கவர்ந்தவனாகவோ இல்லை. அப்துல் கலாம் எனது வகுப்பு தோழர், அவரும் அப்போது கல்லூரியின் அத்தனை பரிசுகளையும் கவர்ந்து சென்றதாக நினைவில்லை. இதில் எதோ ஒரு நீதி இருக்கிறது

இந்த தொடரின் முந்தையப் பதிவுகள் 1 | 2 | 3 | 4 |

வலி

இன்று ஊருக்கு வருவதாய் நான் யாரிடமும் சொல்லவில்லை, இருந்தால் அம்மா நான் வரும் வரை தூங்காமல் விழித்து கொண்டு இருப்பாள். நான் கோவையில் இருந்து பேருந்து ஏறியது முதல் சரியாக நடத்துனர் ஊர் பெயர் சொல்வதற்கு முன்பு தொலைபேசிவிடுவாள். அவினாசி தாண்டியாச்சா? இன்னுமா பெருந்துறை வரலை?. சரி சங்ககிரி வந்துட்டு கூப்பிடு என ஒரு ஐந்து முறையாவது பேசிவிடுவாள். அதுவும் பேருந்து சிறிது தாமதம் என்றால், அவள் குரலே மாறி விடும், அதனாலேயே நான் அவளிடம் சொல்லவில்லை. இன்று கல்லூரியில் இருந்து கிளம்ப நேரமாகி விட்டது, அந்த தெர்மோடைனமிக்ஸ் ப்ரொபசர் கடைசி வகுப்பில் கழுத்து அறுத்து விட்டார்.

காந்திபுரம் சென்று அங்கிருந்து கிளம்பவே மணி 8 ஆகி விட்டது, எப்படியும் சேலம் போக மணி 12 என்றாலும், ஊத்தங்கரையில் வீடு போய் சேர 2 மணி ஆகிவிடும். அம்மா எத்தனை மணிக்கு படுத்தாலும் காலை ஆறு மணிக்கு எழுந்து விடுவாள். எப்படியும் நான் வந்த பின் ஒரு இரண்டு மணி நேரம் அவள் தூக்கம் கெடத்தான் போகிறது. கல்லூரியில் நடந்த ஒவ்வொன்றையும் அவளிடம் சொல்லாமல் எனக்கோ, வீட்டில் நடந்ததை என்னிடம் சொல்லாமல் அவளுக்கோ அந்த இரவு தூக்கம் கொள்ளாது. நான் நினைத்ததை போலவே, பேருந்து சற்று தாமதமாக தான் வந்து சேர்ந்தது.

ஊரில் லேசாக மழை பெய்து வடிந்து இருந்தது. எப்போதும் பேருந்து நிலையத்தை ஒட்டிய ஓலை கொட்டகையில் தூங்குபவர்கள், பேருந்து நிலைய கட்டிடத்திற்குள் ஒடுங்கி நின்றனர். இரவு ரோந்து வரும் காவலர்களும் அவர்களை ஒன்றும் சொல்லவில்லை. வீடு வந்து சேர்ந்த போது மணி மூன்று, அம்மாதான் கதவு திறந்தாள். கண்ணு என்று அணைத்து ஒரு முத்தமிட்டாள். நான் சற்று குனிய வேண்டி இருந்தது. ஏண்டா குட்டி ஒரு போன் பண்ண கூடாதா? என்றாள். நான் ஏன் பண்ணவில்லை என்பதை அவள் புரிந்து கொண்டிருப்பாள்.

நான் முகம் கழுவி வருவதற்குள், என் லுங்கியும் துண்டும் எடுத்து வைத்து விட்டு, தோசை வார்த்துக் கொண்டிருந்தாள்.

எதுவும் சாப்பிடலதானே?

இல்லை மா.

என்னா வயிறோடா உனக்கு?, பஸ்ல போறதுக்கு முன்ன சாப்டா கூட ஒத்துக்க மாட்டனுதே.

விடுமா பழகிடுச்சு.

ரூம்ல பசங்க எல்லாம் நல்லா இருக்காங்களா? குமார் எப்படி இருக்கான்?

ம்ம்ம்… தோசை செம மா… எல்லாம் நல்லா இருக்காங்க.

அம்மா சற்று திரும்பையில்,

ஏம்மா இந்த கன்னம் கொஞ்சம் வீங்கின மாதிரி இருக்கு?

மெல்ல தொட்டு பார்த்து கொண்டு,

அதுவா இந்த கடவா பல்லுல இரண்டு நாளாவே வலி.

அப்பாட்ட சொன்னயா, எதாவது டாக்டரா பார்த்தாயா?.

இல்லை என்றாள். அப்பா எங்கள் யாரையும் டாக்டரிடம் அழைத்து சென்றதாய் நினைவு இல்லை, முக்கியமாய் அம்மாவை. ஆனால் எப்போது சொன்னாலும், உடனே காசு கொடுத்து விடுவார். எப்போதும் அதற்கு கணக்கு கேட்க மாட்டார். அவருக்கு ஏற்றார் போல், அம்மா உடம்பு சரி இல்லாமல் இருந்து நான் பார்த்ததே கிடையாது. இல்லை ஒருவேளை அப்படி இருந்த சமயங்களை நாசுக்காய் எனக்கு தெரியாமல் மறைத்து விட்டாலோ என்னவோ. ஆனால் அப்பாவிற்கு காய்ச்சலோ, இல்லை அந்த ஒற்றை தலை வலியோ வந்து விட்டால், வீடே ஒரு விதமான சோகத்தில் மூழ்கி விடும். வீட்டில் எல்லாருக்குமே சீக்கோ என்னும் அளவு.

எப்போதும் போல் அந்த சமயங்களில் என்னால் பேச முடிந்ததில்லை. அப்பா அந்த காவி நிற கம்பளியை சுற்றிய வண்ணமே இருப்பார். அப்போதும் அவருடைய வழக்கமான புகை பிடிக்கும் நேரம் தவறுவதே இல்லை. அவரிடம் எப்போதும் வரும் புகை நாற்றம் போல் இல்லாமல் அந்த நாளில் சற்று வேறு மாதிரி இருக்கும். அந்த சமயங்களில், அம்மா அவருக்கு கொடுக்க சொல்லும் சுடு தண்ணீரை கூட, வைத்த உடன் ஓடி வந்திருக்கிறேன். ஒருமுறை அவருக்கு வந்த சளி மூன்று வாரம் நீடித்தது, அப்போதெல்லாம் அப்பா வெளியே செல்வதே இல்லை. முடிந்தால் மாடியில் ஒரு 10 நிமிடம் நடந்து விட்டு வருவார்.

