Monday, November 9, 2009

உலக போர் - காமிரா வழியே

“Never in the field of human conflict was so much owed by so many to so few”. இரண்டாம் உலக போர் பற்றி அப்போதைய இங்கிலாந்து அதிபர் சர்ச்சில் சொன்ன வார்த்தைகள் இவை. மனித சரித்திரத்தில் அதிகமான உயிர் இழப்புகளை கொண்டது இரண்டாம் உலக போர். முதல் உலக போர் 1919 ஆம் ஆண்டு முடிவு அடைந்து Treaty of Versailles கையெழுத்து இடப்பட்டது. அந்த ஒப்பந்தம் மூலம் வஞ்சிக்கப்பட்டதாக எண்ணி வந்த ஜெர்மனி, ஒப்பந்தத்தை மீறி போலாந்தின் மேல் படை எடுத்து 1939 ஆம் ஆண்டு இரண்டாம் உலக போரை தொடங்கி வைத்தது. ஹிட்லர் வீழும் வரை ஆறு ஆண்டுகள் நீண்ட இந்த போர் மனித மனத்தின் குரூரத்தை வெளிச்சமிட்டு காட்டியது.

இரண்டாம் உலக போரை மையமாய் கொண்டு நூறு திரைப்படங்களுக்கு மேலாக வெளிவந்துள்ளது. போரின் நேரடி காட்சிகளின் சித்தரிப்பு, அது தனி மனித வாழ்க்கை மீது காட்டும் வன்முறை, மனித மனங்களின் ஆதார உணர்ச்சியினை சீண்டி பார்க்கும் நிகழ்வுகள் என பல கோணங்களில் சித்தரிக்கப்பட்டு படங்கள் வெளிவந்துள்ளது. அவற்றில் சில படங்கள் எனக்கு பல கோணங்களில் அந்த நிகழ்வுகளை புரிந்து கொள்ள உதவியது. உலக போர் பற்றி வந்த திரைப்படங்களில் நான் பார்த்தவற்றில் மிக முக்கியமான திரைப்படங்களின் தொகுப்பு இது. இந்த திரைப்படங்கள் மூலம் போரின் ஒரு ஒட்டு மொத்த ஒழுங்கு கிடைக்கலாம். இந்த குறிப்பில் இல்லாமல் நான் தவற விட்ட சில படங்கள் இருக்கலாம். இருந்தும் இவை முக்கியமான படங்கள்.

1.Schindler’s List (1993):

Direction: Steven Spielberg

Awards: Seven Academy Awards



Steven Spielberg இயக்கி வெளியிட்ட இந்த திரைப்படம், ஹிட்லரின் நாசிகள், யூத இனத்தவர் மீது வெறி கொண்டு, அவர்களை வதை முகாம்களில் அடைத்தது, அங்கு அவர்கள் பட்ட வேதனை ஆகியவை அப்பட்டமாய் காட்டப்பட்டுள்ளது. படம் பெரும் அளவில் கறுப்பு வெள்ளை காட்சிகள் மூலமே நகர்கிறது. மந்தைகள் போல் மக்கள் முகாம்களில் தங்க வைக்க படுகின்றனர். அப்போது ஷிண்ட்லெர் என்னும் தொழிலதிபர் போருக்கு தேவையான கருவிகள் செய்யும் தொழிற்சாலை ஒன்றை நிறுவுகிறார். அதற்கு தேவையான வேலையாட்களை வதை முகாம்களில் இருந்து பெற்று பணக்காரர் ஆகிறார். அதற்காக ஜெர்மன் அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்குகிறார்.

