Wednesday, May 12, 2010

நூறு நாட்களை தாண்டி...

ஒரு கவிதைக்கான கணத்தை அனுபவித்து அதை அப்படியே வார்த்தைகளில் வடிக்க போகையில் சரியான சொற்கள் கிடைக்காமல் வெறும் வானம், நிலா, காற்று, பூ, பட்டாம்பூச்சி, அடியே பெண்ணே! என வந்து கொண்டிருந்தால் இது போல கட்டுரை எழுத ஆரமித்து விடுவேன். எனக்கு தகுந்தாற்போல எதாவது விஷயம் கிடைத்துவிடுகிறது. இன்றோடு இந்த நாட்டிற்கு வந்து நான்கு மாதங்கள் ஆகிறது. நூறு நாட்களை தாண்டி வெற்றிகரமாய் ஓடிக்கொண்டு இருக்கிறேன். இளவேனிர்காலைத்தை கடந்து மெல்ல இப்போது தான் வெயிலை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது அமெரிக்கா.

எம்.ஜி.ஆரின் அறிமுகம் போல "நான் வருகையில் என்னை வரவேற்க பனி மழை பொழிந்து" கொண்டு தான் இருந்தது. ஆனால் அடுத்த காட்சியில் எல்லாம் சரியாகிவிடும் என நினைத்தால் அடுத்த பருவம் மாற இரண்டு மாதம் பிடித்தது. வழக்கம் போல விமான நிலைய பரிசோதனை அமோகமாக நடைபெற்றது. விமான நிலைய அதிகாரிகளிடம் நான் வைத்து இருப்பது சாம்பல் எனப்படும் திருநீறுதான் என்பதை நிரூபிக்க பத்து நிமிடம் போராடினேன். என் சட்டை மற்றும் கார்சறாய் பையை சுத்தமாய் காலி செய்து பின்பும் கொஞ்சம் கூட கூச்ச படாமல் அந்த பரிசோதனை கருவி என்னை பார்த்து ஒலி எழுப்பி கொண்டே இருந்தது. எனக்கு பின்னால் வரிசையில் வந்து கொண்டு இருந்தவர்கள் சற்று பயந்து பின்வாங்கினார்கள். அந்த ஒரு நிமிடம் சற்று மிதப்பாக இருந்தது. இரண்டு மூன்று அதிகாரிகள் என்னை சூழ்ந்து கொண்டு ஒரு குற்ற்றவாளி பார்வை வீசினார்கள். இதற்கு மேலும் அமைதியாக இருந்தால் குருதிபுனல் இறுதிகாட்சி கமல் அளவிற்கு மூஞ்சியை மாற்றி விடுவார்களோ என ஒரு சின்ன பதற்றம் தொற்றிகொண்டது. எனது தாயத்தை  கழற்றிய பிறகுதான் சத்தத்தை குறைத்தது.

கைபேசி உபயோகிக்க ஆரமித்ததிலிருந்து கைகடிகாரம் அணியும் பழக்கம் இல்லை. இது பற்றி யாரேனும் தனியாக ஆராய்ச்சி செய்யலாம். இது போலபேரரசுவுக்கும் நல்ல சினிமாவிற்கும்” முடிச்சு போடும் வகையறா நியுயார்க் டைம்ஸ் கட்டுரைகள் தொகுப்பு ஒன்றை படித்து கொண்டு இருக்கிறேன். அதை பற்றி தனியே எழுதுகிறேன். நவார்க் விமான நிலையத்தில் ஆறு மணி நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. வீட்டிற்கு தொலைபேச ஒரு டாலர் சில்லறைக்காக மூன்று டாலருக்கு  ஜூஸ் வாங்கினேன். அது என்ன பசியோ தெரியவில்லை, நான் கொடுத்த நான்கு இருப்பத்தைந்து சென்ட் நாணயங்களையும் முழுங்கி ஏப்பம் விட்டது அந்த தொலைபேசி. போதாகுறைக்கு கடைசியாக ஸ்பானிஷில் வேறு திட்டியது. கடைசியாக ஒரு வழியாக இந்தியானபோலிஸ் வந்து சேர்ந்தேன்.

