Sunday, May 31, 2009

Ill Postino - கவிதையில் வளர்ந்த காதல்

அரசியல் நெருக்கடிகளுக்காக தன் சொந்த நாடான சிலியை விட்டு, இத்தாலியில் உள்ள ஒரு தீவில் வாழும் நோபெல் பரிசு பெற்ற கவிஞர் பாப்லோ நெருதாவுக்கும் ஒரு தபால்காரருக்கும் ஆன உறவை சொல்லும் படம் “Ill Postino: The Postman”. 1983 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு இத்தாலி மொழிப் படத்தின் மறு ஆக்கமே இந்த திரைப்படம். Michael Radford இயக்கி Massimo Troisi, Philippe Noiretன் நடிப்பில் வெளி வந்த இத்திரைப்படம் 1994 ஆம் ஆண்டு வெளிவந்து 1995 ஆம் ஆண்டுக்கான BAFTA அவார்டையும் சிறந்த இசைக்காக ஆஸ்கார் விருதையும் பெற்றது. இப்படத்தின் இசையமைப்பாளர் Luis Enríquez Bacalov.



சிறப்பான காட்சியமைப்பும், பின்னணி இசையும் படம் துவங்கிய முதல் சில காட்சிகளுக்குள் நம்மை உள் இழுத்து கொள்கிறது. மாரியோ ரூப்போலோ, இத்தாலியில் உள்ள ஒரு சிறுதீவில் வாழ்கிறான். தன் தந்தை செய்யும் மீன்பிடித் தொழிலில் ஈடுபாடு இல்லாமல், அந்த நாட்டை விட்டு வெளியே சென்றால் சிறப்பாக வாழலாம் என்ற கனவோடு வலம் வருகிறான். சிலி நாட்டை சேர்ந்த கவிஞர் பாப்லோ நெருதா அவரது கம்யூனிச கருத்துகளுக்காக அவரது நாட்டை விட்டு வெளியேற்றப் பட, அவருக்கு இத்தாலி அரசாங்கம் அந்த தீவில் இடம் தருகிறது. அவர் அந்த நாட்டுக்குள் நுழைவதை திரை அரங்கில் காட்டப்படும் செய்தி குறிப்பில் இருந்து தெரிந்து கொள்கிறான் மாரியோ ரூப்போலோ. மேலும் அவரது காதல் கவிதைகளுக்கு பெண்களிடம் மிகுந்த வரவேற்ப்பு இருப்பதாகவும் அந்த செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.



தீவிற்கு வரும் பாப்லோ மலை உச்சியில் உள்ள ஓர் சிறிய வீட்டில் தன் மனைவியுடன் தங்குகிறார். அவருக்கு வரும் கடிதங்களை அவரிடம் சேர்க்க தபால் நிலையத்தில் ஆள் தேவைப் படுவதால், அந்த வேளையில் சேர்கிறான் ரூப்போலோ. தினம் பாப்லோவிற்க்கு வரும் கடிதங்களின் உரையைப் பார்க்கும் ரூப்போலோ அது பெரும்பாலும் பெண் பெயரை தாங்கி வருவதையே பார்க்கிறான். ஒரு வேலை தாமும் காதல் கவிதைகள் எழுதினால் பெண்களுக்கு தன்னையும் மிகவும் பிடிக்கும் என எண்ணி கொள்கிறான்.



பாப்லோவிற்கு கடிதம் கொடுக்கையில் ஒருநாள் அவரிடமே இதைப் பற்றி கேட்கிறான். அவர் சிரித்து கொண்டே, நீயும் எழுதி பார் என்கிறார். அவரது ஒரு கவிதையை படிக்கும் ரூப்போலோ அதில் வரும் சில விஷயங்களை சுட்டி காட்டி, இது என்ன என்கையில் அவை உருவகங்கள் (Metaphors) என்கிறார். அது தனக்கு வர என்ன செய்ய வேண்டும் என்கிறான்.



பின் ஒருநாள் அவருடன் கடற்கரையில் நடை செல்கையில் அவர், இந்த தீவு மிக அழகானது என்று சொல்லி,


“இந்த கடல் ஓயாமல் தன் பெயரை நமக்கு சொல்லி கொண்டே இருக்கிறது, நாம் உண்டு என்றால் அது இல்லை என்கிறது, நாம் இல்லை என்றல் அது ஆமாம் என்கிறது, தன் அலைகள் மூலம்” என்கிறார்.