நாட்கள் செல்ல செல்ல தொழிற்சாலையில் வேலை செய்யும் யூதர்கள் மீது நேசம் கொள்கிறார். உயிர் பிழைத்தால் போதும் என வதை முகாம்களில் இருந்து இவரது தொழிற்சாலைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இறுதியில் தன கையில் உள்ள பணம் அத்தனையும் இழந்து தன்னால் முடிந்த அளவு யூத இனத்தை சேர்ந்தவர்களை காப்பாற்றி போர் முடிவடைந்த பின் அவர்களை பிரிந்து செல்கிறார். வதை முகாம்கள் ஒட்டிய காட்சிகள் மிகுந்த வலி தர கூடியவை.

வெட்ட வெளியில் அங்கங்கே சிறு சிறு குடிசை கொண்டு வேலை செய்யும் மக்களை ஓர் ஜெர்மன் உயர் அதிகாரி தன் வீட்டு மாடியில் இருந்தபடி கண்காணிக்கிறான். இரண்டு பேர் மைதானத்தில் கையில் பளுவை தூக்கிய வண்ணம் நடந்து கொண்டு இருக்கின்றனர். அதில் ஒருவன் பளு தாங்காமல் சற்று தடுமாற, எங்கிருந்தோ வந்த குண்டு அவன் தலையை துளைக்க அவன் அப்படியே சரிகிறான். மற்றவன் தன் கையில் உள்ள பளுவை தூக்கி கொண்டு வேக வேகமாக நடக்கிறான்.



மற்றொரு காட்சியில் முகாமில் மருத்தவ பரிசோதனை நடைப்பெறுகிறது. பெண்கள், முதியவர் என பாகுப்பாடு இல்லாமல் அனைவரும் நிர்வாணமாக அந்த மைதானத்தை சுற்றி வர பணிக்கபடுகின்றனர். இப்படியே இரண்டு மூன்று முறை சுற்றி வந்த பின் மெல்ல மூச்சு வாங்குபவர்களும், சற்று சோர்ந்து காணப்படுபவர்களும் சுடப்படுகின்றனர். அடுத்த சுற்றுக்கு மற்றவர்கள் ஆயத்தமாகின்றனர்.

படத்தின் இறுதி காட்சியில் 1993 ஆம் வருடம், போர் முடிந்த 48 ஆண்டுகளுக்கு பின் ஷிண்ட்லரின் கல்லறையில் சிறு கல்லை வைத்து யூத இன மக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். போலந்தில் வாழும் யூதர்களின் எண்ணிக்கை 4000, ஷிண்ட்லரால் காப்பாற்றப்பட்டு உலகெங்கும் வாழும் ஷிண்ட்லர் யூதர்களின் எண்ணிக்கை 6000 என்ற வாக்கியம் மெல்ல திரையில் தோன்றி மறைகிறது.



“In memory of the more than six million Jews murdered” என்ற வரிகளுடன் படம் நிறைவடைகிறது.

2. The Pianist (2002)

Director: Roman Polanski

Awards: Palma d’Or at Cannes, 2 Academy awards

ஒரு இசைக் கலைஞன் மேல் போர் தன்னுடைய குரூரமான கைகளை விரிப்பதை சித்தரிக்கும் படம் இது. ஸ்பில்மான் என்னும் பியானோ இசை நிபுணர், போலாந்து நாட்டில் உள்ள வானொலியில் பணி புரிகிறார். அந்த சமயம் ஜெர்மன்யின் தாக்குதல் தொடங்குகிறது. பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஜெர்மனி எதிர்க்க போகிறது என்னும் செய்தி கேட்டு அவர்கள் மனம் சற்று சமாதானம் அடைகிறது. மிக விரைவில் இந்த போர் நின்று விடும் என்று.



மனித கனவுகளை விட அவனது குரூரம் வலிமையாக போர் தீவிரமடைகிறது. ஜெர்மன் போலாந்தை ஆக்ரமித்தப் பின் யூதர்கள் மீது அவர்கள் காழ்ப்புணர்ச்சி திரும்புகிறது. ஸ்பில்மானும் அவரது குடும்பத்தினரும் கெட்டோ என்னும் வதை முகாமிற்கு அழைத்து செல்ல படுகின்றனர். ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட் திரைப்படம் நம்மை ஒரு பார்வையாளனாய் உணர செய்வதென்றால், பியானிஸ்ட் நம்மை அந்த கலைஞனோடு சேர்ந்து பதற்றம் கொள்ள செய்கிறது.