நான் தங்கபோகும் அறையில் வசிக்கும் நண்பன் வெளியூர் சென்று இருந்தான். அவன் வர எப்படியும் மூன்று மணி நேரம் ஆகும் என தெரிந்தது. என்ன செய்வது என முழித்து கொண்டு இருந்தேன். நைஜீரியா நாட்டை சேர்ந்த சாம் என்பவர் என்னை அழைத்து சென்று ஒரு தேநீர் வாங்கி தந்தார். தான் முதல் முதலில் இந்த நாட்டிற்கு வந்தபோது இப்படிதான் நின்று கொண்டு இருதேன் என்றார். அறிவினான் ஆகுவதுண்டோ என்ற குறள் நினைவில் வந்து போனது.

சென்னையில் மக்கள் வெள்ளத்தில் நீந்தி கொண்டு இருந்து விட்டு வந்தேன், இங்கு ஏழை வீட்டு பாயசத்தில் அகப்படும் முந்திரி போல (உபயம்: வைரமுத்து) மனிதர்களை பல சமயம் காண்பதே அரிது. இந்தியானாபொலிஸ், இந்தியானா மாகாணத்தின் தலைநகரம், அமெரிக்கர்களின் வரலாற்றுக்கு சற்றும் பங்கம் விளைவிக்காதவகையில் இங்கேயும் தங்கியிருந்த நேட்டிவ் அமெரிகன்ஸ் எனப்படும் பழங்குடி மக்களை விரட்டி அடித்து விட்டு குடியேறிகள் அபகரித்ததாக வரலாறு கூறுகிறது (பா. ராகவனின் டாலர் தேசம், தமிழில் அமெரிக்கா வரலாறினை படிக்க மிகவும் உகந்த புத்தகம்.) . சுமார் எழுப்பதைந்து சதம் வெள்ளை இன அமெரிக்கர்களும் இருபத்து மூன்று சதம் கறுப்பின மக்களும் வாழ்கின்றனர். மிச்சம் மீதியை நாமும் சீனர்களும் ஆக்கிரமித்து கொண்டோம். ஆனால் பெரும்பாலும் சாலையில் சீனர்களையோ இந்தியர்களையோ தான் பார்க்க முடிகிறது. முடிந்தவரை பேராசிரியர்கள் அவர்கள் சொந்த நாட்டை சேர்ந்தவர்களையே பெரும்பாலும் பணியில் அமர்த்தி கொள்கின்றனர், மற்றவர்களுக்கும் வாய்ப்பு உண்டு. நமது நாட்டு பேராசிரியகளிடம் அதிகம் மொழி சார்ந்து வேறுபாடுகள் காண முடியவில்லை.



சீனர்கள் தங்களுக்குள்ளாக முடிந்தவரை சீன மொழியிலேயே பேசிகொள்கின்றனர். நான் பணிபுரியும் இடத்தில் ஒரு மலையாள பேராசிரியர் அவரது மாணவர்களிடம் முடிந்தவரை மலையாளத்திலேயே பேசி கொள்கிறார். நம்ம ஊரு ஆளிடம் எவ்வளவு முயற்சி செய்து பார்த்தும் ஆங்கிலத்தை விட்டு வரவில்லை. தமிழர்கள் தெலுங்கு பேசும் மக்களிடம் பழகுவதை விட மலையாளிகளிடம் நெருக்கமாகி விடுவதை பார்க்க முடிந்தது. இந்தியானா தமிழ் சங்க விழாவில் மலையாளிகள் உற்சாகமாக பங்கெடுத்ததை காண முடிந்தது. தெலுகு சங்கம் தனியாக இருப்பதாக சொன்னார்கள். "என்ன தமிழ், தெலுகு செப்பு" என என் உடன் பணிபுரியும் ஆந்திர மக்கள் கோரிக்கை எழுப்பினர், "எனக்கு புரியும், தமிழில பரா" என்றாள் மலையாளம் பேசும் ஒரு பெண்.