இவை எல்லாம் உருவகங்களா என்கிறான் ரூப்போலோ. பின் நீ எதாவது சொல் என அவர் கேட்க அதற்கு “இந்த வானம், இந்த கடல், இந்த வாழ்க்கை இவை யாவையுமே வேறு எதோ ஒன்றின் உருவகங்கள் போல் உள்ளது” என்கிறான் ரூப்போலோ. அதற்க்கு அவர், இப்போது நீயே ஓர் உருவகத்தை உருவாக்கி உள்ளாய் என்கிறார். உணவு விடுதியில் வேலை செய்யும் ருசோ என்னும் பெண்ணை பார்த்த உடன் காதல் வயப் படுகிறான் ரூப்போலோ. அவள் உதடு பட்ட ஒரு சிறு பந்தை எடுத்து சென்று பாப்லோவிடம் கொடுத்து அவளை பற்றி கவிதை எழுத சொல்கிறான். பின்னர் அவர் அவனிடம் இந்த தீவிலியே மிக அழகான ஒரு விஷயம் சொல் என கேட்க அதற்கு ருசோ என அவள் பெயரை சொல்கிறான். அவளைப் பற்றி கவிதை எழுத அவளது உணவு விடுதிக்கு அழைத்து செல்ல, அங்கே அவளை காணும் பாப்லோ, கவிதை எதுவும் எழுதாமல் ரூப்போலோவிடம், அவளைப் பார்த்து கொண்டே “மிக அழகான கவிதையை நீ ஏற்கனவே அடைந்து விட்டு இருக்கிறாய்” என்கிறார்.




அதன் பின் அவர்களுக்கு திருமணம் அவர் தலைமையில் நடக்கிறது, பின் அவர் தனது தாய் நாட்டிற்கே திரும்ப அழைக்கப் படுகிறார். அவர் அங்கிருந்து சென்றப் பின், அவரிடம் தான் கண்ட சிந்தனையால் ஈர்க்கபடுகிறான் ரூப்போலோ.


கடைசி 20 நிமிடங்கள் மிக கவித்துவ எழுச்சி கொண்ட கணங்கள் நிரம்பியவை, காதல் உணர்வோடு பாப்லோவுடன் கொண்டிருந்த உறவை மிக அழகாக விளக்கி சொல்லும் காட்சிகள் அவை. அந்த காட்சிகளோடு பிணைந்து உள்ள இசை மிக சிறந்த பின்னணி இசைகளில் ஒன்று. அந்த தீவின் மலை முகடுகளில் காதல் நிரம்பிய கவிதைகள் எதிர் ஒளித்தே
கொண்டே இருக்கின்றன். படம் முடிந்த பின் நம் மனதிலும்.

இந்த வரிசையின் முந்தைய பதிவுகள் 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |

Saturday, May 23, 2009

என் ஜன்னல் வழியே #2

விஜய் டி.வியில் “விஜய் அவார்ட்ஸ் 2008” தொடங்கி இருகிறார்கள். நடுவர்களாக யூகி சேது, மதன், பிரதாப். கோபிநாத் தொகுத்து வழங்குகிறார். நேற்று தமிழ் சினிமா 2008ன் பொதுவான போக்கைப் பற்றி பேசி கொண்டிருந்தனர். வழக்கம் போல் யுகியின் பேச்சு ரசிக்கும் படி இருந்தது. சென்ற வருடம் 118 தமிழ் திரைப் படங்கள் வெளியாகி இருக்கிறது. அதில் Hit Ratio எனப்படும் வெற்றி விகிதாச்சாரம் 6.5 சதவிகிதம் தான் என்றார். இது சென்ற வருடத்தை விட 4 சதம் குறைவு.


55 புதுமுக நடிகர்கள், 44 இயக்குனர்கள் வரவு என்ற குறிப்பையும் வெளியிட்டார். அதே போல் சென்ற வருடம் பெண்களை மையப் படுத்திய படங்கள் சற்று அதிக அளவில் வெளி வந்துள்ளதாக குறிப்பிட்ட அவர் அபியும் நானும், பூ, தனம், சந்தோஷ் சுப்பிரமணியம் ஆகிய படங்களை எடுத்து காட்டினர். பிரதாப்பும், மதனும் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ளதாக ஒரு பிரமை ஏற்படுத்தும் படங்கள் இவை, இன்னும் நல்ல படங்கள் வேண்டும் என்றனர்.


*************************************************************************************


பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நன்றாக நடிக்க தெரிந்த பெண்கள் இருப்பதும் அவசியம். ஒரு ஷோபா, ஸ்ரீதேவி இல்லை சிம்ரன் அளவு நடிக்க தெரிந்தவர்கள் குறைந்து விட்டனர். உங்களுக்கு ஷோபா நினைவு இருக்கும் என நினைக்கிறன். பிரதாப் கிட்டார் வைத்து கொண்டு “என் இனிய பொன் நிலாவே” என்று பாடுகையில் அவரையே பார்த்தப்படி அமர்ந்திருக்குமே அந்த பெண்தான் ஷோபா. எளிய பாசாங்கு இல்லாத கிராமத்து நடிப்பு அவருடையது, முள்ளும் மலரும், நிழல் நிஜமாகிறது, மூடுப் பனி, ஏணிப்படிகள், அழியாத கோலங்கள் ஆகியப் படங்களில் அவரது நடிப்பு அழகு. இருக்கும் வரை அழகான படங்கள் நடித்தார், இறந்த பின்னும் பாலு மகேந்த்ராவை ஒரு அழகான படம் எடுக்க வைத்தார்.