வருத்த வறுத்த கடலையும் கொஞ்சம் வெள்ளமும் வெல்லமும் சாப்பிடுவார். அப்பாவுக்கு என்னமா என்றதற்கு, டாக்டர் தம் அடிக்க கூடாதுன்னு சொல்லிட்டார், அதான் இப்படி சுத்தி சுத்தி வரார் என்றாள். அவள் சொன்னது போலவே, அப்பாவிடம் வரும் அந்த நாற்றம் வர வில்லை. அந்த நாளில் ஒரு முறை நானே அவருக்கு நெஞ்சில் தைலம் தேய்த்தது நினைவிருக்கிறது. ஆனால் அது மூன்று வாரம் தான்.

இப்போது கூட அம்மாவை நானே பார்த்து கேட்டிருக்காவிட்டால், பல் வலி பற்றி என்னிடம் சொல்லி இருக்க மாட்டாள். காலை எழுந்து குளித்து உடன், முதல் வேலையாய் அம்மாவை அழைத்து கொண்டு மருத்துவமனை சென்றேன். பல்லில் ஒரு குழி இருக்கிறது என்று பரிசோதித்து விட்டு, சிமன்ட் பூச்சு ஒன்றை வைத்து அடைத்து விட்டார்கள். அம்மா வீடு வரும் வரை பல்லை நிரடி கொண்டே இருந்தாள்.

என்னமா?

இல்லை, ஏதோ பாக்கு பல் இடுக்குல மாட்டின மாதிரி இருக்கு என சொல்லி ஒரு பலவீனமான புன்னகை உதிர்த்தாள். வந்த உடன் வலி சற்று குறைந்திருந்தது. ஆனால் பல்லை நாவல் துழாவி கொண்டே இருந்தாள். என்ன என்றதற்கு ஒன்றும் சொல்லவில்லை. மதியம் சாப்பிடும் போதும் சரியாக சாப்பிடவில்லை. அடைக்க பட்ட அந்த சிமன்ட் பல்லின் அளவை விட சற்று அதிகமாக சேர்க்கப்பட்டிருந்தது. அதனால் மேல் பல்லோடு சேராமல், இடையில் ஒரு பாறை போல் மாட்டிகொண்டிருப்பதாக சொன்னாள்.

மதியம் அவளிடம் அதிகம் நான் பேச்சு கொடுக்கவில்லை, ஒவ்வொரு முறை வாய் அசைகையிலும் முகத்தில் வலி தெரிய ஆரமித்தது. மதியம் சாப்பிட வந்த அப்பாவிற்கு நானே உணவு எடுத்து வைத்தேன். மருத்துவமனை போய் வந்ததை சொன்னேன்.

எவ்வளவு ஆச்சு? என்றார்.

மாலை மீண்டும் அம்மாவை அழைத்து கொண்டு மருத்துவமனை சென்றேன், அந்த டாக்டர் இல்லை, மற்றவர் பரிசோதித்து விட்டு, கொஞ்சம் அதிகமா வச்சுட்டாங்க கரைஞ்சா சரி ஆகிடும் என்றார். அம்மா வலி பொறுக்க முடியவில்லை, அதை கொஞ்சம் குறைச்சுடுங்க என்றார். அம்மாவின் வாய் நோக்கி வெளிச்சம் பாய்ச்சி, ஐந்து நிமிடத்தில் குறைத்து விட்ட பின் காலையில் இருந்து முதல் முறையாய் அம்மா சிரித்தாள்.

பல் வலி மட்டும் தாங்கவே முடியருது இல்லை சார், உயிரே போய்டுது. பத்து வருஷத்துக்கு முன்ன ஒரு முறை இப்படிதான், ஆனா இதை விட பயங்கர பல் வலி, தூக்கு போட்டுக்கவே போய்டேன்.

இப்போதான் உயிரே வந்த மாதிரி இருக்கு என்றாள்.

மருத்துவமனையில் பணம் செலுத்தி விட்டு வரையில்,

என்னமா தீடிர்னு இப்படி சொல்லிட்ட, தூக்கு போடுற அளவுக்கு, நீ போய் இருந்தா எங்க நிலைமை என்ன? என்றேன்.

அதனால தாண்டா குட்டி போட்டுக்கல என்றபடி நடக்க தொடங்கினாள். அன்று அப்பாவிடம் வலியைப் பற்றி சொன்னயாமா என கேட்க நினைத்து நிறுத்தி கொண்டேன்.

Wednesday, September 30, 2009

கோவேறு கழுதைகள் - இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின்

விடுமுறை நாட்களை செலவில்லாமல் கழிக்க எப்போதும் கிராமத்து பாட்டி வீடே உகந்தது. இன்றும் மறக்க முடியாத சில நினைவுகள் கிராமம் சார்ந்தே உருவானது. கோடை கால விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்க்கு செல்கையில் எப்போதும் கூழ் ஆக்குவார்கள். இரவு உணவு ரசம், பொரியல் என்ற எந்த ஆடம்பரமும் இல்லாமல், வாணலியில் வதக்கிய கத்தரிக்காய் கார குழம்புடன் முடிந்த விட்ட நாட்கள் தான் அநேகம். அதுவும், எனக்கு விருப்பமென பாட்டி வாணலியிலேயே சிறிது சாதம் போட்டு பிசைந்து தந்தது இன்னும் நினைவிருக்கிறது.

இரவு ஏழு மணிக்கு இருட்ட தொடங்கிய பின் அன்றைய அலுப்பு தீர தூக்கம் தழுவுகையில், ” அம்மா வண்ணாத்தி வந்திருக்கேன்” என்ற குரல் கேட்கும். அந்த இருளில் பாட்டி மெல்ல அசைந்து அசைந்து கூழ் எடுத்து வீட்டு வாசல் நோக்கி செல்வது ஓவியம் போல் மனதில் தங்கி விட்டிருக்கிறது.

அதனால் தானோ என்னவோ, இமையம் அவர்களின் “கோவேறு கழுதைகள்” படிக்க ஆரமித்த இரண்டு பக்கங்களில் முழுக்க அந்த நாவலோடு கரைந்து விட முடிந்திருக்கிறது. ஆரோக்கியம் அந்த கிராமத்து துணிகளை எல்லாம் துவைக்கும் வண்ணாத்தி. கதை ஆரோக்கியம், அவளது கணவன் சவுரி, பிள்ளைகள் ஜோசப்,பீட்டர், மேரி மற்றும் மருமகள் சகயம் ஆகியோரை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது.

மெல்ல மாற்றங்கள் காணும் ஒரு கிராமமும், வேர்களை விட்டு செல்ல துடிக்கும் புதிய தலைமுறையும் ஆரோக்கியத்தின் பார்வையில் விவரிக்கப்படுகிறது. நாவலில் முதல் பாகம் அவர்கள் தங்கள் தெய்வமான அந்தோனியாரை பார்க்க வெளி ஊருக்கு செல்வதுடன் தொடங்குகிறது. குடும்பத்துடன் ஊருக்கு செல்ல அவள் ஊரிலுள்ள மக்கள் அனைவரிடமும் சம்மதம் பெறும் காட்சிகள் தொட்டு செல்லப் பட்டுள்ளது. நேரடியாக எந்த அவலமும் சித்தரிக்கப் படாமலேயே, அந்த இடங்களில் இரந்து வாழ வேண்டிய ஆரோக்கியம் குடும்பத்தின் நிலை சொல்லப்பட்டு விடுகிறது.