வகுப்புகள் தொடங்கி, நாளொரு அசைன்மன்ட் பொழுதொரு ப்ராஜக்ட் என நாட்கள் நகர துவங்கியது. எனது வீட்டில் இருந்து வகுப்பிற்கு செல்லும் நீண்ட உறைபனி மூடிய சாலைகளும், இலைகளை இழந்து உறைந்த புகைப்படமாய் நிற்கும் மரங்களும் வெறுமையை கூட்டிய வண்ணமே இருந்தது. சென்னையில் தனிமையில் தெருக்களில் நடந்த நாட்கள் மிக குறைவு, உடன் நண்பர்களோ அல்லது யுனிகார்னோ வரும். சில சமயம் இரண்டையும் இழந்தது பற்றி யோசிக்க தோன்றும். ஆனால் வெள்ளை திரை கொண்டு மூடபட்ட தெருக்களும், அந்த பளீர் வெள்ளை திரையில் பச்சை நிற சாந்து தீற்றல் போல ஆங்காங்கே முளைதெழுந்த புற்களும் நாளடைவில் பழகி போனது.

சரியாக மூன்று நிமிடம் மட்டும் நிறுத்தத்தில் நிற்கும் பேருந்துகளும், எப்போதும் முகத்தில் ஓட்ட வைக்கப்பட்ட உதிரி புன்னகைகளும் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்தியானாபோலிஸ் நூலகத்தில் உறுப்பினர் ஆனேன், மிக பெரிய நூலகம், ஒருவர் அதிகப்பட்சமாக எழுபத்திரண்டு புத்தகங்கள் எடுக்கலாமாம். கால் சாகன் எழுதிய "காண்டக்ட்" என்னும் நூலை எடுத்து வந்து வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டு இருக்கிறேன். நூலகத்திற்கு சென்ற ஒரு நாள், இந்தியானா "உலக போர் நினைவிடம்" காண நேரிட்டது.



போர் முனையில் இருந்து எழுதிய கடிதங்களின் வரிகளை செதுக்கி ஒரு ஸ்தூபி எழுப்பி இருக்கின்றனர். சிறிது நேரம் நின்று அந்த கடிதங்களை படித்து கொண்டு இருந்தேன், ஒரு வரி விடாமல் அத்தனையும் திரைப்படங்களில் பயன்படுத்தி விட்டிருந்தனர். இரட்டை கோபுரங்கள் தாக்கபட்டதை தவிர எந்த நேரடியான யுத்தமும் நடக்காத நாடு. ஆனால் ஆண்டுதோறும் அதிக பட்ச போர் பற்றிய படங்களை எடுக்கும் நாடு அமெரிக்கா என எங்கோ படித்து நினைவில் வந்தது.

நான் நினைத்தது போல அல்லாமல் மாறுதலுக்கு சீக்கிரமே பழகிவிட்டேன். அதீதத்தின் ருசி என்னும் மனுஷ்யபுத்திரனின் கவிதைகளை புரட்டி கொண்டிருந்தேன், ஆச்சர்யமாக "மாறுதல்களுக்கு பழகுதல்" என்ற ஒரு அழகான கவிதை இருந்தது.

"நாம் பயந்தது போல
அது
அவ்வளவு மோசமாக இல்லை
என்றபோதும்
எல்லாவற்றிலும்
அது ஒரு திடுகிடலை உருவாக்குகிறது


நாம் விரும்பியது போல
அது
அவ்வளவு மகத்தானதாக
இல்லை என்றபோதும்
நமது உறைந்த நினைவுகளிலிருந்து
அது ஒரு சிறிய மறைவிடத்தை தருகிறது


நாம் பற்றிக் கொள்ள விரும்பியதுபோல
அது ஒரு மீட்பரின் கைகளே என்றபோதும்
சில சமயம் அதன் குளிர்ந்த தன்மை
நம்மை நிம்மதியிழக்க வைக்கிறது ………………….."