************************************************************************************* 

மிகப் பெரிய திருப்பங்களோ, சுவாரசியப்படுத்தப்பட்ட கணங்களோ இல்லாமல், அலைகளை கடந்துவிட்டப் பின் தெரியும் சலனமற்ற கடலின் மேல் ஓடும் ஒரு சிறு படகை போல் ஓடுகிறது வண்ணநிலவனின் கடல்புரத்தில். மிகையாய் சொல்லக் கூடிய நிகழ்வுகளைக் கூட மெல்லிய மொழியில் பேசுகிறது இந்த நாவல். நாவலில் வரும் சில நிகழ்வுகள் இதற்கு முன் நாம் பார்த்தவை, ஆனால் அதை அந்த கடலோர மக்கள் எதிர்க் கொள்ளும் விதம், இது வரை நாம் படித்தவற்றில் இருந்து மாறுப்பட்டவை.


குரூஸ், மரிய்யமையின் மகன் ஸெபஸ்தி, மகள் பிலோமி ஆகிய நால்வரை சுற்றி பின்னப்பட்ட கதையில் அந்த நிலத்தின் விதவிதமான குணமும் அதன் தாக்கமும் அழகாக சொல்லப்பட்டுள்ளது. மரியம்மையை ஒருப்பக்கம் வெறுத்து ஒரு பக்கம் காரணமே இல்லாமல் அவள் மேல் பயந்து, அந்த கடல்புரத்தை விட்டு வெளியே எங்கும் செல்லத் துணியாத குரூஸ்.


எப்போதும் வசவு சொல் பொழியும், அந்த ஊர் வாத்தியுடன் இன்னது என்ற உறவு முறை சொல்ல முடியாமல் வாழும் மரியம்மை. சாமிதாசை காதலித்து விட்டு அவன் வேறு ஒருத்தியைக் திருமணம் செய்கையில் மௌனமாய் அதைப் பார்த்துகொண்டிருக்கும் பிலோமி என் அத்தணை மனிதர்களும் நிஜமாய் வாழ்கின்றனர் இந்த கடல்புரத்தில்.


மிக சிறிய விஷயங்களை கூட கூர்மை கவனித்து எழுதிஉள்ளார் வண்ணநிலவன்,


“மரியம்மைக்கு வேறு எந்த சத்தம் கேட்டலும் விழிப்பு தட்ட வாய்ப்பில்லை. கதவு திறக்கும் சத்தம் கேட்டல் மட்டும் விழிப்பு தட்டி விடுகிறது”


என்ற வரி போல. கடலை பற்றி பல வரிகள் நெகிழ்ச்சியானவை.


“அவர்களுடைய குடியிருப்புகள் அசிங்கமானவை, கடல் புனிதமானது”


“கடலுக்குப் போன அப்பசியைக் காணலையின்னு தேடி வந்த புள்ளக்கி வழிவிட்டு ஒதுங்கி போன கடலில்லா இது”


“கடல் தன் எழுச்சிமிக்க அலைகளால் ஆரவாரத்தை சொல்லுகிறது. அதில் மகிழ்ச்சியைத் தவிர வேறொன்றுமில்லை” என்பன போன்ற பல வரிகள்.

*************************************************************************************

போன வாரம் எனக்கும் என் நண்பனுக்கும் நடந்த உரையாடல்.

நான்: டேய், எங்க ப்ளாக்ல “என் ஜன்னல் வழியே” னு ஒரு கட்டுரை தொடர் எழுதுகிறேன்.


நண்பன்: எதப் பத்தி கம்பி எண்றத பத்தியா?


நான்: இல்லடா இது உலக சினிமா அப்புறம் இலக்கியம்.


நண்பன்: உலக சினிமானா?


நான்: வெளி மொழி திரைப்படங்கள்டா


நண்பன்: ஒ, தெரியும் தெரியும் “பாடி காட் மூனிஸ்வரன்” , “மாண்புமிகு மேஸ்திரி”…


நான்: அது இல்லடா, இலக்கியம் தெரியும் இல்ல


நண்பன்: இலக்கியம்னா?


நான்: நீ நாவல் படிச்சு இருக்கியா?


நண்பன்: உம், தேவிபாலா, ராஜேஷ்குமார்…


நான்: சரி அத விடு “ஜே.ஜே. சில குறிப்புகள்” தெரியுமா?