இயல்பான சித்தரிப்புக்களும், யதார்த்தமான நிகழ்வுகளும் இணைந்து ஒரு அசல் வாழ்வு கண் முன் நிறுத்தப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, நாவலின் இரண்டாம் அத்தியாயத்தில், இறந்து போன ஒருவருக்கு சவுரி பாடை அமைக்கும் காட்சிகள் விளக்கப்படும் இடம். அதே போல் ஆரோக்கியம் மற்றும் மேரி இடையேயான உறவும், மேரி மேல் அவள் கொள்ளும் பாசமும் சொல்லப்படும் இடங்கள் அழகானவை. மேரி கோவித்து கொண்ட ஒரு கணத்தில் உவமை இப்படி வருகிறது, “நல்ல பாம்பாட்டம் மூஞ்சிய தூக்கி வக்சுக்கிறா?”

காலையில் வீடுகளுக்கு சென்று துணி எடுத்து வருதல், இரவு சட்டியை தூக்கி கொண்டு அங்கு சோறு வாங்க போதல் என நீள்கிறது அந்த வாழ்க்கை. முதன் முதலில் இந்த வாழ்க்கைக்கு உட்படுத்தபடுகையில், பீட்டர் ஆரோக்கியத்திடம்,

” ஏம்மா நாம்ப ராச்சோறு எடுக்காம இருக்கக் கூடாதா?” என்கிறான்.

ஊரில் உள்ள பசங்க எல்லாம் ராச்சோறு என கிண்டல் செய்வதை அவன் கூறும் இடமும், ” மத்தவுங்க ஊடுமாரி நமூட்ட்லியும் சோறாக்கு” என கூறும் இடமும் அழுத்தமானவை.



பல சமயங்களில் ஆரோக்கியம் படும் ஆற்றாமையும் சோகமும் எளிய வார்த்தைகள் கொண்ட பாடல்களாய் உருபெறுகிறது. தன் மகன் அவன் மனைவியின் சொல் கேட்டு நகரத்திற்கு சென்ற பின், தன்னை காப்பாற்றுவான் என நம்பிய அவன் விட்டு சென்ற துயரை

பச்சக் கிளி வளர்த்தன் - அது

பறக்கையிலே தப்பவிட்டன்,

குஞ்சுக் கிளி வளர்த்தன் - அது

கூவையிலே தப்பவிட்டான்

என புலம்புகிறாள்.

அதே போல் நாவலில் ஆரோக்கியம் அந்த ஊரிடம் கொண்ட பற்றும், ஊர் மக்கள் மீது கொண்ட பாசமும் அசலானவை. மாலை நேரத்தில் வீடுகளில் அமர்ந்திருக்கும் ஊரார்களை வார்த்தைகள் மூலம் இணைத்து போகிறாள். ஊரிலுள்ள எல்லார் மேலும் அவளுக்கு இணக்கம் இருக்கிறது. கடைக்கு சென்று வீடு திரும்புகையில் எதிர்படுபவர்களிடம்,

” அட அந்தோனியார, இம்பூட்டு எலப்பாயிருக்கீங்களே, சொவமில்லியா?

“இந்த வண்ணாத்தி மவள மறந்துடாதீங்க சாமீ”

“ உங்க பற வண்ணாத்தி சாமீ” என சொல்லியபடியே செல்கிறாள்.

மெல்ல மெல்ல அந்த ஊர் தன் நிலை மாறும் இடமும், அந்த மக்கள் படும் மாற்றங்களும் ஆரோக்கியத்தின் பாடல் வழி வெளிபடுகிறது.

வாவுக்கும் அஞ்சவில்ல

சாவுக்கும் அஞ்சவில்ல

சமாதிக்கும் அஞ்சவில்ல

சமாதிக்கும் அஞ்சவில்ல - பாயிம்

சனங்களுக்கு அஞ்சனனே!

தலித் ஆக்கங்களில் மிக முக்கியமான நாவலாக கருதப்படும் இந்த நாவல் 1984ல் வெளியானது. ஆங்கிலத்தில் “Beasts of Burden ” என்ற பெயரில் வெளியாகி பரவலான வாசக கவனத்தை பெற்றது. க்ரியா பதிப்பக வெளியீடான இந்த நாவல் தமிழ் நாவல்களில் மிக முக்கியமான யதார்த்தவாத நாவல்.

Friday, September 25, 2009

என் பெயர் ராமசேஷன் - பிம்பங்களை களைந்தபடி

தூசு படாமல் வளர்ந்து முதன் முதலில் இளைஞனாக இந்த சமூக கட்டமைப்பில் நிறுத்தபடுகையில் தனது தனித்தன்மை பற்றிய கேள்வி வருகிறது. இந்த அமைப்பில் தன்னை பொருத்தி கொள்வது பற்றிய தன்னுணர்வு தலை தூக்க தொடங்குகிறது. தமது உயரத்திற்க்கோ, நடைக்கோ, பழக்கத்திற்கோ ஏற்றார் போல் இல்லாத இந்த அமைப்பைப் பற்றிய சலிப்பு உருவாகிறது. தனது பாதையை முடிவெடுப்பது பற்றிய கனவுகளும், அது தரும் நிச்சயமின்மையும் தொடர்ந்து பயமுறுத்த தொடங்குகிறது. இது வரை குழந்தை என சொல்லி வந்த வீட்டில், அவனை பற்றிய எதிர்ப்பார்ப்புகள் மாறுகின்றன.

இந்த நிச்சயமின்மை தரும் பதற்றம் சமூகத்தை பற்றிய கோபமாகவும், மேலான ஒரு நாட்டை பற்றிய கனவாகவும், ஒரு வகையில் காதலாகவும், சில சமயம் காமமாகவும் வெளிப்படுகிறது. ஏதோ ஒரு அலுவலகத்தில் தன்னை பொருத்தி கொண்டு திருமணம் செய்து கொள்ளுதல், வேறு தளத்திற்கு நகர்த்தி ஒரு தப்பித்தலை உருவாக்குகிறது. கழிந்து விட்ட அந்த இளமையும், அது தந்த வடுக்களும், அந்த போராட்டமும் மெல்ல மெல்ல தண்ணீரில் இறங்கும் கல்லை போல் மனதின் அடி ஆழத்திற்கு செல்கின்றன. தவிர்க்கப்பட்ட காதலும் அதன் நினைவுகளும் அடி நாக்கில் ஒட்டி கொள்ளும் காபியின் சுவை போல நம்மோடு ஒட்டி கொள்கிறது.

