Friday, August 21, 2009

அக்கா பெரியவளானப் பின் / நினைவழித்தல்

அக்கா பெரியவளானப் பின்


தூக்கம் கலைந்த நடுநிசிகளில்

அக்கா அருகில் தொலைந்து போக

துவங்கி இருந்தாள்..


கதவை திறந்த நேரங்களிலெளாம்

ரகசிய பேச்சுக்கள் நின்று போயின,


கிணற்றடிக்கு வந்து பேசும் நண்பர்களுக்கு கூட

தேனீர் வாசலுக்கே வந்தது,


எப்போதாவது பேசும்

கிராமத்து வசுவுகளைக் கூட

நிறுத்தி விட்டிருந்தாள்!


அப்புறம் ஒருநாள்,

அக்கா கல்யாணமாகி சென்று விட்டாள்.


எனக்கும் அம்மவுக்குமான

இடைவெளியை அப்படியே விட்டு விட்டு…

******************************************************************************

நினைவழித்தல்


நேற்று இரவு வடிந்து கொண்டிருந்த

கண்ணீரின் சுவடுகள்

தெரியவில்லை கண்ணாடியில்,


என் நிர்வாணம் பார்த்த மின்விசிறி

எப்போதும் போல சுழல்கிறது,


யாருக்கும் தெரியாதபடி

நனைந்து போன கைக்குட்டை

உலர்ந்து கிடக்கிறது,


சிரித்து கொண்டே அலுவலகம் நுழைகிறேன்,

ஒரு புன்னகையை ஏந்தி கொண்டு காத்திருக்கிறாய் நீ,

நேற்று கலைந்து விட்டிருந்த இடத்தை நினைவூட்டியபடி.

******************************************************************************

பிரிவு உபசாரம்


எப்போதும் கல்லூரியில் இருந்து

ஊருக்கு கிளம்புகையில்

கைப் பிடித்து பேசி கொண்டு

சேலம் வரை ஒன்றாகத்தான் வருவாய்,

மூன்று வருடம் கழித்து பார்க்கிறேன்

கைக்குழந்தையுடன்,

இப்போதும் சிரித்து கொண்டே விடை பெறுகிறாய்

உன் ஸ்பரிச தொடுகையின் சிலிர்ப்பை

உன் குழந்தையிடம் கொடுத்து

மாமாவுக்கு டாடா சொல்லு என்று….


******************************************************************************

புண்ணியம் சேர்த்து கொள்ளல்


அலுவலக நண்பர்களின்

தந்தைக்கோ தாய்க்கோ ரத்தம் தேவை

என வரும் மெயில்களை

உடனக்கு உடன் பார்வார்ட் செய்து

புண்ணியம் சேர்த்து கொள்கிறேன்,

கடைசி வரை ரத்தத்தின் க்ரூப் என்ன வென்று பாராமலேயே
******************************************************************************

No comments:

Post a Comment