நண்பன்: அடப் பாவி இது தெரியாதா, நம்ம அமோகா எவ்வளவு தூரம் தேடுச்சு, அப்புறம் மாதவன் தானே அத தேடி கொடுப்பாரு. ஆமாம் அந்த பொண்ணுக்கும் ஏதோ இந்தி பட இயக்குனருக்கும்….


நான்: டேய், லைன் சரி இல்லன்னு நினைக்கிறன் அப்புறம் பேசுறேன்…


*************************************************************************************

Nuovo Cinema paradiso - சிதையும் கனவுகளும் சிலிர்ப்பூட்டும் நிதர்சனங்களும்

இத்தாலியின் புகழ்ப்பெற்ற இயக்குனரான Giuseppe Tornatore வின் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த படம் சினிமா பாராடிசோ. கேன்ஸ், ஆஸ்கார் உட்பட பல சர்வ தேச விருதுகளைப் பெற்றது இத்திரைப்படம். இத்தாலி மொழி படங்கள் சர்வ தேச அரங்கில் புகழ் பெற துவங்க இந்த திரைப்படம் மிக முக்கிய காரணம். சினிமாவின் மேல் தீரா காதல் கொண்ட ஒரு சிறுவனை தந்தையை போல் அரவணைக்கும் ஓர் உறவு, முதல் காதல், வளர்ந்த கிராமத்தைப் பிரிந்து நகரத்தை நோக்கி செல்லுதல் என மூன்று மெல்லிய உணர்வுகளை இணைத்து செல்லும் ஓர் அழகான படம் இது. எனியோ மோரிகோனின் இசை படத்தின் மிக பெரிய பலம்






தான் பிறந்து வளர்ந்த சிசிலி கிராமத்தை விட்டு வெகு தொலைவில் வாழும் அந்த நாட்டின் மிக புகழ்ப்பெற்ற இயக்குனரான சால்வடோருக்கு அவனது அம்மா தொலைபேசுவதாக தொடங்குகிறது. பின் சால்வடோரின் பார்வையில் படம் விரிகிறது. இரண்டாம் உலக போர் முடிந்த வருடங்களில் சிசிலியில் வாழ்ந்து வருகிறான் சால்வடோர், அவனது செல்லப் பெயர் டிட்டோ. அந்த ஊரின் பாதிரியாருக்கு உதவியை இருக்கும் டிட்டோ, பாதிரியார் திரை அரங்கிற்குள் செல்லும் போது மட்டும் தன்னை விட்டு செல்வதை உணர்ந்து, ஒருநாள் அவரை பின் தொடர்ந்து செல்கிறான். அப்போது அந்த பெரிய அரங்கில் அவர் மட்டும் தனியே அமர்ந்து அந்த ஊரில் மறு நாள் திரை இட இருக்கும் படத்தை தணிக்கை செய்வதை பார்க்கிறான். மறுநாள் திரை அரங்கிற்கு சென்று பார்கையில் பாதிரியார் படத்தின் காதல் மற்றும் முத்தக் காட்சிகளை நீக்கி இருப்பதை உணர்கிறான்.


அந்த நீக்கப்பட முத்த மற்றும் காதல் கட்சிகளை காண அவன் ஆப்ரேட்டர் அறைக்கு செல்கிறான், அங்கு வெட்டப்பட்டு கிடக்கும் பிலிம் சுருள்களில் அவை இருப்பதை பார்த்து ஆப்ரேட்டரான ஆல்பர்டோவிடம் அதை தான் எடுத்து கொள்ளட்டுமா என்கிறான். அதற்க்கு அவர் இந்த படத்தை திரும்ப அனுப்புகையில் அவைகளை ஒட்டி அனுப்ப வேண்டும் அதனால் தர முடியாது என சொல்லி அனுப்பி விடுகிறார்.




அந்த திரை அரங்கின் ஆப்ரேட்டரான ஆல்பர்டோ உடன் ஸ்நேகம் கொள்கிறான் டிட்டோ. முதலில் அவனை ஆப்ரேட்டர் அறைக்கு எல்லாம் வர கூடாது என தடுத்தாலும் அவனை ஏற்று கொள்கிறார் ஆல்பர்டோ. அவனுக்கு ஆப்ரேட்டரை இயக்கும் முறைகளை கற்று கொடுக்கிறார். அப்போதும் உன் வாழ்க்கை இந்த அறையுடன் முடிந்து விட கூடாது. இதன் மூலம் உனக்கு கிடைக்க போவது ஒன்றும் இல்லை என சொல்லியபடியே வளர்க்கிறார்.


ஒரு நாள் அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் ஆல்பர்டோ கண் பார்வை இழக்க, டிட்டோ அந்த திரை அரங்கின் ஆப்ரேட்டர் ஆகிறான். சுமார் பதினைத்து வருடங்கள் இப்படியே கழிகிறது. இதற்குள் அந்த அரங்கின் உரிமையாளரிடம் சொல்லி இரண்டு திரை அரங்குகளை அமைக்கிறான் டிட்டோ, ஆல்பர்டோ அவனது தோழன் போல, தந்தை போல் உடனே இருக்கிறார்.