1980 களில் முதலில் உருவாக தொடங்கிய ஒரு விஷயம் Prolonged Adolescence . தமது முந்தைய தலைமுறையை விட ஒரு நீண்ட இளமை பருவத்தை கழிக்க வேண்டிய நிர்பந்தம் உருவானது. 18 வயதிலேயே திருமணம் என்ற நிலை மாறி, பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள் அதை 22-24 வரை உயர்த்தி இன்று 27-30 வரை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது . அப்படி எண்பதுகளில் வாழ நேர்ந்த இளைஞர்களை ராமசேஷன் என்னும் கதாபாத்திரத்தின் மூலம் சித்தரிக்கும் நாவல், ஆதவனின் “என் பெயர் ராமசேஷன்”.

1980 களில் வெளி வந்த காலம் முதல் தீவிரமான வாசிப்புக்கு உள்ளாகி வருகிறது “என் பெயர் ராமசேஷன்”. இந்த நாவல் இரண்டு பாகமாக பிரிக்கப் பட்டுள்ளது.. முதல் பாதியில் ராம்சேஷ் அவனுடைய அப்பா, அம்மா மற்றும் தங்கையின் அறிமுகம். அவன் கல்லூரியில் சேர்வது, அங்கு அவனுக்கு கிடைக்கும் இரண்டு நண்பர்கள் ராவ் மற்றும் மூர்த்தி. ராம்சேஷ்க்கும் ராவின் தங்கை மாலவிற்குமான காதல். நீண்ட நாள் பார்க்காதிருந்த பெரியாப்பவை சந்திப்பது ஆகியவை விவரிக்கப்படுகிறது. என்னளவில் மிகவும் கவர்ந்த இரண்டாம் பாதி, கலை, சினிமா, காதல் அதை ஒட்டி அணியப்படும் பிம்பங்கள் ஆகியவை ராமசேஷின் பார்வை மூலம் விளக்கப்படுகிறது.



காதலைப் பற்றிய பார்வைகள் மூன்று வெவ்வேறு காதல்கள் மூலம் முன் வைக்கப்படுகிறது. ஒன்று ராம்சேஷ் மற்றும் அவனது வசதி படைத்த நண்பனான ராவின் தங்கை மாலாவிற்குமானது. இரண்டு வெவ்வேறு பொருளாதார பின்னணிகள் கொண்ட அவர்களது எண்ணங்களும், அது அவர்களுக்கு இடையேயான சம்பாஷனைகளுடே பிரதிபலிப்பதும் மிக நேர்த்தியாக விவரிக்கப்படுகிறது. ராம்சேஷின் தேவைகள் முடிந்த பின் அவளை பற்றி அவள் மேல் ஒரு சலிப்பு வருகையில், அவளை பற்றி சொல்கையில்,

“அவளுடைய கேள்விகள் பலவற்றில் ‘என்னுடைய கீழ்மட்டத்துச் சூழலை‘ நாசூக்காகச் சீண்டுகிற பாவம் தொனிப்பதாக எனக்குத் தோன்றும் . அதாவது என் எல்லைகள் ராகம், தாளம், பல்லவிக்குள்ளும் சட்னி சாம்பாருக்குள்ளும் அடங்கிவிடுகிறவை. அவள் தொட்டிலில் கிடந்தபோதே சாச்சாச்சாவுக்குக் காலை உதைத்தவள், ஃப்ரூட் ஜெல்லியை நக்கினவள்… நான் இதேபோல, வேறு துறைகளில் அவளைவிட அதிகமாக எனக்கிருந்த பொது அறிவைப் பயன்படுத்தி அவளை மடக்க முயன்றால், அவள் உடனே தளுக்காக சம்பாஷணைத் தொனியை மாற்றி என்னை ஒரு dry professional type ஆக உணரச் செய்வாள். அப்பாவுடன் வெளியே போய்விட்டு வந்த குழந்தை தான் கண்ட அதிசயங்களை விவரிக்கும்போது அம்மா அதனிடம் காட்டுவது போன்ற ஒர் பாசாங்கு ஆர்வத்தையும் பரபரப்பையும் காட்டி, ‘என் கண்ணு!‘ என்று தட்டிக் கொடுப்பாள். குழந்தைத்தனமானவள், பக்குவம் பெறாதவள் என்று நான் அவளைச் சொன்னால் உடனே தாத்தா, ஹாஸ்ய உணர்ச்சியில்லாத ஜடம், என்று அவள் என்னைச் சொல்லுவாள். இதெல்லாம் எனக்குச் சலித்துப் போகத் தொடங்கியிருந்தது.”

மற்றொன்று மாலா உடனான காதல் முறிந்த பின், கல்லூரி தோழி பிரேமாவுடனான காதல். சற்று Intellectual ஆன அவளுடனான காதலில், அவர்கள் இருவரது Complex ம் மோதி கொள்ளும் இடங்களும், அவளை பற்றிய அவனது புரிதல்கள் உருவாக்கும் பிரச்சனைகளும் மிக விரிவாக பேசப்படுகிறது.

அடுத்து மிக முக்கியமான, மேலும் பேரு வாரியான காதல்களை பற்றிய கேலி ஆகியவை மூர்த்தி காதல் மூலம் விவரிக்கப்படுகிறது. மூர்த்தியின் காதலை பற்றி கூறுகையில்,

மூர்த்தி பாணி காதலுக்கு ரசிகர்கள் மிகவும் தேவைப்பட்டார்கள். நான் இன்று அவளை அங்கே பார்த்தேன், இங்கே பார்த்தேன், அவள் என்னைப் பார்த்து சிரித்தாள் அல்லது சிரிக்காமலிருந்தாள், நான் பார்த்த சினிமா போஸ்ட்டரையே அவளும் பார்த்தாள். இன்று அவள் மாட்சிங்காக ட்ரஸ் பண்ணிக்கொண்டிருந்தாள் என்கிற ரீதியில் அவன் பேசுவதை பிறரை கேட்க்கச் செய்வதன் மூலமாகவே அவன் ஒரு கதாநாயகனாக உணர்ந்தான்.