படம் முழுக்க ஒரு இசை கலைஞன் பார்வையில் நகர்வதினாலோ என்னவோ, அதிர்வுகள் மிக மென்மையாகவே உருவாக்கப் பட்டுள்ளது. முகாமிற்கு செல்லும் ஸ்பில்மான் அவரது குடும்பதினரிடம் இருந்து பிரிக்க படுகிறார். அவரை கொலை செல்ல அழைத்து செல்லப்படுகையில், வானொலியில் அவருடன் பணி புரிந்த யூதர் அல்லாத ஒருவரால் காப்பாற்றப்பட்டு ஒரு தனி வீட்டில் தங்க வைக்கப்படுகிறார்.



அங்கே தங்க முடியாத நிலை ஏற்பட்ட உடன், இடிந்த கட்டடங்களில் வசிக்க துவங்குகிறார். அங்கே போதிய உணவு இல்லாமல் சோகையுற்று மஞ்சள் காமாலையால் பாதிக்கப் படுகிறார். இதனூடே வதை முகாம்களில் மனித வேட்டை எந்த மனிதமும் இல்லாமல் நடை பெறுகிறது. இடிந்த வீடுகளை பார்வையிடும் ஒரு ஜெர்மன் அதிகாரி ஸ்பில்மானை கண்டுபிடிக்கிறார். இவர் ஒரு பியானிஸ்ட் என தெரிந்த பின், இவரை வாசிக்க பணிக்கிறான். பியானோவை தொட்டே ஒரு வருடம் ஆன நிலையில், அதை மீண்டும் தொட்ட பரவசத்தில் ஒரு இசைக் கோர்வையாய் வாசிக்கிறார். இந்த இடத்தில் ஆட்ரியான் ப்ரோடியின் நடிப்பு அற்புதமானது.



அதன் பின் அந்த ஜெர்மன் அதிகாரி, அவரை காப்பாற்றி தினம் உணவு தருகிறான். அதற்குள் ரஷ்ய படை அங்கே வர ஜெர்மன் அதிகாரிகள் சிறைபடுகின்றனர். ஸ்பில்மான் சோர்வுற்று பிணங்கள் சிதறி கிடக்கும் தெரு வழியாக தன் வீடு நோக்கி செல்கிறார். அவரை காப்பாற்றிய அந்த ஜெர்மன் அதிகாரி, ரஷ்ய படைகளால் பிடித்து செல்லப் பட, அவர் ஸ்பில்மானுக்கு தெரிந்த ஒருவர் மூலம் அவருக்கு செய்தி அனுப்புகிறார். ஆனால் ஸ்பில்மான் வருவதற்குள் அவர்கள் வேறு இடம் மாற்றப்படுகின்றனர்.

ஸ்பில்மான் அதன் பின் தன் அனுபவங்களை புத்தகமாய் எழுதி 2000 ஆம் ஆண்டு இறந்து போனார் என்னும் செய்தி திரையின் ஊடே நகர்கிறது. அவரை காப்பாற்றிய அந்த ஜெர்மன் அதிகாரி ரஷ்ய வதை முகாமில் 1952 ஆம் ஆண்டே கொல்லப்பட்டார் என்னும் செய்தியோடு.

மிகுந்த உக்கிரம் மிகுந்த ஜப்பான் தீவான இவோ ஜிமாவில் நடந்த போர், ஹிட்லரின் இறுதி நாட்கள், ஹிட்லருக்கு எதிராக நடந்த புரட்சிகள் ஆகியவை பின் வரும் பதிவுகளில்

தொடரும்….

இந்த வரிசையின் முந்தைய பதிவுகள் 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |13 | 14 |

No comments:

Post a Comment