Sunday, May 31, 2009

Ill Postino - கவிதையில் வளர்ந்த காதல்

அரசியல் நெருக்கடிகளுக்காக தன் சொந்த நாடான சிலியை விட்டு, இத்தாலியில் உள்ள ஒரு தீவில் வாழும் நோபெல் பரிசு பெற்ற கவிஞர் பாப்லோ நெருதாவுக்கும் ஒரு தபால்காரருக்கும் ஆன உறவை சொல்லும் படம் “Ill Postino: The Postman”. 1983 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு இத்தாலி மொழிப் படத்தின் மறு ஆக்கமே இந்த திரைப்படம். Michael Radford இயக்கி Massimo Troisi, Philippe Noiretன் நடிப்பில் வெளி வந்த இத்திரைப்படம் 1994 ஆம் ஆண்டு வெளிவந்து 1995 ஆம் ஆண்டுக்கான BAFTA அவார்டையும் சிறந்த இசைக்காக ஆஸ்கார் விருதையும் பெற்றது. இப்படத்தின் இசையமைப்பாளர் Luis Enríquez Bacalov.



சிறப்பான காட்சியமைப்பும், பின்னணி இசையும் படம் துவங்கிய முதல் சில காட்சிகளுக்குள் நம்மை உள் இழுத்து கொள்கிறது. மாரியோ ரூப்போலோ, இத்தாலியில் உள்ள ஒரு சிறுதீவில் வாழ்கிறான். தன் தந்தை செய்யும் மீன்பிடித் தொழிலில் ஈடுபாடு இல்லாமல், அந்த நாட்டை விட்டு வெளியே சென்றால் சிறப்பாக வாழலாம் என்ற கனவோடு வலம் வருகிறான். சிலி நாட்டை சேர்ந்த கவிஞர் பாப்லோ நெருதா அவரது கம்யூனிச கருத்துகளுக்காக அவரது நாட்டை விட்டு வெளியேற்றப் பட, அவருக்கு இத்தாலி அரசாங்கம் அந்த தீவில் இடம் தருகிறது. அவர் அந்த நாட்டுக்குள் நுழைவதை திரை அரங்கில் காட்டப்படும் செய்தி குறிப்பில் இருந்து தெரிந்து கொள்கிறான் மாரியோ ரூப்போலோ. மேலும் அவரது காதல் கவிதைகளுக்கு பெண்களிடம் மிகுந்த வரவேற்ப்பு இருப்பதாகவும் அந்த செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.



தீவிற்கு வரும் பாப்லோ மலை உச்சியில் உள்ள ஓர் சிறிய வீட்டில் தன் மனைவியுடன் தங்குகிறார். அவருக்கு வரும் கடிதங்களை அவரிடம் சேர்க்க தபால் நிலையத்தில் ஆள் தேவைப் படுவதால், அந்த வேளையில் சேர்கிறான் ரூப்போலோ. தினம் பாப்லோவிற்க்கு வரும் கடிதங்களின் உரையைப் பார்க்கும் ரூப்போலோ அது பெரும்பாலும் பெண் பெயரை தாங்கி வருவதையே பார்க்கிறான். ஒரு வேலை தாமும் காதல் கவிதைகள் எழுதினால் பெண்களுக்கு தன்னையும் மிகவும் பிடிக்கும் என எண்ணி கொள்கிறான்.



பாப்லோவிற்கு கடிதம் கொடுக்கையில் ஒருநாள் அவரிடமே இதைப் பற்றி கேட்கிறான். அவர் சிரித்து கொண்டே, நீயும் எழுதி பார் என்கிறார். அவரது ஒரு கவிதையை படிக்கும் ரூப்போலோ அதில் வரும் சில விஷயங்களை சுட்டி காட்டி, இது என்ன என்கையில் அவை உருவகங்கள் (Metaphors) என்கிறார். அது தனக்கு வர என்ன செய்ய வேண்டும் என்கிறான்.



பின் ஒருநாள் அவருடன் கடற்கரையில் நடை செல்கையில் அவர், இந்த தீவு மிக அழகானது என்று சொல்லி,


“இந்த கடல் ஓயாமல் தன் பெயரை நமக்கு சொல்லி கொண்டே இருக்கிறது, நாம் உண்டு என்றால் அது இல்லை என்கிறது, நாம் இல்லை என்றல் அது ஆமாம் என்கிறது, தன் அலைகள் மூலம்” என்கிறார்.

இவை எல்லாம் உருவகங்களா என்கிறான் ரூப்போலோ. பின் நீ எதாவது சொல் என அவர் கேட்க அதற்கு “இந்த வானம், இந்த கடல், இந்த வாழ்க்கை இவை யாவையுமே வேறு எதோ ஒன்றின் உருவகங்கள் போல் உள்ளது” என்கிறான் ரூப்போலோ. அதற்க்கு அவர், இப்போது நீயே ஓர் உருவகத்தை உருவாக்கி உள்ளாய் என்கிறார். உணவு விடுதியில் வேலை செய்யும் ருசோ என்னும் பெண்ணை பார்த்த உடன் காதல் வயப் படுகிறான் ரூப்போலோ. அவள் உதடு பட்ட ஒரு சிறு பந்தை எடுத்து சென்று பாப்லோவிடம் கொடுத்து அவளை பற்றி கவிதை எழுத சொல்கிறான். பின்னர் அவர் அவனிடம் இந்த தீவிலியே மிக அழகான ஒரு விஷயம் சொல் என கேட்க அதற்கு ருசோ என அவள் பெயரை சொல்கிறான். அவளைப் பற்றி கவிதை எழுத அவளது உணவு விடுதிக்கு அழைத்து செல்ல, அங்கே அவளை காணும் பாப்லோ, கவிதை எதுவும் எழுதாமல் ரூப்போலோவிடம், அவளைப் பார்த்து கொண்டே “மிக அழகான கவிதையை நீ ஏற்கனவே அடைந்து விட்டு இருக்கிறாய்” என்கிறார்.




அதன் பின் அவர்களுக்கு திருமணம் அவர் தலைமையில் நடக்கிறது, பின் அவர் தனது தாய் நாட்டிற்கே திரும்ப அழைக்கப் படுகிறார். அவர் அங்கிருந்து சென்றப் பின், அவரிடம் தான் கண்ட சிந்தனையால் ஈர்க்கபடுகிறான் ரூப்போலோ.


கடைசி 20 நிமிடங்கள் மிக கவித்துவ எழுச்சி கொண்ட கணங்கள் நிரம்பியவை, காதல் உணர்வோடு பாப்லோவுடன் கொண்டிருந்த உறவை மிக அழகாக விளக்கி சொல்லும் காட்சிகள் அவை. அந்த காட்சிகளோடு பிணைந்து உள்ள இசை மிக சிறந்த பின்னணி இசைகளில் ஒன்று. அந்த தீவின் மலை முகடுகளில் காதல் நிரம்பிய கவிதைகள் எதிர் ஒளித்தே
கொண்டே இருக்கின்றன். படம் முடிந்த பின் நம் மனதிலும்.

இந்த வரிசையின் முந்தைய பதிவுகள் 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |

4 comments:

  1. Thank you Very Much.

    Peyare World Cinemanu vachu irukeenga, avalavu patra!! :-)

    ReplyDelete
  2. Fine. I think it is not possible to give comment in tamil here.
    by
    www.kanalvanan.blogspot.com

    ReplyDelete
  3. Thanks Kanalvanan, Pothuva google transliterationla type panni thaan paste pannuven. Is there a way to add tamil typing here itself?.

    ReplyDelete