அதே போல, ராம்சேஷும் ராவும் தன் அப்பாக்களை மனதில் வைத்து உரையாடும் இடமும், ராம்சேஷ் அவனது பெரியப்பாவை சந்திப்பது மற்றும் இவன் முன் அவன் பெரியப்பா தான் ஒரு நவநாகரீகமானவன் என காட்டி கொள்ள முயலும் இடங்களும் மிக முக்கியமானவை. ராம்சேஷுக்கு தனது அப்பாவை பற்றிய புரிதல் உருவாகும் இடம் மிக மென்மையாக விவரிக்கப்பட்டுள்ளது. நாவலின் ஆரம்பத்தில் அவரை பற்றிய ஒரு மெல்லிய வெறுப்பும், ஏளனமும் கொண்ட அவனது பார்வை, அவரை அவன் விடுதியில் சந்திக்கையிலும், பின் பூங்காவில் சந்திக்கையிலும் மெல்ல உரு மாறுகிறது. ஒரு வகையில் எதிர் காலத்தில் அவனது வாழ்க்கை முறைக்கான Templateஒ அவரது வாழ்க்கை என என்னும் படி படைக்கப்பட்டுள்ளது.

இந்த நாவலை போலவே, இளைஞன் என்று உணர்ந்திருந்தவன் மெல்ல ஒரு முதிர்ச்சிக்கு வந்து தன் நிலையினை உணர்ந்து கொள்ளுதல் பற்றிய சுஜாதாவின் “நிலா நிழல்” என்னும் நாவல் எனது விருப்பத்திற்கு உரியது. திருச்சியில் இருந்து கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டு அப்பாவிடம் பொய் சொல்லி திரும்பும் ஒரு இளைஞனைப் பற்றியது “நிலா நிழல்”.

அலைக்கழிக்கப்படும் இளமையின் வண்ணங்களை ஒரு சேர சொல்லும் இந்த நாவல் ஒரு அழகிய சித்திரத்தை போன்றது.

நூல்: என் பெயர் ராமசேஷன்

பதிப்பகம்: உயிர்மை

விலை: ரூ 120

Friday, August 21, 2009

அக்கா பெரியவளானப் பின் / நினைவழித்தல்

அக்கா பெரியவளானப் பின்


தூக்கம் கலைந்த நடுநிசிகளில்

அக்கா அருகில் தொலைந்து போக

துவங்கி இருந்தாள்..


கதவை திறந்த நேரங்களிலெளாம்

ரகசிய பேச்சுக்கள் நின்று போயின,


கிணற்றடிக்கு வந்து பேசும் நண்பர்களுக்கு கூட

தேனீர் வாசலுக்கே வந்தது,


எப்போதாவது பேசும்

கிராமத்து வசுவுகளைக் கூட

நிறுத்தி விட்டிருந்தாள்!


அப்புறம் ஒருநாள்,

அக்கா கல்யாணமாகி சென்று விட்டாள்.


எனக்கும் அம்மவுக்குமான

இடைவெளியை அப்படியே விட்டு விட்டு…

******************************************************************************

நினைவழித்தல்


நேற்று இரவு வடிந்து கொண்டிருந்த

கண்ணீரின் சுவடுகள்

தெரியவில்லை கண்ணாடியில்,


என் நிர்வாணம் பார்த்த மின்விசிறி

எப்போதும் போல சுழல்கிறது,


யாருக்கும் தெரியாதபடி

நனைந்து போன கைக்குட்டை

உலர்ந்து கிடக்கிறது,


சிரித்து கொண்டே அலுவலகம் நுழைகிறேன்,

ஒரு புன்னகையை ஏந்தி கொண்டு காத்திருக்கிறாய் நீ,

நேற்று கலைந்து விட்டிருந்த இடத்தை நினைவூட்டியபடி.

******************************************************************************

பிரிவு உபசாரம்


எப்போதும் கல்லூரியில் இருந்து

ஊருக்கு கிளம்புகையில்

கைப் பிடித்து பேசி கொண்டு

சேலம் வரை ஒன்றாகத்தான் வருவாய்,

மூன்று வருடம் கழித்து பார்க்கிறேன்

கைக்குழந்தையுடன்,

இப்போதும் சிரித்து கொண்டே விடை பெறுகிறாய்

உன் ஸ்பரிச தொடுகையின் சிலிர்ப்பை

உன் குழந்தையிடம் கொடுத்து

மாமாவுக்கு டாடா சொல்லு என்று….


******************************************************************************

புண்ணியம் சேர்த்து கொள்ளல்


அலுவலக நண்பர்களின்

தந்தைக்கோ தாய்க்கோ ரத்தம் தேவை

என வரும் மெயில்களை

உடனக்கு உடன் பார்வார்ட் செய்து

புண்ணியம் சேர்த்து கொள்கிறேன்,

கடைசி வரை ரத்தத்தின் க்ரூப் என்ன வென்று பாராமலேயே
******************************************************************************

Wednesday, August 5, 2009

ஆதவன் - கண்ணாடியில் பிரதிபலிக்கும் முகம்

சாதரண சந்திப்புகளில் உரையாடல்களில், நம்மை முழுதும் வெளிப்படுத்தி கொள்ள முடிவதில்லை. நம்முடைய இருப்பையும் மீறி, எதிரே பேசுபவரின் சிரிப்பு, முக அசைவு, போலித்தனங்கள் நம்மை பதற்றம் செய்ய வைக்கின்றது. நடந்து முடிந்த பின் இதை இப்படி பேசியிருக்கலாமோ என்று எண்ண ஆரமிக்கிறோம். ஒருவரை பார்த்த உடன் பிடித்து போவதோ, இல்லை பிடிக்காமல் போவதோ நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. பிடித்தமான ஒருவர் பேசும் பேச்சுகளே கூட சில சமயம் ஓர் வெறுப்பை உருவாக்கி விடுகிறது.

நாம் தினசரி பழகும் மனிதர்களுடன் சூமூகமாகவே இருக்க ஆசைப் படுகிறோம். அதை தொடர்ந்து தக்க வைத்து கொள்ள அவர்களுக்கு தகுந்தார் போல் நாம் வளைந்தோ நமக்கு தகுந்தார் போல் அவர்களை வளைத்தோ அதன் மூலம் ஒரு சின்ன அடிமைத்தனத்தையோ இல்லை ஒரு அதிகாரத்தையோ உருவாக்கிகொள்கிறோம். நாம் தனித்து விடப்படும் சில பொழுதுகளில் பரஸ்பர சுயநலதிற்க்காக நாம் அணிந்திருந்த வேஷங்களை களைகையில் உருவாகும் வெறுமையை மறைக்க நம்மை பற்றிய ஒரு சுய பச்சாதாபத்தை உருவாக்கி கொண்டு மீண்டும் நம்மை சிறைப் படுத்தி கொள்கிறோம். இந்த பிம்பங்களை சுற்றியே பின்னப்பட்ட வாழ்வில் தன்னை பொருத்தி கொள்ள முடியாதவர்கள் தொடர்ந்து ஒரு நிச்சயமின்மையை உணரத் தொடங்குகிறார்கள். இவை யாவும் தொடர்ந்த நமது நடிப்பாலும் நாம் அணியும் பிம்பங்களாலும் விளைபவை.