அப்போது அந்த ஊருக்கு வரும் ஹெலன் என்னும் பெண் மீது காதல் வயப் படுகிறான் டிட்டோ. மிக மென்மையாய் நகர்ந்து வரும் அந்த காதல் அவரது தந்தை மூலம் சிதைக்கப்படுகிறது. பின் அவள் வேறு ஊருக்கு சென்று விட, டிட்டோவை அழைத்து நீ சிசிலியிலேயே இருந்தால் சரி அல்ல, அதனால் இந்த ஊரை விட்டு சென்று விடு எந்த காரணம் கொண்டும் நீ இந்த பூமிக்கு திரும்பாதே என சொல்லி அனுப்பி வைக்கிறார் ஆல்பர்டோ.


இப்போது அவர் இறந்து விட்டார் என்று அவன் அம்மா தொலைபெசியத்தை அடுத்து அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக 30 ஆண்டுகள் கழித்து சிசிலி வருகிறான் டிட்டோ என்னும் சால்வடோர். அங்கே அந்த திரை அரங்கம் இடிக்கப்பட்டிருக்கிறது, அவனது காதலி ஹெலன் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்கிறாள், கல்லூரியில் படிக்கும் வயதில் அவளுக்கு ஒரு பெண் இருக்கிறாள்.


ஆல்பர்டோவின் இறுதி சடங்கு முடிந்த பின் அவரது வீட்டிற்கு செல்கிறான் டிட்டோ அங்கு ஆல்பர்டோவின் மனைவி, “ இந்த 30 ஆண்டுகளில் எப்போதும் அவர் உன்னைப் பற்றியே பேசி கொண்டிருந்தார், நீ மிக பெரிய இயக்குனராக வந்ததை எண்ணி மிகவும் சந்தோஷப்பட்டார்” என்கிறாள். ஆனால், உன்னை மீண்டும் இங்கு அழைக்கட்டுமா எனக் கேட்டதற்கு எப்போதும் வேண்டாம் என்றே சொல்லி வந்தார் என்கிறாள். மேலும் அவர் உனக்காக ஒரு பரிசு பொருள் வைத்து இருந்தார் என சொல்லி ஒரு பெட்டியை தருகிறாள்.


அந்த பெட்டியில் ஒரு மிக பெரிய பிலிம் சுருள் ஒன்று இருக்கிறது. அதை அவன் திரையிட்டு பார்க்க, அவன் சிறு வயது முதல் அங்கு வாழ்ந்த வருடங்களில் திரையில் பார்க்க முடியாமல் போன அத்தனை காதல் மற்றும் முத்த காட்சிகளின் தொகுப்பு இருக்கிறது. எனியோ மோரிகோனின் பின்னணி இசையுடன் சுமார் இருபது நிமிடங்கள் அந்த முத்த காட்சிகள் திரையில் ஓடுவதுடன் படம் நிறைவடைகிறது.


சுமார் மூன்று மணி நேரம் ஓடக் கூடிய இப்படம் எந்த இடத்திலும் சலிப்பு தட்டவே இல்லை. மிக நேர்த்தியான திரைகதை மற்றும் இசை. ஆல்பர்டோ உடனான டிட்டோவின் உறவும், டிட்டோ காதல் வயப்பட்டிருக்கையில் அவனுக்கு அவர் சொல்லும் ஒரு காதல் கதையும் மிக கவித்துவமானது. கடைசி 40 நிமிடங்களில் படத்தில் பேசப் படும் வார்த்தைகள் மிக சொற்பமானவை. பின்னணி இசையே அத்தனையும் சொல்லி செல்கிறது.


இந்த வரிசையின் முந்தைய பதிவுகள் 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |

Friday, May 8, 2009

என் ஜன்னல் வழியே

கருத்தம்மா படத்தில் வரும் “காடு பொட்ட காடு” பாடல் பாரதிராஜாவும் மலேசியா வாசுதேவனும் பாடியது என போன வாரம் பிரகாஷ் சொல்லி இருந்தார். இத்தனை நாள் அது சாகுல் அமீத் என நினைத்திருந்தேன். எனக்கு விருப்பமான பாடலில் அந்த பாடலும் ஒன்று. வைரமுத்துவிடம் இருந்து பளிச்சிடும் பல வரிகள் எனக்கு மிக பிடித்தவை, இந்த பாடலில் வரும்


“பட்ட மரத்து மேலே

எட்டி பார்க்கும் ஓனான் போல

வாழ வந்தோம்

பூமி மேல”



என்னும் வரிகள் அதில் சேர்த்தி. அதே போல் கிழக்கு சீமையிலேவில் வரும் “அத்தைக்கு பிறந்தவளே” பாடலில்,



“அன்னமே உன்னையும் என்னையும்

தூக்கி வளர்த்த திண்ணையும்

சுகம்தானா?”



