Friday, July 10, 2009

எழுதுவதே எழுத்தின் ரகசியம்

தொடர்பு கொள்ளுதலே வாழ்க்கை என்னும் அழகான வாக்கியம் உண்டு. நம்மை வெளிப்படுத்திக்கொள்ள தொடர்ந்து முயற்சித்த படியே இருக்கிறோம், சொற்களால், அசைவுகளால், இல்லை காதலர்கள் இடையே இருப்பது போன்ற பொருள் பொதிந்த மௌனங்களால். நம் மனம் அரவணைப்புக்கு ஏங்கியே வண்ணமே படைக்கபட்டிருக்கிறது போலும். பிறந்த உடன் கைக்கு பிடிபடாத காற்றை அணைக்க முற்படுவது முதல்!. கலை இலக்கியம் ஆகியவையும் யாரோ தனக்கு நேர்ந்ததை அல்லது தான் கற்பனையில் கண்டத்தை மற்றவரோடு பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சி தான்.

I shot an arrow into the air,

It fell to earth, I knew not where;

For, so swiftly it flew, the sight

Could not follow it in its flight.


I found the arrow, still unbroke;

And the song, from beginning to end,

I found again in the heart of a friend.

என்ற Henry Longfellow வின் கவிதை போல, நாம் எழுதுவது எங்கோ ஒரு நண்பன் மனத்தில் தைக்கிறது.

எழுத்தாளர்கள் எழுதுவதை பற்றியும், எழுத்தை பற்றியும் சொல்லியதின் சிறு தொகுப்பு இது.

இதில் ப்ளாக் எழுதுவது பற்றி சுஜாதா அவர்கள் கற்றதும் பெற்றதும் தொடரில் சொல்லியவையும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை வழங்கிய அரவிந்தனுக்கு நன்றி.

சுஜாதா ப்ளாக் எழுதுவது பற்றி க. பெ வில்,



நன்றி: ஆனந்த விகடன்

எழுதுவதின் இழப்புகள் என்னும் தலைப்பில் சுஜாதா தன்னுடைய “எழுத்தும் வாழ்கையும்“ புத்தகத்தில்,

“உள்மனத்தில் ஓர் எண்ணத் தொடர் எழுத்தாளனுக்கு ஓடிக்கொண்டே இருக்கும். எந்த சம்பவத்தைப் பார்த்தாலும், எந்தச் சம்பாஷணையைக் கேட்டாலும், இதில் ஒரு கதை இருக்கலாம் போல ஒரு தனிப்பட்ட யோசனை. சில சமயம் இந்த உப எண்ணங்கள்… உப கவனம் இழப்பாகக் கூட இருக்கும். எதையும் வைத்து கதை பண்ண முடியும் என்கிற தன்னம்பிக்கை சில சம்பவங்களின் தாக்கத்தை மழுப்பிவிடும் அபாயம் உள்ளது. ”

புதியதாய் எழுத ஆரமிப்பவர்கள் எதிர் கொள்ளும் தடுமாற்றங்கள் குறித்து ஜெயமோகன் தன்னுடைய வலைப்பதிவில்,

“எழுதித்தான் எழுத்தில் உள்ள சிக்கல்களையும் தடைகளையும் தெரிந்துகொள்ள் முடியும். எழுதும்போது எழுத்தில் நம் மனம் ஒன்ற வேண்டும். நாம் முழுமையாக அதில் ஈடுபடவேண்டும். ஒரு கனவு போல கதை நம்மில் நிகழ வேண்டும். கதைமாந்தர்களையும் சூழலையும் நாம் கண்ணெதிரே காண வேண்டும். அதற்கான பயிற்சி என்பது தொடர்ச்சியாக எழுதுவதே.

ஆரம்பத்தில் நமக்கு அப்படி எழுத முடியாமைக்குக் காரணம் நாம் எழுத்துக்குப் பழகவில்லை என்பதே. நம் மனம் கற்பனைசெய்யும்போது எழுத முடிவதில்லை. எழுதுவதில் உள்ள கவனம் நம் கற்பனையை தடுக்கிறது. ஆகவே இரண்டையும் சமன்செய்யும்பொருட்டு நாம் மாற்றி மாற்றி எழுதிப்பார்க்கிறோம். கிழித்துப்போடுகிறோம். எரிச்சல் கொள்கிறோம் தொடர்ந்து எழுதிக்கோண்டே இருந்தால் எழுத்து கைக்கும் மனதுக்கும் பழகி விடும் . அது தானாகவே நிகழும்.