அதனால் தானோ என்னவோ, என் எழுத்துக்கள் யாவுமே நுட்பமான, நேர்மையான சம்பாஷணை முயற்சிகளென்றுதான் சொல்லவேண்டும் என்னும் ஆதவனை மனதுக்கு மிக நெருக்கமானவராய் உணர முடிகிறது. தமிழ் இலக்கியத்தில் மிக முக்கியமான பங்களிப்பு ஆதவனுடையது, நகர்ப்புற மதியத்தர இளைஞர்களின் வாழ்வை இவர் அளவிற்கு பதிவு செய்தவர்கள் குறைவே. “காகித மலர்கள்”, ‘என் பெயர் ராமசேஷன்‘ ஆகிய இரு நாவல்களையும் (உயிர்மை பதிப்பகம்) ‘இரவுக்கு முன்பு வருவது மாலை” என்னும் சாகித்திய அகாடமி பரிசு பெற்ற குறுநாவல் தொகுப்பையும் எழுதி உள்ளார். இவரது மொத்த சிறுகதைகள் “ஆதவன் சிறுகதைகள்” என்னும் பெயரில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.



சென்னை புத்தக கண்காட்சி உயிர்மை அரங்கில் புத்தகங்களை பார்த்து கொண்டிருக்கையில் உள்ளிருந்து ஒரு பட்சி சொல்ல (Sub-Conscious?) “காகித மலர்கள்” நாவலை வாங்கினேன். பின் பக்க அட்டையில் இருந்த தடிமனான கண்ணாடி அணிந்த ஆதவனின் முகமும், நாவலைப் பற்றிய சிறு அறிமுகமும் பார்த்தவுடன் பிடித்து போனது. ஆதவனின் அந்த மெல்லிய சிரிப்பைப் போலவே அவர் எழுத்தும் வசீகரமானது.

நாவலில் விரிவாக பேசப்படும் விஷயங்களைப் பற்றி ஆதவன் சொல்கையில், “

வெவ்வேறு ‘வேடங்களின் கைதிகள். அரசியல் தலைவர்கள், mob psychology வேண்டுகிற கொச்சையான படிமங்களின் கைதிகள். அதிகாரிகள் ‘நடக்கிறபடி நடக்கட்டும், நமக்கேன் வம்பு?’ என்கிற play safe மனப்பாங்கின் கைதிகள். அறிவுஜீவிகள், அந்தந்த நேரத்தில் நாகரிகமாக, அதிகச் செலாவணி உள்ளதாக உள்ள சில சார்புகளை அபிநயித்துக் கொண்டு, சில ‘தியரி’ களை உச்சாடனம் செய்துகொண்டு, ‘உஞ்ச விருத்தி’ செய்கிற ஒரு பிராமண பிம்பத்தின் கைதிகள் பெண்கள், ஆணின் ‘அடிமை’, ‘மகிழ்வூட்டும் கருவி’ – அல்லது இந்தப் பிம்பங்களுக்கெதிராகப் ‘புரட்சி’ செய்கிறவள் – என்கிற பிம்பங்களின் கைதிகள். இளைஞர்கள், வயதையும், ‘வேடங்கள்’ அணியும் திறனையும் ஒட்டியே வாய்ப்புகள் வழங்குகிற அமைப்பில் நிரந்தரமான ஒரு insecurityன், ஒரு alienationன் கைதிகள். இத்தகைய பல கைதிகளையே காகித மலர்கள் அறிமுகம் செய்கிறது”.



டெல்லியை கதைகளமாய் கொண்ட நாவல் இது. பசுபதி டெல்லியில் மந்திரிக்கு நெருக்கமானவர், அவர் துறையில் ஒரு மிக பெரிய பொறுப்பில் இருக்கும் அரசாங்க அதிகாரி. அவரது மனைவி மிசஸ் பசுபதி, டெல்லியில் தமிழ் நாடகங்கள் நடித்து கொண்டு மாறி வரும் சூழலுக்கு ஏற்ப தன்னை நாகரீகமாய் காட்டி கொள்பவர். இவர்களது பிள்ளைகள், விசுவம், பத்ரி மற்றும் செல்லப்பா.


ஆதவன் சொல்வது போலவே, காகித மலர்கள், இந்த வெவ்வேறு பிம்பங்களை அறிமுகம் மட்டுமே செய்கிறது, அதை களைந்து எழுந்து வாருங்கள் போன்ற அறைகூவல் இல்லை, எதையும் உடைத்தெறியும் ஆவேசம் இல்லை, ஆனால் இந்நாவல் மெல்ல ஒரு மனமாற்றத்தை எதிர் பார்க்கிறது, நமது பிம்பங்களை பற்றிய உணர்வை உருவாக்கி செல்கிறது.

நாம் வாழ்வதற்காக உருவாக்கப்பட்ட கட்டமைப்பில் நாமே சிக்கி கொண்டிருக்கும் அவலத்தை முன் வைக்க, பல விதமான முரணான கதாபாத்திரங்கள் நாவல் முழுதும் ஒன்றோடு ஒன்று மோதுகின்றன. உதாரணத்திற்கு, பசுபதி மிக வேகமாக மேல் மட்டத்திற்கு முன்னேறி விட்டவர், ஆனால் அவருடன் வேலைக்கு சேர்ந்து அவர் துறை தலைவராய் இருக்கும் அதே இடத்தில் ஒரு குமாஸ்தாவாக வேலை செய்பவர் ஒருவர். பசுபதியின் மகன் செல்லப்பா அந்த குமாஸ்தாவின் மகன் கணேசன், அவர்கள் இருவரும் நண்பர்கள், படிப்பது ஒரே கல்லூரியில்.

பசுபதியின் மனைவி தன் அம்மா, பாட்டி கடைப்பிடித்து வந்த ஒழுக்க நெறிகளை விடவும் முடியாமல், தன்னை நவநாகரீகமாய் காட்டி கொள்ளவும் பிரயத்தனப்படும் ஒரு பெண் பிம்பம். அவருக்கு முரணாக, அவரது மருமகள் விஸ்வத்தின் மனைவி பத்மினி. வயதையும், ‘வேடங்கள்’ அணியும் திறனையும் ஒட்டியே வாய்ப்புகள் வழங்குகிற அமைப்பில் நிரந்தரமான ஒரு insecurityயையும், ஒரு alienation யும் உணரும் இளைஞர்களாக விசுவமும் செல்லப்பாவும்.

ஆனால் ஒருவகையில் இரு எதிர் துருவங்களில் நிறுத்தி வைக்க படுகின்றனர். விசுவம் நன்றாக படித்து, அமெரிக்கா சென்று தனது சுற்று சூழல் சார்ந்த ஆய்விற்காக டெல்லி வருகிறான். செல்லப்பா மிக சாதரணமாணவன், அவனுடைய சின்ன சந்தோஷங்களில் வாழ்கிறான். அவர்கள் இருவரையும் நெருக்கமானவர்களாய் உணர செய்யும் பல இடங்களும் நாவலில் இழையோடுகிறது.