என்னும் வரி. காதல் பாடலில் கூட கிராமத்தின் ஏக்கத்தை நெகிழ்சியாய் வெளிப்படுத்தவது வைரமுத்துவின் சிறப்பு.


————————————————————————-


ஆதவனின் நாவல்கள் மற்றும் குறு நாவல்களை படித்து விட்டு தற்போது அவரது சிறுகதை தொகுப்பை படித்து வருகிறேன்.Brilliant!. “அப்பர் பெர்த், ஒரு அறையில் இரண்டு நாற்காலி, உயரமா சிகப்பா மீசை வச்சுக்காமல்” என பல கதைகள் பளிச். மனநிலையின் மாறுதல்களையும், நேரத்திற்கு தகுந்த வேடங்களையும் அத்தனை அழகாக சித்தரித்துள்ளார். கிழக்கு பதிபகம் வெளியிட்டு உள்ள அந்த புத்தகத்தை முடிந்தால் படித்து பாருங்கள். தமிழ் சிறுகதையின் வீச்சுக்கு ஒரு உதாரணம் அவர். காதலியை விடுதியில் விட்டுவிட்டு காதலன் வீட்டிற்க்கு திரும்பிகிறான், அதற்கு முன் அவளிடம் ஒரு முத்தம் கேட்கிறான், அதுதான் கதை. இதை சுமார் 8 பக்கங்களுக்கு எழுதியுள்ளார். பிரமிப்பாக இருக்கிறது.



அதே போல், சென்ற வாரம் படித்ததில் மிக அழமான பாதிப்பை உருவாக்கி சென்ற இரண்டு கதை. தி. ஜானகிராமனின் “சிலிர்ப்பு” மற்றும் “பரதேசி வந்தான்“. “சிலிர்ப்பு” தமிழின் மிக சிறந்த கதைகளில் ஒன்று என தயங்காமல் சொல்லலாம். ஒரு இடத்தில கூட ஆசிரியரின் குரல் ஒலிக்கவில்லை. ஒரு ரயில் பயணத்தில் ஒரு சிறுமி அவ்வளவுதான். அதன் தாக்கம் வெகு நேரம் இருக்க கூடியது. “மல்லி” என்ற பூமணியின் திரைப்படம் என நினைக்கிறன். அந்த படத்தின் இறுதி காட்சி ஏற்டுத்தும் அதிர்வுக்கு சமமானது.

—————————————————————————


ஜெய்க்க வேண்டிய மாட்சை கோட்டை விடுவது Mumbai Indiansக்கு பழக்கமாகி விட்டது. Punjab உடனான அந்த மாட்சை ஜெய்த்திருந்தால் இப்படி கண்ணை கசக்கி கொண்டு அமர்ந்திருக்க தேவை இல்லை. ஜெயசூரியா நாளை Deccan உடனாவது ஆடுவாரா என எதிர்பார்க்கலாம். 40 பந்துகளில் 50 என்பது எல்லாம் இப்போது உத்தப்பா போன்றவர்களே அடிக்கிறார்கள். 15 பந்துகளில் அல்லது குறைந்த பட்சம் 20 பந்துகளில் என்றால் தான் அவரக்கு மரியாதை.


—————————————————————————


தாம்பரத்தில் பேருந்து நிலையம் 5 கி.மீ நீளம் உடையது. ரயில்வே ஸ்டேஷன் வாசலில் இருந்து க்ரோம்பெட் வரை நீள்கிறது. நான் சொல்வது வெளியூர் பேருந்துகளுக்கு மட்டும். நடுவில் எங்கு வேண்டுமானாலும் நிறுத்தி ஏற்றி கொள்வார்கள். அது அந்த அந்த பேருந்தின் ஓட்டுனர், நடதுனரின் மனதை பொருத்து. ஏதேனும் பொதுவான பேருந்து நிறுத்தம் இருந்தால் பரவா இல்லை. தாம்பரத்திலேயே சிதம்பரம், பாண்டிச்சேரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் போக வேண்டிய கூட்டம் அதிகம் இருப்பதால். இப்போது இருப்பதை விட கூடுதல் பேருந்துகளை தாம்பரத்தில் இருந்தே துவக்கலாம். ஆனால் செய்ய மாட்டர்கள்.தாம்பரம் நகராட்சி ஆனால் ஒருவேளை செய்யக் கூடும். இல்லை என்றால் டிக்கெட் விலை குறைக்க ஒரு பாராளுமன்ற தேர்தல் தேவை பட்டது போல் இதற்கு ஒரு சட்டமன்ற தேர்தல் தேவைப் படலாம்.