குளிர்ந்த தன்மை நிம்மதி இழக்க செய்யும் பொழுதுகளில் இப்படி ஒரு கவிதையையோ ஒரு இளையராஜாவின் பாடலையோ பற்றி கொள்ள முடிகிறது.



Saturday, May 1, 2010

தயக்கம்

(வல்லினம் இணைய இலக்கிய இதழில் வெளியான எனது சிறுகதை.இந்த சுட்டியிலும்  காணலாம்)


ஓயாமல் கேட்டு கொண்டிருந்த இரைச்சல் நின்று, நீர் மெல்ல மெல்ல சொட்டும் ஒலி கேட்ட உடன் கிருஷ்ணன் எழுந்து கொண்டான். மாலை பயிற்சி வகுப்பில் இருந்து திரும்புகையில் வாங்கி வந்திருந்த ரொட்டியை சுற்றியிருந்த காகிதம் காற்றில் மெல்ல பட படத்து கொண்டு இருந்தது. இருட்டிலேயே துழாவி கண்டுபிடிக்கும் அளவிற்கு மின்விளக்கின் சுவிட்ச் இந்த மூன்று நாட்களில் பழக்கத்திற்கு வந்து விட்டு இருந்தது.

“மே மாதம், கேரளாவுக்கா? அதுவும் அலுவலக செலவிலேவா, ம்ம்ம் ஜமாய்” என்று அந்த கரு நாக்கு பையன் அறிவு எப்போ சொன்னானோ, வந்த மூன்று நாட்களாய் திருவனந்தபுர நகரமே இரவு மழையால் மிதந்து கொண்டு இருக்கிறது. ஜன்னலுக்கு வெளியே எட்டி பார்க்க, மழை நன்றாக மட்டு பட்டிருந்தது.

எட்டு மணியை கடந்து வினாடி முள் வேகமாக ஓடி கொண்டு இருக்க, என்ன செய்வது என்று தெரியாத குழப்பத்தில் ஆழ்ந்திருந்தான். கடந்த மூன்று நாட்களாய் அவன் வைத்து கொண்டிருந்த அட்டவணை இன்று சற்று பிசகி விட்டு இருந்தது. ஐந்து மணிக்கு அலுவலகத்தில் பயிற்சி வகுப்பை முடித்து விட்டு, நாயர் கடையில் ஒரு தம்முடன் சாயா அருந்திவிட்டு (சொர்க்கம்) மான்சனுக்கு வர வர மழை வலுக்கும், மழையை சபித்து கொண்டே தெருமுனை பாக்கரியில் நான்கு ரொட்டி துண்டுகளை வாங்கி கொண்டு வந்துவிடுவான். தினம் பேச்சு கொடுத்து அந்த பாக்கரி முதலாளி கூட நல்ல பழக்கம் ஆகி இருந்தார். வந்த உடன் தூங்கி விட்டு, பத்து மணிக்கு மெல்ல எழுந்து ஜாமுடன் அந்த ரொட்டி துண்டுகளை விழுங்கி விட்டு பால்கனிக்கு போனால், மழை இப்போதுதான் கொட்ட தொடங்கியது போல கொட்டி கொண்டு இருக்கும். வாங்கி வந்திருந்த தம்மை ஆசை தீர இழுத்துவிட்டு வந்து படுத்து விடுவான்.