நேர்மையான சம்பாஷனைகள் என்று சொன்னதற்கு ஏற்ப, கதாபாத்திரங்களின் மன ஓட்டங்கள் மிக நுண்ணிப்போடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நனவோடை உத்தி மூலமே நாவலின் மிக அழகான திருப்பங்கள் விளக்கப்படுகிறது. விஸ்வத்திடமும் செல்லப்பாவிடமும் எளிதில் நம்மை அடையாளப்படுத்தி கொள்ள முடிகிறது. 1970 களில் வாழ்ந்த இளைஞர்களை பற்றிய சம்பாஷனைகள் யாவும் இன்றைய காலத்திற்கும் பொருந்தி வருகிறது. சூழ்நிலையியல் பற்றி விஸ்வம் சிந்திக்கும் விஷயங்களும் அதை முன் வைத்த அவனது உரையாடலும் ஆழ்ந்த வாசிப்புக்கு உரியவை. அதே போல விசுவம் - பத்மினிக்கு இடையே உருவாகி வரும் காதலும், திருமணமான பின் அவர்கள் ஒருவரை ஒருவர் தக்க வைத்து கொள்ள செய்யும் தவிப்புகளும் விளக்கப்படும் இடங்கள் நாவலில் மிக முக்கியமானவை.

விஸ்வம் பத்மினியிடம் மிக மென்மையான உணர்வுகளை வார்த்தைகள் சிதைப்பதை பற்றி சொல்கையில்,

இந்த வார்த்தைப்படுத்துதல் என் இயல்புகளையும் சரி அவை உன்மேல் நிகழ்த்தும் பாதிப்புகளையும் சரி, கொச்சைப்படுத்துவதாகும். அரூபமானவற்றுக்கு ரூபம் கொடுக்க என் இவ்வளவு அவசரப்படுகிறாய். என்கிறான்.

மேலும் பிம்பங்களை பற்றி சொல்கையில் நாம் வார்த்தை படுத்துதலை,

எதுவும் யாரும் தன்னுடைய ஆழங்களைத் தொட்டு விட அனுமதிக்க கூடாது. சொற்களை எண்ணங்களை வெளிப்படுத்தும் சாதனங்களாக அல்ல, எண்ணங்களை மறைக்கும் போர்வைகளாய் பயன்ப்படுத்தும் கலை

என்கிறான்.

செல்லப்பாவின் சித்திரம் புனையப்பட்ட விதம் நாவலில் முக்கியமானது, ஆதவனின் இயல்புகளை பெரிதும் சார்ந்து உருவாக்கப்பட்டவன் செல்லப்பா என்று அவரே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். சூழ்நிலையின் மென்மையான மாறுதல்களையும், அது தன் மேல் நிகழ்த்தும் மாற்றங்களை கூர்ந்து கவனித்த வண்ணமே இருக்கிறான் செல்லப்பா. மேலும் எப்போதும் எந்த முடிவும் எடுக்க தயங்கும் ஒரு ஸ்திரமில்லாதவனாகவே உள்ளான். ஒரு சாலையை கடப்பது, ரெஸ்ட்டாரன்டில் காப்பி அருந்துவது, திரைப்படம் காண செல்வது முதல் அத்தனை விஷயங்களிலும் அவனின் நிச்சயமின்மை வெளிப்பட்ட வண்ணம் உள்ளது. எழுதப்பட்ட காலம் தொட்டு இன்று வரை பரவலான வாசிப்புக்கு உட்பட்டு வரும் இந்த நாவல் தமிழின் சிறந்த இலக்கிய ஆக்கங்களில் ஒன்று. இந்த நாவலை படித்த பின்னே அவரது அத்தனை எழுத்துகளையும் படிக்கும் ஆர்வம் தோன்றியது.

அவர் சொல்வது போலவே,

ஒருவிதத்தில், இந்த நூல் ஒரு பிரஜையின் குரல். அந்தப் பிரஜை ஓர் எழுத்தாளன் என்பதால் அவனுடைய எண்ணங்கள் நாவல் வடிவம் பெற்றன. அவன் ஓர் இளைஞன் என்பதால் இந்நாவல் தனித்த ஒரு தொனியும் லயமும் கொண்டமைந்துள்ளது.

அந்த இளைஞன் நம் உள் இருக்கும் தன்னை அதிகம் வெளிக்காட்ட தயங்கும், தனக்கான தனித்தன்மையை தேடும் ஒருவன். தொடர்ந்து சூழும் போலிதனங்களில் சிக்காமல் ஒரு முழுமையின் தேடல் நோக்கி செல்லும் ஒருவன். அத்தகைய இளைஞர்கள் வாழும் தோறும் இந்த நாவல் நிலைத்து நிற்கும்.

Saturday, July 18, 2009

Travellers and Magicians - ஒரு நெடுஞ்சாலை கனவு பயணம்

மலை முகடுகள் மேகங்களை உரசிய படியே இருக்கிறது. உடைந்து போன மேக துண்டுகள் முயல்களை போல பள்ளத்தாக்குகளில் விழுந்து கிடக்கின்றது. சுருட்டி படுத்து கொண்ட மலை பாம்பின் முதுகை சுற்றிய கோடுகளாய் மலை பாதைகள் நீள்கின்றன. பாதைகளில் எப்போதாவது சிறு எறும்பென தோன்றிய வாகனங்கள் மெல்ல ஊர்ந்து நம்மை கடந்து செல்கின்றது. இவ்வளவு அழகான தேசமா என மனம் வியந்த வண்ணமே உள்ளது, பூட்டான், நமது சிக்கிம் மற்றும் கல்கத்தா மாநிலங்களை இரு புற எல்லையாகவும் இமயமலையின் அடிவாரத்தை இருப்பிடமாகவும் கொண்ட தேசம். அந்த தேசத்தின் நிலத்தை அழகாய் பதிவு செய்ததோடு ஒரு மிக அழகான கதையை கொண்ட திரைப்படம் Travellers and Magicians. Khyentse Norbu என்று புத்த பிட்சு இயக்கிய படம் இது. புத்த மடாலயத்தில் வாழும் சிறுவர்களின் கால் பந்தாட்டம் பார்க்கும் ஆசையை நுட்பமாய் வெளிப்படுத்தி பல விருதுகளை பெற்ற The Cup படத்திற்கு பின்னான இரண்டாவது படம் இது.



