Thursday, October 29, 2009

என் ஜன்னல் வழியே # 5

சமீப காலமாய் காந்தியைப் பற்றிய பல செய்திகளைக் கேள்விப் பட்ட வண்ணமே இருக்கிறேன். மிட்டாய், காலை கொடியேற்றம், பேச்சு போட்டி, மாறுவேட போட்டிகளை கடந்த பின் தான் காந்தியைப் பற்றிய சில புரிதல்கள் எனக்கு உருவாக தொடங்கியது. பள்ளி இறுதி வகுப்பில் ஒருநாள், எங்கள் ஊர் நூலகத்துக்கு சென்று சத்யசோதனை படித்தது நினைவு இருக்கிறது. அவருக்கு அசைவ உணவு சாப்பிட்ட அன்று இரவில் ஆடு கத்துவது போல் கனவு வந்திருக்கிறது என்பதை படித்து அதிர்ச்சி அடைந்தேன். அதே போல் எனக்கும் நேர்ந்திருக்கிறது. மீண்டும் இதே வரிகளை சுஜாதா க.பெ வில் குறிப்பிட்ட அன்று ஒரு மெல்லிய சிரிப்பு வந்தது.

நம்மில் பலரை போலவே அவரும் அப்பாவிடம் இருந்து காசு திருடி இருக்கிறார். மிக எளிய வார்த்தைகள் கொண்ட அந்த புத்தகம் எனக்கு மிகவும் பிடித்து போனது. அப்போதைக்கு என்னால் உள்வாங்கி கொள்ள முடியாத விஷயங்களுக்காக இப்போது மீண்டும் அவற்றை படித்து கொண்டு இருக்கிறேன். சமீபத்தில் அமெரிக்க அதிபரிடம், நீங்கள் யாருடன் உணவு அருந்த அசைப்படுகிறீர்கள் என்பதற்கு, “காந்தி” என பதில் அளித்தார். அதைப் பற்றிய எழுத்தாளர் வாஸந்தி அவர்களின் கட்டுரையை இங்கே காணலாம். அதே போல், அம்பேத்காரையும், காந்தியையும் ஒப்பு நோக்கி, ஜெயமோகனின் ஒரு நீண்ட கட்டுரை அவரது வலைத்தளத்தில் வந்துள்ளது. மிக நேர்த்தியான கட்டுரை, ரசித்து படித்து கொண்டு இருக்கிறேன்.

Indian Born American wins Nobel படிக்க சந்தோஷமாய் இருந்தாலும், அதன் நிதர்சனம் உறுத்துகிறது. திரு. வெங்கடராமன் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நோபெல் பரிசு, நமது உடம்பில் உள்ள செல்லில் ஒரு முக்கிய பங்கு ஆற்றும் Ribosomeன் வடிவத்தை கண்டுபிடித்ததற்கு கொடுக்கபட்டுள்ளது. உண்மையில் மிக சிக்கலான காரியம் அது செய்வது.

எளிதில் புரிந்து கொள்ள இப்படி வைத்து கொள்வோம், முதலில் ஒரு கதையோ, கட்டுரையோ ஒரு ரஷ்ய எழுத்தாளருக்கு அவர் மனதில் எண்ணங்களாக உருவாகிறது. அதை அவர் பதிவு செய்கிறார் என வைத்து கொள்வோம். இப்போது அதை நாம் படிக்க வேண்டுமானால், ரஷ்ய மொழியும் ஆங்கிலம் (அ) தமிழ் தெரிந்த ஒருவர் மொழி பெயர்த்தால் தான் நம்மால் படிக்க முடியும் அல்லவா. அந்த மொழி பெயர்ப்பை கண்காணிக்கும் வேலையைத்தான் செய்கிறது Ribosome. இப்போது மேற்சொன்ன விஷயத்தில் இரு நிகழ்வுகள் உள்ளன என்பதை நீங்கள் ஊகித்து இருப்பீர்கள், ஒன்று பிரதிஎடுத்தல், மற்றொன்று மொழிபெயர்த்தல்.




(மேலே உள்ள படம், நமது செல்லின் குறுக்கு வெட்டு தோற்றம், படத்தில் உள்ள அளவு நேர்த்தியாக ஈஸ்ட்மன் கலர் எல்லாம் இருக்காது. படத்துக்காக சில எடிட்டிங் வேலை செய்யப்பட்டுள்ளது. அதில் strawberry பழ நிறத்தில் உள்ளதே அவை ER எனப்படும் Endoplasmic Reticulum , அதில் உள்ள சிறு சிறு கரிய புள்ளிகள் தான் நோபெல் பரிசு வாங்கி தந்தது )

நமது செல்லின் கருவுக்குள் இருக்கும் செய்திகளை அப்படியே பிரதியெடுத்து வருவது mRNA (Messenger RNA) எனப்படுகிறது. இந்த mRNA என்பது, ஒரு ரஷ்யரின் எண்ணங்களை பிரதி எடுத்ததை போன்ற புரியாத லிபி . இந்த mRNA வில் செய்திகள் மூன்று மூன்று எழுத்துக்கள் கொண்ட வார்த்தைகளின் கோர்வையாய் உள்ளது. ஒவ்வொரு மூன்று எழுத்து வார்த்தைக்கும் நிகரான ஒரு பொருள், அதாவது அந்த ரஷ்ய வார்த்தைக்கு நிகரான தமிழ் சொல் எனக் கொள்வோம், உள்ளது.

அந்த சொற்களை தாங்கி நிற்பது தான் tRNA (Transfer RNA). இப்போது mRNAவில் உள்ள அத்தனை வார்த்தைகளும் மிக சரியாக tRNA வார்த்தைகளாக Ribosomeன் கண்காணிப்பில் மொழி பெயர்க்கப்பட்டு பல சொற்றோடர்கள் கொண்ட ஒரு கதை நமக்கு கிடைக்கிறது . அதுதான் ப்ரோடீன், நம் நிற்க, நடக்க, கதை எழுத, கவிதை எழுத, சைட் அடிக்க தேவைப்படும் அத்தனை சக்தியை தட்டும் ப்ரோடீன். நமது தமிழ் மெட்டில் சொல்ல வேண்டும் என்றால், “ஒரு mRNA ஒரு tRNA சரியாக மொழி பெயர்ந்தால் ப்ரோடீன்”.



சுஜாதாட்ஸ்:

என் கல்லூரி படிப்பு, திருச்சி புனித வளனார் கல்லூரியில், கல்லூரியில் அப்படி ஒன்றும் பிரபலமாகவோ, மற்றவர் கவனத்தை கவர்ந்தவனாகவோ இல்லை. அப்துல் கலாம் எனது வகுப்பு தோழர், அவரும் அப்போது கல்லூரியின் அத்தனை பரிசுகளையும் கவர்ந்து சென்றதாக நினைவில்லை. இதில் எதோ ஒரு நீதி இருக்கிறது

இந்த தொடரின் முந்தையப் பதிவுகள் 1 | 2 | 3 | 4 |

5 comments:

  1. நல்லா இருக்கு. அலுவலக வலைப்பக்கத்திலேயே படித்துவிட்டேன்.

    அக்டோபர் மாசம் ஒரு போஸ்ட்தானா?

    ReplyDelete
  2. நன்றி வினய், ஆமாம் இந்த மாதம் சற்று குறைந்து விட்டது, வரும் மாதங்களில் சரியாகி விடும் என நினைக்கிறன்!

    ReplyDelete
  3. நன்றி அருணா :-)

    ReplyDelete