தினம் சபித்ததனாலோ என்னவோ இன்று எட்டு மணிக்கே எழ வேண்டியதாயிற்று. அவன் கண் முன்னால் பிரமாண்டமாய் விரிந்திருந்த இரவு சற்று அச்சமூட்ட தொடங்கியது. இடையில் களைந்து விட்டதனால் மீண்டும் தூங்கவும் வழி இல்லை. சடாரென கட்டிலில் இருந்து எழுந்து கைலியை நின்ற படியே கழட்டி விட்டு அடுத்த ஐந்து நிமிடத்தில் வெளிய செல்ல ஆயத்தமானான். மனிதர்களுடன் சகஜமாக பேசியே மூன்று நாட்கள் ஆகிறது. பயிற்சி வகுப்பிற்கு கூட வரும் அத்தனை பெரும் மலையாளிகள், அவர்கள் என்னமோ சகஜமாக பேச வருவது போலதான் உள்ளது. ஆனால், அவனுக்கு இந்த இடமும் ஊரும் மனதில் ஒட்டவில்லை. வாசலில் நின்றிருந்த விடுதி காப்பாளன் மெல்ல ஒரு புன்னகையை உதிர்த்தான்.

அவனையும் அந்த சாலகுழி தெருவின் அத்தனை குப்பைகளையும் அள்ளி சேர்த்து ஓடி கொண்டு இருந்த மழை நீரையும் பட்டும் படாமலும் கடந்து சாலையின் எதிர் புறம் அடைந்தான். இன்று இரவு உணவுக்கு அந்த காய்ந்து போன ரொட்டியை தின்ன வேண்டியதில்லை என நினைத்து கொண்டே பாக்கரியை நெருங்கி விட்டு இருந்தான். அந்த கடையும், அந்த முதாலளியையும் பார்த்து ஏனோ ஆத்திரமாக வந்தது, பழைய ரொட்டியை விக்கிறார்கள், இரவு பத்து மணிக்குள் "வரட்டி" போல ஆகிவிடுகிறது என எண்ணி கொள்ளவும், கடைக்காரர் "என்ன சாரே ஊனு கழிக்கவோ?" எனவும் சரியாக இருந்தது. ஹி ஹி ஆமாம் என சொல்லிவிட்டு, ச்சே அந்த கடைக்காரர் நல்லவர் தான், நாம் ஏன் திடீர் திடீர் என்று இப்படி கோவபடுகிறோம் என தலையில் தட்டி கொண்டான்.

தனியாக இப்படி சென்று, கடையில் காசு கொடுத்து சாப்பிட போகிறோம் என்ற உணர்வே அவனுக்கு சற்று உற்சாகம் தருவதாக இருந்தது. ஊரில் என்றால் அம்மா எப்படியும் சோறு கட்டி கொடுத்து விடுவாள், அதுவும் இல்லாமல் ஒரு பி.எஸ்.என்.எல் அலுவலக குமாஸ்தா ஓட்டலில் சென்று சாப்பிடுதல் தகாது. ஆனால் இப்போது அப்படி இல்லை, அலுவலகம் சேர்ந்த மூன்று மாதத்தில் பயிற்சி வகுப்பிற்கு சிபரசு செயப்படும் அளவிற்கு வளர்ந்தாகிவிட்டது, அதன் காரணமாய், நாள் ஒன்றுக்கு பேட்டவாக சுளையாக 140 ரூபாய். தனியாக இப்படி வீட்டை விட்டு வருவதும் நல்லதுதான் போல.

திருநெல்வேலி "அமுதா உணவகம்" என்ற பெயரை பார்த்து ஓட்டலுக்குள் சென்றான். சொகுசாக கை கழுவி கொண்டு வந்து, வைக்கப்பட்ட சுடுதண்ணியை மெல்ல உருஞ்சியவாறே விலையை பார்த்தான்.

"ஏன்னா சார் சாப்ட்றீங்க" என்ற சர்வரிடம், ஒரு நெய் தோசை என சொல்ல வாய் எடுத்தவன் ஒரு நொடி தயங்கி, இல்லை நண்பருக்காக காத்துட்டு இருக்கேன் என்றான். வைட்டார் சந்தேகத்துடன் பார்த்து விட்டு செல்ல, சிகரட் பத்த வைப்பது போல் வெளியே வந்து, அந்த சர்வர் பின்னால் தொடர்ந்து வருவது போலவே கற்பனை செய்து கொண்டு வெகு தூரம் வந்து விட்டிருந்தான்.

