Wednesday, April 15, 2009

கோபி கிருஷ்ணன் - வலி தரும் சிரிப்பு


தொடர்ந்து நம்மிடம் கேள்விகளை முன் வைக்கும் படைப்புகள் நிலைத்து விடுகின்றன. அந்த வரிசையில் நான் படித்ததில் கோபி கிருஷ்ணனின் நாவல்களான “உள்ளே இருந்து சில குரல்களும்” “இடாகினி பேய்களும், நடைபிணமும் சில உதிரி இடை தரகர்களும்” மிக தனித்துவமானது. இந்த இரு நாவல்கலுமே மன நல காப்பகத்தை மையமாக கொண்டது.


கோபியின் எழுத்து மிக மென்மையான குரலில் பேசுகிறது, அவரது உச்ச கட்ட சமூக சாடல் கூட, ” நான் சொல்லியா நீங்க திருந்த போரீங்க” என்ற ரீதியிலேயே முன் வைக்க படுகிறது. அவரது உலகம், முழுக்க முழுக்க மன நலம் பிரழ்ந்தவர்களுடனே கழிந்திருக்கிறது. அவர்களின் வாழ்வையே அவர் பெரும்பாலும் தன் நாவல்களிலும் சிறு கதைகளிலும் பிரதி படுத்தி உள்ளார். அதே சமயம், அவரது இரு நாவலும் வடிவ ரீதியாகவும் ஓர் வித்யாசமான படிப்பனுபவத்தை தர வல்லது.


“உள்ளே இருந்து சில குரல்கள்” நாவல் மன நல மையத்தில் உள்ளவர்களை பேட்டி எடுக்க வரும் ஒருவர் எதிர் கொள்ளும் நிகழ்வுகளை பற்றியது. இந்த நாவல் முழுதும் காட்சி மற்றும் நிலை என பகுத்து கூறப்பட்டுள்ளது. ஒரு காட்சி முதலில் விளக்க படுகிறது, பெரும் பாலும் நமது வீடுகளில் நடக்கும் சிறு நிகழ்வுகள் போல் உள்ள காட்சிகள் தான், அந்த காட்சியின் முடிவில் ஒருவர் மன நலம் பாதிக்க பட்டவர் என முடிவு செய்ய படுகிறார், பின் அவரது நிலை விவரிக்க படுகிறது. பெரும்பாலும் அந்த நிலை என்பது தற்போது அந்த மன நல மையத்தில் அவரது நிலையே.


இதே போல் சுமார் 40 காட்சிகளும் நிலைகளும் விவரிக்க படுகிறது. சில காட்சிகள் ஏறக்குறைய நமக்கும் நடந்தவை ஆனால் அவர்கள் மன நலம் பிறழ்ந்தவர்கள் என இனம் காணபட்டார்கள் நம்மை இன்னும் யாரும் கண்டு பிடிக்க வில்லையோ? என எண்ணம் எழுகிறது, நாவலின் இறுதியில் மன நலம் பாதிக்க பட்டவர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சிகிச்சை முறைகள் விளக்க பட்டு ஓர் ஆவண பதிவு போல் முடிகிறது. நாவலின் ஊடே வரும் ஓர் கதா பாத்திரம், ” நீங்க ஆதவன் கதைகள் படிசிருக்கீங்களா?” என்கிறார். ஆதவனின் பார்வை போலவே, ஓர் கேலியும் எள்ளலும் கொண்ட கோபியின் பார்வை நாவல் முழுதும் விரவி உள்ளது. எந்த ஓர் இடத்திலும் துருத்தி தெரியாமல் மிக மௌனத்துடன் எழுதபட்டிருக்கும் இந்த நாவல் தமிழின் மிக முக்கியமான நாவல்களில் ஒன்று.



“இடாகினி பேய்களும்” சற்றே குறைய இவர் 1988 முதல் 1996 வரை வேலை செய்த மன நல மையத்தின் நிகழ்வுகளின் பதிவே. கதையின் நாயகன் கோபியே, இவரது பார்வையில் அங்கு நடைபெற்ற நிகழ்வுகளை சில சிறுகதையாகவும் ஒரு குறு நாவலாகவும் எழுதி உள்ளார். இந்த நாவலின் ஊடே இவர் அடிக்கடி ” கேள், வாசகா வாசகி” என்ற கூறிய வண்ணம் இருக்கிறார். அது ஒரு வேளை, நாவலை படிக்கும் வாசகர்களை நக்கல் செய்கிறாரோ என்று எண்ண வைக்கிறது.



ஏழைகளுக்கு வரும் உதவியை பறிக்கும் மன நல மையத்தின் இடாகினி பேய்களுக்கும் , அவர்கள் தரும் சொச்ச பணத்தையும் பிடுங்க காத்திருக்கும் இடை தரகர்களுக்கும் இடையில் நடை பிணமாய் தாம் வாழ்ந்து வந்ததை பதிவு செய்து உள்ளார். நாவல் முடிகையில், ” எதற்கும் வாசக வாசகி, நீ இந்த கதையை கற்பனை என்றே வைத்து கொள் என்கிறார்”. மீண்டும் அவர் நம்ம கண்டிபா கேலி தான் செய்கிறார் என்ற எண்ணம் வருகிறது.இந்த வகையான கேலி கூட, நம் இதுவரை மன நலம் பாதிக்க பட்டவர்களின் வாழ்வை கதை போல் தான் படித்து வந்திருக்கிறோம் இல்லையா? என்ற எண்ணம் வரவே காரணமாய் உள்ளது.



உள்ளே இருந்து சில குரல்கள் வம்சி புக்ஸ் விலை: 70

இடாகினி பேய்களும் தமிழினி விலை: 40௦

No comments:

Post a Comment