நீங்கள் கற்பனைமட்டும் செய்தால் போதும். சிலம்பாட்டம் கற்றுக்கொள்ளச் சென்றால் முதலில் சிலம்பைச் சுழற்றவே கற்றுக்கொடுப்பார்கள். சுழற்றிச் சுழற்றி சிலம்பு கையிலிருப்பதே தெரியாமல் ஆகும். அப்போது வித்தையில் மட்டுமே கவனம் இருந்தால் போதும். மனம்செல்லும் இடத்துக்கு கம்பு போகும். அதைப்போல எழுத்து வசமாகவேண்டுமென்றால் எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். ஆரம்பகட்டத்தில் இது அவசியம்.“

எழுத்தாளனாக தன்னுடைய இயல்பு பற்றி லா. சா. ராமாமிர்தம் தன்னுடைய சிறுகதை தொகுதியில்,

“நான் எழுத்தை பயில்பவன்; வாழ்க்கையின் கீதத்தை பாடிக்கொண்டு, நடுநிலவில் தெருவழியே நடந்து செல்கிறேன், வாசல் கதவுகள், ஜன்னல் கதவுகள் திறக்கின்றன, சில மூடுகின்றன. சிலர் திண்ணைக்கு வந்து நிற்கின்றனர். சிலர் அன்பில் என்னை வழியனுப்புவது போலும், ஒரு தூரம் வந்து அங்கு நின்று விடுகின்றனர். நான் கண்ட இன்பம், பாடி கொண்டே போகிறேன். நான் என் இயல்பில் உணர்சிபூர்வமானவன். பாடுவது அன்றி வேறு அறியேன்.”

எளிய, கிராமம் சார்ந்த எழுத்துக்கள் மூலம் அறியப்படும் நாஞ்சில் நாடன் எழுத்துக்காக அவர் வரித்து கொண்ட இலக்கணங்கள் பற்றி,

“சிறுகதையின் இலக்கணம் அழகு, சீர்மை, செறிவு, கலை, வெளிப்பாடு, அக்கறை, தொனி… எத்தனை சொற்கள் இல்லை தமிழில். எல்லாம் காலத்துக்குக் காலம், கோணத்துக்கு கோணம், இடத்துக்கு இடம் மாறும் தன்மைத்தன. மாறாத சில உண்டு. மனித நேயம், சொல்வதில் நேர்மை… நான் வரித்துக்கொண்ட இலக்கணங்கள் அவை. அதில் சோர்வில்லை, தளரவில்லை இன்றும் எனக்கு.

கதைகளில் நான் இன்னும் வாழ்வது புலனாகிறது. மனம் புதிய படைப்பு வேகம் கொள்கிறது. தமிழ்ச் சிறுகதை இலக்கியம் என்னும் தடகளத் தொடர் ஓட்டத்தில் என்னாலும் சில தூரம் ஓட முடிந்திருக்கிறது என்பது ஆசுவாசம் தருவதாக இருக்கிறது. கோப்பையை யார் முத்தமிடுகிறார்கள் என்பதிலல்ல எனது ஆர்வம், ஓட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதிலும் ஜீவன் வறண்டு போகவில்லை என்பதிலும் எனக்கு சமாதானம் உண்டு. ”

எழுதுவது பற்றி, தன்னுடைய கதைகள் பற்றி ஆதவன் சொன்னவை,

"என் போக்கில் என்னுடைய சொந்த வேகத்தில் இயங்குகிற விருப்பமுள்ள எனக்கு சொற்கள் வழங்குகிற வாய்ப்புகள் கவர்ச்சியாக இருக்கின்றன. நழுவிப் போய்விட்ட பல கணங்களை நிதானமாக சொற்களில் உருவாக்கப் பார்கிறேன், புரிந்து கொள்ள முயல்கிறேன். என் கதைகளில் இருப்பது நானும்தான், நீங்களும்தான். உங்களுடன் என்னுடைய பாணியில் அல்லது வேகத்தில்? உறவு கொள்கிற முயல்கிற முயற்சிகளே எனது கதைகள்"

No comments:

Post a Comment