ராத்திரி கொள்ளையா இருக்கு, ஒரு தோசைக்கு 38 ரூபாயா. இதுக்கு பத்து ரூபாய்க்கு ஒரு முழு சாப்பாடே சாப்பிடலாமே என திருவனத்தபுரம் மருத்துவ கல்லூரியை ஒட்டி, அவன் பயிற்சி வகுப்பு நடக்கும் இடத்தில் இருந்த உணவு விடுதிக்கு சென்றான். பத்து ரூபாய்க்கு ஒரு முட்டை கறியும், முழு சாப்பாடும் சாப்பிட்டு விட்டு வந்தான். மணி ஒன்பதுதான் ஆகி இருந்தது, இன்னும் தூங்குவதற்கு எப்படியும் இரண்டு மணி நேரம் ஆகும். அதுவரை நேரம் கழிக்க சிமன்ட் பெஞ்சில் அமர்ந்தான்.

மருத்துவமனையை ஒட்டிய இடம் என்பதால் மிக அமைதியாக இருந்தது. சிமின்ட் பெஞ்சை ஒட்டி நின்ற மரத்தின் இலைகள் ஊடே நிலவொளி வழிந்துகொண்டு இருந்தது. இலைகளின் அசைவுகளுக்கு ஏற்ப சாலையில் மாறி மாறி வரும் ஒளி சித்திரங்களை பார்த்தபடி அமர்ந்திருந்தான். “தம்பி தமிழா?” என பக்கத்துக்கு பெஞ்சில் இருந்து குரல் வந்தது. சற்று தடிமனான கண்ணாடியும், வெள்ளை வேட்டி சட்டையும் அணிந்து, நான் இந்த கட்சியோட மாவட்ட தலைவர் என்று சொன்னால் நம்பக்கூடிய அளவில் இருந்த அந்த மனிதர்தான் அப்படி கேட்டார்..

மெல்ல சிரித்து, "சார் தமிழா" என்றான்.

"இல்லை, நான் கன்யாகுமரியில ஆறு வருடம் வொர்க் செய்துட்டு உண்டு" என்றார். அந்த வொர்க்கை அவர் சொன்ன விதமே, அவர் தமிழ் இல்லை என அவனுக்கு புரிந்து
விட்டது.

"தம்பி மெடிக்கல் காலேஜா?"

"இல்லை சார், நான் இங்க அலுவலக பயிற்சி வகுப்புக்கு வந்திருக்கேன். இப்போதான் சேர்ந்தேன் மூணு மாசம் ஆச்சு, அப்பா வேலை எனக்கு வந்துடுச்சு அவர் இறந்துடதால" என்றான்.

"அது சரி, அதுதானே தம்பி ரொம்ப சின்ன பையனால இருக்கீங்க. இங்க எவட தாமசம்?"

லாட்ஜில் என்றான். சிகரட் என எழுந்து வந்து என் முன்னால் சிகரட் பெட்டியை நீட்டினார். இல்லை சார் வேண்டாம் பழக்கம் இல்லை என்றான்.

"உதடு கறுத்து இருக்கு, பழக்கம் இல்லைன்றீங்க?"

ஒரு அசட்டு சிரிப்பை வரவழைக்க முயல அதற்குள் அவர் மெல்ல அருகில் அமர்ந்து, அவன் தொடை மேல் கையை வைத்து, "தாழோட்ட வருதா" என்றார்.

அவன் உடம்பெல்லாம் சூடாக, ஒரு வித உதறலுடன் அவரை பார்க்க, அவர் உதடை குவித்து ஒரு செய்கை செய்து, "ம்ம்ம் வருதா?" என்றார்.

ஒரே ஒரு நிமிடம் தயங்கி, அவர் முகத்தை பார்த்து, கையைத் தூர தள்ளிவிட்டு திரும்பி பார்க்காமல் விறு விறுவென விடுதியை நோக்கி நடக்கத் துவங்கினான்.



முந்தைய சிறுகதைகள்  1 | 2 | 3 | 4 | 5 |