Wednesday, January 28, 2009

மாடன் மோட்சம் - ஜெயமோகன்

நவீன தமிழ் இலக்கியத்தில் சிறந்த ஆளுமையாகவும் விமர்சிகராகவும் அறியப்படுபவர் ஜெயமோகன், இவரது மாடன் மோட்சம் தமிழின் சிறந்த சிறு கதைகளில் ஒன்று.”மாடன்” என்பது சேரி பகுதியில் ஆயிரம் வருடங்களாய் வாழும் குல தெய்வங்களுள் ஒன்றாக வாழ்ந்து, தற்போது கேட்பாரற்று கிடப்பதை விவரித்து கதை தொடங்குகிறது.

கதையின் ஊடாக பெருந்தெய்வங்கள் சிறுதெய்வங்களை தன்னுள் வரித்து கொண்டது, இந்தியாவில் பரவிய வறுமையயும் சமூக ஏற்ற தாழ்வுகளையும் பயன்படுத்தி நடை பெற்ற மதமாற்றம்,மக்களின் அறியாமை, ஒரு மையம் கட்டமைக்க பட்டவுடன் அதில் கோல் ஒச்சும் அதிகாரம் ஆகியவை மறைவாய் குறுப்பிடப்பட்டுள்ளது.இதனுடன் ஒரு மெல்லிய நகைச்சுவையும் மெலிந்து ஓடுவது இக்கதையின் சிறப்பம்சம்.நேர்த்தியாய் எழுதப்பட்ட இக்கதை தன் 5 ஆம் பாகத்தை நெருங்கையில் உச்ச வேகம் கொண்டு கதை முடிக்கையில் ஒரு வேதனையும் விரக்தியும் நம் மனத்தில் விட்டு செல்கிறது.

முதல் அத்தியாயத்தில், இந்தக் காலத்தில் சில்லறைத் தொந்தரவுகளாவது தராமல் தேமே என்று இருக்கிற சாமியை எவன் மதிக்கிறான்? என்று கருவியபடி எழுகிறது மாடன். வழியில் சேரியின் “அழகு” விளக்கப்பட, வருவது மாடன் சாமி என தெரியாமல் குலைக்கும் நாய்களை கடந்து பூசாரி அப்பி வீட்டை அடைகிறது மாடன்.அப்பியிடம் “பூசெ வல்லதும் நடத்துத எண்ணம் உண்டுமா?” என கேக்க, அவன், “இப்பம் சேரியில ஏளெட்டு பறக்குடிய விட்டா, பாக்கியொக்க மத்தசைடு பயவளாக்கும் பாத்துக்கிடும்”. மத்தசைடுனா வேதகாரங்க என்கிறான் அப்பி.

இரண்டு மற்றும் மூன்றாம் அத்தியாயங்களில் மாடனை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர அப்பி முயன்று அதில் ஓரளவு வெற்றியும் பெறுவது கூறப்பட்டுள்ளது.இதில் குறிப்பாக மூன்றாம் அத்தியாயத்தில் மாடன் வெறும் பார்வையாளன் போலவே உள்ளது, அதை முன்னிறுத்தி நடை பெற்ற எந்த சண்டையுளும் அதன் பங்கு வெறும் பார்வையாளன் மட்டுமே. ஆமாம்! பின் “கந்தன் கருணை” போன்ற பக்தி (?) படங்களை தவிர வேறு எங்கு கடவுள் நேரில் வந்து சண்டை இட்டார்?. ஆனால் வேறு கோணத்தில் இதுவரை நடந்தவை அனைத்தும் அப்பியின் பிரமையோ? என்னும் கேள்வி எழுகிறது. இந்த இடத்தில் இருந்து கதையை மீண்டும் படிக்க தொடங்கலாம்.இப்போது பார்த்தால் முதல் அத்தியாயத்தில் நாய்கள் குலைத்தது இயல்பாகவே படுகிறது.

நான்காம் அத்தியாயத்தில் மாடன் புகழும் புது பொலிவும் பெற்ற உடன் அப்பி “அடாடா, ஒரு கண்ணாடி இல்லாமப் போச்சே. சும்மா விஜெயகாந்த் வில்லன் வேசம் கெட்டினதுமாதிரி இருக்கேரு. பட்டணத்திலேந்து வந்தபய. பெயிண்ட் வச்சு கீசியிருக்கான். உம்ம மீசையிருக்கே அடாடா . . .” என்கிறான் மாடனை. ‘சத்தியமாட்டு ? ‘ என்று மீசையைத் தொட்டபடி மகிழ்ந்து கொள்கிறது மாடன்.

மாடன் வெட்கி சிரிக்கும் ஓர் இடத்தில் அப்பி, ‘இந்தச் சிரிப்ப மட்டும் வெளிய எடுக்காதியும், ஏமான்பயவ கண்டானுவண்ணு சென்னா அப்பமே எறக்கி வெளியில விட்டு போடுவானுவ. தெய்வமிண்ணா ஒரு மாதிரி மந்தஹாசமாட்டு இருக்கணும். இந்தால கையை இப்படிக் காட்டிக்கிட்டு…, வாளை ஓங்கப்பிடாது. மொறைச்சிப் பார்க்கப்பிடாது . . . ” என்று சொலும் இடத்திலும், இங்க வர பெண்களுக்கெலாம் கர்ப்பம் உண்டாகுதாமே என்னும் இடத்திலும் சமூக சாடல் நகைச்சுவையாய் மிளிர்கிறது.

மோட்சம் அடைந்தவர்கள் நம் கைக்கு எட்டா தூரத்தில் உள்ள பீடத்திற்கு சென்று விடுவதை போல் மாடானும் விலகி விடுதல் தான் இந்த “மாடன் மோட்சம்”.

P.S

இக்கதையை படிக்க இந்த சுட்டியை அணுகவும்

http://jeyamohan.in/?p=550

2 comments:

  1. மதன்,

    அருமையா இருக்கு உங்க விமரிசனம். ரசிச்சேன்.

    இதைமட்டும் கொஞ்சம் சரி பண்ணிருங்க.

    கோள் ஒச்சும் அதிகாரம் = கோல் ஓச்சும் அதிகாரம்

    ReplyDelete
  2. நன்றி துளசி... சரி செய்தாயிற்று

    ReplyDelete