—————————————————————————


சும்மாதான் எழுத ஆரம்பித்தேன். இந்த பதிவுக்கும் நீங்கள் அதரவு அளித்தால், உங்கள் ஆதரவோடு எனது 50வது பதிவை நிறைவு செய்கிறேன். புத்தக மதிப்புரை, உலக சினிமா, கட்டுரைகள், சிறுகதைகள், ஒரே ஒரு போட்டி என முயன்று பார்த்த அத்தனை விஷயங்களுக்கும் அதரவு அளித்த அனைவருக்கும் மிக்க நன்றி. “எழுத்தின் ரகசியம் எழுதுவதே” என்றாராம் சுந்தர ராமசாமி. எழுத எழுதத்தான் வருகிறது எழுத்தும் அப்புறம் மறக்க முடியாத சில நண்பர்களும்.

தாழிடப்பட்டவை



தாழிடப்பட்ட கதவுகளுக்குப் பின்னால்

கசியும் கணங்கள் கசப்பானவை…




ஆசையாய் வளர்த்த நாய்க்குட்டியோ

எதிர் வீட்டு குழந்தையின் சிரிப்போ

மீட்டுத் தர கூடிய கனவை,



அலட்சியமாய் சொல்லப் பட்ட

சில வார்த்தைகள்

சில புறக்கணிப்புகள்

சில மதிப்பீடுகள்

கலைத்துவிடுகின்றன.




தாழிடப்பட்ட அந்த மனங்கள்

தோள் சாய்தலோ

கண்ணீர் துடைக்க

ஒற்றை விரலோ இல்லாமல்

முற்றுப்பெறுகின்றன.




உலகின் பெருங்கருணைக்கு

சாட்சியாக சுவரொட்டியில்

கண்ணீர் அஞ்சலி புகைப்படங்கள்

சிரித்தப்படியே இருக்கின்றன….

Tuesday, May 5, 2009

கல்யாண்ஜியின் கேலிசித்திரம்

எளிய வார்த்தைகளை சம்ப்ரதயமான பொருள்களிலிருந்து விடுவித்து வேறுஒரு தளத்திற்கு கொண்டு சென்று மிக அழகான, அழமான அதிர்வுகளை உருவாக்கிட வல்லவை கல்யாண்ஜியின் கவிதைகள். அவரது தேர்ந்தெடுத்த கவிதைகளின் தொகுப்பை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. “இன்னொரு கேலிசித்திரம்” நான் இதுவரை படித்த சிறந்த கவிதைகளில் ஒன்று என்பேன்.


இன்னொரு கேலிசித்திரம்


காலம் என் கேலிச்சித்திரத்தை

வரைந்துவிட்டது

உயரத்தையும்

முன்பற்க்களின் இடைவெளியையும்

நிச்சயம் கணக்கில் எடுக்கும்

என்று நினைத்திருந்தேன்

எடுக்கவில்லை

என் கூர்மையற்ற மூக்கைக்கூட

அது பொருட்படுத்தக் காணோம்

கனத்த கண்ணாடியின்றியும்

முகத்தின் சாயல்

பிடிப்பட்டிருந்தது

அதன் கோடுகளுக்குள்

என் உடல் மொழியனைத்தும் அடங்கியிருந்தன

என் சித்திரத்தை விட

என் கேலிச்சித்திரத்தை ரசிக்க முடிகிறது

எனினும்

என்னுடைய எந்த அடையாளத்தை

அது ஒளித்துவைதிருக்கிறது தன்னிடம்

என்ற புதிரை

என்னால் விடுவிக்க முடியவில்லை

அதற்குள் வரையப்பட்டுவிடுகிறது

அடுத்த நாளில்

இன்னொரு கேலிச் சித்திரம்…



கல்யாண்ஜி கவிதைகள்

ஆழி பதிப்பகம் விலை ரூ50

நீல. பத்மநாபனின் பள்ளிகொண்டபுரம்

திருவனந்தபுரம் மற்றும் ஸ்ரீ பத்மநாபசாமியை பின்புலமாய் கொண்டு புனைய பட்ட நீல. பத்மநாபனின் நாவல் “பள்ளிகொண்டபுரம்”. அனந்தன் நாயர் என்னும் காரியஸ்தல அலுவலகத்தின் குமாஸ்தாவின் இரு நாள் நினைவுகள் தான் கதை. கடந்த 30 ஆண்டுகளில் அதிகம் பாராட்ட பெற்ற இந்த நாவல் தமிழில் முதன் முதலில் நனவோடை உத்தி (Stream of Conscious) மூலம் எழுதப்பட்ட நாவல்.