முழுக்க முழுக்க பூட்டானிலேயே படமாக்கப்பட்ட முதல் திரைப்படம் இது, பூட்டானை உலக மக்களுக்கு அறிமுக படுத்துவதே எனது நோக்கம் என குறிப்பிடும் இயக்குனர், கனவு உலகத்திற்கு செல்ல வேண்டும் என எண்ணும் இரு வேறு மனிதர்களின் கதையை ஒரு பின்னலை போல் கொடுத்துள்ளார். டான்டுப் ஒரு தனித்த மலை கிராமத்தின் அரசாங்க அதிகாரி, அமெரிக்கா செல்லும் கனவோடு வாழ்பவன். அதற்கான ஏற்பாடுகளை செயதுவிட்டதாய் நண்பனிடம் இருந்து கடிதம் வர, திருவிழாவிற்கு செல்வதாய் பொய் சொல்லி தன் அதிகாரியிடம் விடுமுறை கேட்டு கொண்டு புறப்படுகிறான். திம்பு என்னும் பெருநகருக்கு செல்லும் ஒரே பேருந்தை பிடிக்க வருகையில், ஒரு கிராமத்து மூதாட்டி அவனிடம் சாப்பிட தந்த பாலாடை கட்டிகளை ஆற்றில் எறிந்துவிட்டு ஓடுகிறான். நமது ஊர்களைப் போலவே அந்த ஊரிலும் கிராமத்தின் அப்பட்டமான அன்பு தொனிக்கிறது. கிராமத்தில் உள்ள அனைவருக்கும் அவன் அரசாங்க அதிகாரி ஆதலால் அவனை தெரிந்திருக்கிறது.அவன் அங்கு வந்து பணி புரிவதை பெருமையோடு நினைத்து கொள்கின்றனர்.

பேருந்தை பிடிக்கமுடியாமல் தவற விட்டு காத்திருக்கிறான். அப்போது அவனை போலவே பெருநகருக்கும், திருவிழாவிற்கும் செல்ல விரும்பும் ஒரு முதியவர், ஒரு புத்த பிட்சு, ஒரு வயதானவர் அவரின் மகள் ஆகியோர் சேருகின்றனர். பேருந்தை தவற விட்டால் மீண்டும் அது மறுநாள் வரும் வரை வேறு வழி இல்லை, மெல்ல நடை பயணம் அல்லது ஏதேனும் வாகனங்களில் உதவி கேட்டு செல்லவேண்டிய நிலை. மெல்ல அவர்கள் நடக்க துவங்குகிறார்கள்.



புத்த பிட்சு டான்டுபை நீ எங்கு செல்கிறாய் என கேட்கிறான், அதற்கு அவன் “என் கனவு தேசத்துக்கு” என்கிறான், அங்கு என்ன கிடைக்கும்? என்பதற்கு எல்லாம் கிடைக்கும் என்கிறான். ஆப்பிள் விற்கும் வயதான முதியவர் பார்த்துக் கொண்டே இருக்கிறார். அங்கு என்ன செய்வாய் என்று புத்த பிட்சுவின் கேள்விக்கு, தோட்டங்களில் ஆப்பிள் பறிப்பேன், உணவு விடுதியில் வேலை செய்வேன் என்கிறான். மகளோடு வந்த முதியவர், இங்கு அரசாங்க வேலையை விட்டு விட்டு அங்கு போய் ஆப்பிள் பறிக்க போகறீர்களா என்கிறார்.

அவர்கள் ஒரு லாரியில் இடம் கிடைத்து செல்ல துவங்க, புத்த பிட்சு இது போல கனவு உலகத்துக்கு செல்ல வேண்டும் என நினைத்த ஒருவனின் கதையை சொல்கிறார். அந்த கதை பூட்டான் நாட்டார் கதை மரபில் மிக பிரசித்தமானது, அதில் வரும் இரு சகோதரர்களில் மூத்தவன் எப்போதும் தன்னுடைய கனவு உலகம் என்ற ஒன்றை அவன் தம்பியிடம் சொல்லி கொண்டே இருக்கிறான். அவனை மந்திரங்கள் கற்று கொள்ளும் வகுப்பிற்கு அவன் தந்தை அனுப்பி வைக்க, அவன் அதில் கவனம் இல்லாமல், அழகான பெண்கள் கொண்ட தன் கனவு உலகத்தை கற்பனை செய்த வண்ணமே இருக்கிறான். அவனுக்கு எப்போதும் மதிய உணவு எடுத்து வரும் தம்பி அன்று ஒரு குதிரையில் வர, இவன் அதை முயன்று பார்த்து காட்டில் தொலைந்து போகிறான். அங்கே நடு காட்டில் ஒரு குடிசையில் ஒரு கிழவனும் அவனது அழகான இளம் மனைவியும் வாழ்கின்றனர். அவள் மேல் காதல் கொள்ளும் அவன், அவளுடன் இணைந்து அந்த கிழவனை கொள்ள முயற்சித்து, பின் மனம் உடைந்து காட்டில் எங்கோ ஓடுகிறான். பின்னால் அவளின் கூக்குரல் கேட்பதாக ஒரு மர்மத்துடன் கதையை முடிக்கிறார் புத்த பிட்சு.

பிட்சு சொல்லும் அந்த கதை ஒரு கனவு உலகத்தில் நடப்பது போன்று எடுக்கப்பட்டுள்ளது. அந்த காட்சி அமைப்பும், ஒளிப்பதிவும் இதுவரை நான் பார்த்த சிறந்த ஒன்று. சில இடங்களில் Illusionist படத்தை நினைவூட்டியது. பிட்சு சொல்லும் இந்த கதையில் வரும் காதல், கனவு உலகம், பொறாமை, காமம் ஆகியவை டான்டுவின் வாழ்க்கையோடு மெல்ல பிணைக்கப்பட்டு திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் பின்னணி இசையும் உரையாடல்களும் மிக கட்சிதமானவை. படத்தின் இயக்குனர் ஒரு புத்த துறவி என்பதால் படம் பார்ப்பதும் ஒரு த்யானம் போலவே உள்ளது. இந்தியாவின் பாலிவுட்டின் தாகம் அதிகம் உள்ள பூட்டானில் இந்த படம் எப்படி உள்வாங்கி கொள்ளப் பட்டது என இயக்குனரிடம் கேட்டதற்கு,படத்தில் பாடல்களே இல்லையா என சிலர் கேட்டனராம்.



படத்தின் காட்சிகளும் அதன் பின்னணி இசையும் மெல்ல இதை எழுதும் போதும் நினைவு வந்து கொண்டும் , காதில் ஒலித்து கொண்டும் இருக்கிறது. படத்தில் ஓரிடத்தில் ஒரு பெண்ணின் புன்னகையை பார்க்கிறான் டான்டு , அதற்க்கு புத்த பிட்சு, “அழகாக இருக்கிறது அல்லவா அவள் புன்னகை, தற்காலிகமாக இருப்பதனால் தான் அது அவ்வளவு அழகாக இருக்காதா என்ன? என்கிறார். ஆனால் படத்தின் காட்சிகள் நிரந்தரமாய் நம்முள் உறைந்து விடுகிறது.