அனந்தன் நாயர் அதிகாலை 3 மணிக்கே எழுந்து குளித்து விட்டு பத்மநாபசாமியை தரிசிக்க வருவதாக நாவல் தொடங்குகிறது. மிகவும் பலவீனமான, சாதரண குமாஸ்தாவான அனந்தன் நாயருக்கு அழகான மனைவியாக கார்த்தியாயினி வாய்த்து இருக்கிறாள், அவள் விக்கிரமன் நாயர் என்னும் தாசில்தாரால் கைப்பற்றப்படுகிறாள். அவள் பரிதவிக்க விட்டு சென்றாலும் இரு குழந்தைகளையும் வளர்த்து ஆள் ஆக்குவதையே தன் லட்சியமாக கொண்டு பதினைந்து வருடமாய் மறுமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார் அனந்தன் நாயர். இந்த விஷயங்கள் முழுதும் அவரது நினைவு மூலம் நாவலில் சொல்ல படுகிறது.



திருவனந்தபுரமும் கோவிலும் ஒரு குறியீடாகவே பயன்படுத்தபட்டுள்ளது, அந்த நகரின் ஒவ்வொரு இடமும், கோவில் பிரகாரத்தில் அவர் சுற்றி வருகையில் அவர் எதிர்கொள்ளும் சிலையும் என அதனை விஷயங்களும் அவருக்கு சில எண்ணங்களை நினைவு படுத்திய வண்ணமே உள்ளது. அந்த எண்ணம் மற்றொரு எண்ணத்தை தூண்டுகிறது, இப்படி உட்சிக்கல் நிறைந்த இடத்தினையும் பத்மநாபன் மிக சாதரண வரிகளில் சொல்லி செல்கிறார். மேலும் கதை நடக்கும் காலகட்டம், இந்திய சுதந்திரத்தி்க்கு பின், கேரளாவில் தாய் வழி சமூகம் முடிவுற்று, சில புரட்சி கோஷங்கள் வெடித்த சமயமாக உள்ளது.


அதுவரை பல பாரம்பரிய பெருமை கொண்ட, வருடத்தின் எல்லா நாட்களும் திருவிழா கோலம் கொண்ட பூமி மெல்ல மெல்ல தன் தனித்தன்மையை இழந்து முற்றிகும் புதிய மனிதர்களின் வருகையால் சூழ பட்டுள்ளதை மென்மையாய் விவரிக்கிறது இந்நாவல். முதல் 180 பக்கங்களுக்கு மிக மிக சாதரண தன்மையுடன் எந்த வித விமர்சனமோ, அழ் மன தூண்டுதலோ இல்லாமல், “உம் … முன்பெல்லாம், உம் …. அப்போ என்ற” அந்த கால வசனங்கள் போல் (மெல்ல ஓர் சலிப்பயே உருவாக்கும் வண்ணம் பல இடங்களில் இந்த “உம்” வருகிறது ) சொல்லி செல்கிறது.


அதன் பின் வரும் பக்கங்கள் மீண்டும் படிக்க தூண்டும் வகையில் சில விஷயங்களை விட்டு செல்கிறது. முன்னுரையில் நீல. பத்மநாபன் கூறுவது போல், அனந்தன் நாயரின் உலசிக்கல்களை மிக தெளிவாய் படம் பிடித்து காட்டுகிறது. அவர் மனம் ஒரு சுய இரக்கத்தை தேடியும் , மெல்ல ஓர் வன்முறையும் காழ்புனர்ச்சியும் காழ்புணர்ச்சியும் கொண்டும் நகர்கிறது.


இறுதி பாகங்களில் அனந்தன் நாயர் முன் அவரது மகன் முன் வைக்கும் கேள்விகள் மிக முக்கியமானவை, மேலும் அது நம்மை மீண்டும் அவரது மனதை புரிந்து கொள்ள நாவலை படிக்க வைக்க கூடியவை. எளிய வரிகள் மூலம் மிக அழகாய் சித்தரிக்கபட்டிருக்கும் இந்நாவல் சமீபத்தில் படித்ததில் மிக பிடித்திருந்தது.

மறுக்கப்படுதல்

ஒவ்வொரு கணமும் உலகில்

யாருக்கோ, எதற்கோ

மறுக்கப்படுகிறது!!


மறுக்கப்பட்ட கணங்களின் வெம்மையில்

உதிரும் கண்ணீர் -


குளியலறை தண்ணீருடனோ

பூட்டப்பட்ட அறையின் கண்ணாடி முன்னோ

வெளி படர்ந்த மொட்டை மாடியிலோ

கரைகிறது.


மறுக்கப்பட்ட இரவுகள்

தெரு நாய்களின் கேவல்களாலும்

நட்சத்திரங்கள் அற்ற வானத்தாலும்

சூழப்பட்டுள்ளது..


காலை - மீண்டும்

ஒரு போலி புன்னகை அணிந்து கொண்டு

எப்போதும் போலவே

நகர்கிறது!!


வாழ்க்கை -

மறுக்கப்பட்ட கணங்களின் நிழலுக்கும்

மறுக்க பட போகும் கணங்களின் எதிர்பார்ப்புக்கு

இடையிலும் ஊர்கிறது ….